புதன், 10 ஜூன், 2026
*இயக்குனர் இமயத்திற்கு இறுதி அஞ்சலி..,*இங்கிலாந்திலிருந்து சங்கர் ⚫️
*இயக்குனர் இமயத்திற்கு இறுதி அஞ்சலி..,*
கிராமிய வாழ்வியலை அச்சு அசலாகப் படமாக்கி, பல்வேறு விதமான கதை களங்களையும் திறம்படக் கையாண்டு வெற்றி பெற்று, காலங்கள் கடந்து வாழும் திரைக்காவியங்களை உருவாக்கிய அந்த இமயம் சரிந்தது.
ஒரு பெரிய முரட்டு மனிதனையும், காதல் எவ்வாறெல்லாம் பக்குவப்படுத்தி,
அவனுடைய வாழ்வையே மாற்றியமைக்கிறது என்பதை (கடலோரக் கவிதைகள்) மென்மையாக காட்டிய மேதை..,
ஒரு வயதானவர் மனதினுள் புதைந்து கிடக்கும் உண்மையான அன்பு மற்றும் வாழ்க்கை ரசனைகள் குறித்த ஏக்கம்,
அதை முழுமையாகப் புரிந்து கொண்டு அவரை மனதார நேசித்து, ஆறுதலளிக்கும் பெண்ணுடனான புரிந்துணர்வு மிக்க காதலை (முதல் மரியாதை) துல்லியமாக சித்தரித்தவர்..,
மனிதநேயம், உண்மையான ஆன்மீக உணர்வு குறித்து, நறுக்குத் தெறித்தாற் போல (வேதம் புதிது) சுருக்கமாகவும், சுவையாகவும் தெரிவித்தவர்..,
மத அடையாளங்களைத் தகர்த்தெறியும் இறுதிக் காட்சியை வைத்து, காதல் மதங்களுக்கு அப்பாற்பட்டது என்ற கருத்தை, புதுமையான முறையில் (அலைகள் ஓய்வதில்லை) பழமைவாதக் காவலர்களுக்கு அதிர்ச்சி ஊட்டியவர்..,
போலி அரசியல்வாதிகளால், அப்பாவித் தொண்டர்களும், பெண்களும் பாதிக்கப்படுவதை (ஒரு கைதியின் டைரி, என் உயிர் தோழன்)
பட்டவர்த்தனமாக படம் பிடித்து காட்டியவர்..,
பாரதி கண்ட பெண்ணை நினைவூட்டும் வகையில், பெண்ணுரிமை, பெண் சுதந்திரம் (புதுமைப் பெண்) பற்றிய புரட்சிகர சிந்தனைகளை செல்லுலாய்டில் புகுத்தியவர்..,
அண்ணன்−தங்கை பாச படங்களில் ஒன்றாக கிராமத்துப் பாசமலராக (கிழக்குச் சீமையிலே) படைத்தவர்.
பெண்சிசுக்கொலை, பெண்ணின் சிறப்பு மற்றும் மென்மையான கிராமத்துக் காதலை (கருத்தம்மா) ஆழமான கருத்தாக்கத்துடன் காட்சிப்படுத்தியவர்..,
….., இப்படி பல படைப்புகளால் தமிழ்த்திரையுலகின் மறுமலர்ச்சிக்கு வழிவகுத்த அந்த இமயம் நம்மிடையே இல்லை. “என் இனிய தமிழ் மக்களே” - அந்த கரகர குரல் எங்கள் காதுகளில் ஒலிக்காது.
இங்கிலாந்திலிருந்து
சங்கர் ⚫️
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக