வியாழன், 11 ஜூன், 2026

புகழ்வணக்கம்

வெள்ளித் திரையில் வெண்பா எழுதியவனே.. உனது ஒவ்வொரு படைப்பும் வாசிக்கப்பட வேண்டிய காவியம்! நேசித்து நாங்கள் பாராட்டிய திரைக்கருவூலங்கள்! என் இனிய தமிழ் மக்களே என்று தொடங்கும் உன் திரைப்படம் வெறும் திரைகளில் ஓடிவெற்றி பெற்றதன்று! – அவை மனித மனங்களில் இன்றும் நிலைத்த பொக்கிஷங்கள்! தமிழ் சினிமாவிற்கு புதிய பாதை வகுத்தளித்தவனே! சீர்மிகு குரலால் சிந்தைகளைக் கொள்ளையடித்தவனே! யாருக்கு வரும் உந்தன் சிறப்புத் தோற்றமும் இயக்கமும்! அறிவுக் கண்ணை மட்டும் வைத்து நீ திரையளக்கவில்லை.. அன்பின் ஜுவாலையில் வடித்த பாத்திரங்கள் – மனக் கண்களைவிட்டு என்றும் நீங்குவதேயில்லை!! முதல் மரியாதை, வேதம் புதிது.. இவையெல்லாம் "உன் அடிமனதில் முளைத்த கற்பகவிருட்சங்கள்!" இயக்குனர் இமயம் என்று உன்னை அழைத்து மகிழ்ந்தோமே... இன்று அந்த இமயம் சரிந்தாலும் அதன் நிழலில் வளர்ந்த கலைவனங்கள் அழியாதே! 16 வயதினிலே முதல்.. உன் ராஜாங்கம் தமிழ்மண்ணில் பற்பல ஆண்டுகளாய்! "உன் உதவி இயக்குநர்கள் பலர் உச்சங்களைத் தொட்டுள்ளனர்!" குரங்கு பொம்மை முதலான படங்களில் உன் செறிவான நடிப்பும் உண்டு! கரிசல்காட்டு மண்ணின் வாசம் மாறாமல்.. நகரங்களுக்கும் சேர்த்து விருந்து வைத்தவன்! விண்ணிற்குச் சென்றாயோ விந்தைகள் புரிய! வணங்கி விடைதருகின்றோம் பாரதிராஜாவே! காவிரிமைந்தன் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்)

புகழ்வணக்கம்

திருமணம் ஆன, வயது மூத்த ஆண் ஒருவன் தன் மகள் வயது பெண்ணிடம் காதல் வசப்படுகிறான்" என்கிற ஒரு சப்ஜெக்டை சினிமாவாக்கினால் ஹிட் ஆகும் என்பதை நாற்பது, ஐம்பது வருடங்களுக்கு முன்னால் யாருமே நினைத்து பார்த்திருக்க முடியாது.. ஆனால் "முதல் மரியாதை" சினிமாவில் பாரதிராஜா ஹிட் ஆக்கினார்.. காதல் உடலை மட்டும் சார்ந்தது அல்ல.. மனதையே அதிகம் சார்ந்தது என்பது நாம் அறிந்தது தான்.. அதற்காக ஒரு அப்பா வயதுள்ள ஒரு ஆணுக்கும் மகள் வயதுள்ள ஒரு பெண்ணுக்குமான காதலை நடைமுறை படுத்தினால் சமூகம் ஒத்து கொள்ளுமா?.. அதையும் ஒத்துக்கொள்ள வைத்தார் பாரதிராஜா... படம் வெளியாகி 40 வருடங்கள் ஆனாலும் இன்னமும் நம் நினைவில் நின்று கொண்டிருப்பவர் படத்தில் 'மலைச்சாமி" யாக நடித்த சிவாஜி.. அந்த ஊருக்கு பிழைப்பு நடத்த வரும் குயிலுவை (ராதா) முதன்முதலாக மலைச்சாமி பார்க்கும்போது, அவர் பார்த்தது ஒரு பெண்ணை மட்டுமல்ல. தன்னுள் பல வருடங்களாக உறங்கிக் கிடந்த உணர்வுகளின் எழுச்சியையே மீண்டும் பார்க்கிறார்.. மனிதனுக்கு வயது முதிர்வது என்னவோ அவன் உடலுக்குத்தான். மனதுக்கல்ல என்பதற்கு மலைச்சாமியும் விதிவிலக்கல்ல.. அவளுடன் இருக்கும் பொழுதுகளிலெல்லாம் தான் இளமையாக இருப்பதாகவே உணர்கிறார் மலைச்சாமி.. தான் இளமையானவன் என்பதை நிரூபிக்க அங்கிருக்கும் பெரிய கல்லை தூக்க முயற்சி செய்வதாகட்டும், குயிலுடன் நின்று மீன் பிடித்து விளையாடுவதாகட்டும், அவளுடன் போட்டோ எடுத்து, அவளை சந்தோஷப்படுத்துவது ஆகட்டும், அவள் வைத்த மீன்குழம்பை வெட்கத்தை விட்டு கேட்டு கண்ணிலும் நாக்கிலும் நீர் வர தன் தாயை நினைத்தே சாப்பிடும் காட்சியாகட்டும், இப்படி ரம்யமாக காட்சிகளை வடிவமைத்திருப்பார் பாரதிராஜா... நம் நடைமுறை திருமண வாழ்க்கையில் கூட சந்தோஷத்தையே கண்டிராத எத்தனையோ பேருக்கு மீண்டுமாய் இன்னொரு காதலில் விழும் சந்தர்ப்பங்கள் இப்படி காலப்போக்கில் வாய்க்கத்தான் செய்கின்றன.. சமூகத்தால் புரிந்து கொள்ள முடியாத இப்படிபட்ட காதலை நேர்த்தியாக கைகொள்வது என்பது எல்லோருக்கும் அத்தனை எளிதான காரியம் அல்ல.. அன்பு குறையும் இடங்களில் வெற்றிடங்கள் உருவாகின்றன. அந்த வெற்றிடங்களை நிரப்பத்தான் சில நேரங்களில் எதிர்பாராத உறவுகள் நம் வாழ்க்கைக்குள் நுழைகின்றன. மலைச்சாமிக்கும் குயிலுவுக்கும் இடையேயான உறவு அப்படிப்பட்ட ஒன்று தான். அது சமூக விதிகளை மீறிய காதலாகத் தோன்றலாம். ஆனால் பாரதிராஜா அதை ஆசையின் மொழியில் சொல்லவில்லை. ஆறுதலின் மொழியில் சொன்னார். உடலின் மொழியில் சொல்லவில்லை. மனதின் மொழியில் சொன்னார். அதனால்தான் அந்த உறவு நம்மை நெருட வைக்க வில்லை... நெகிழ வைத்தது. படம் வெளியாகி இத்தனை ஆண்டுகளாக விட்டது என்றாலும் கூட இன்னமும் "மலைச்சாமி" நம் மனதில் வாழ்கிறார். அது ஒரு கதாபாத்திரம் அல்ல. அன்புக்காக ஏங்கிய நம்மை போன்ற எத்தனையோ மனிதர்களின் பிரதிநிதித்துவம் அது.. இப்படி பட்ட காதலை, காதலர்களை, எந்தத் தீர்ப்பும் இன்றி, எந்தக் குற்ற உணர்வும் இன்றி, மனிதாபிமானத்தோடு புரிந்து கொண்ட படைப்பாளி தான் பாரதிராஜா... அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள். ::: ரெக்சன்..❤️

புகழ்வணக்கம்

இயக்குனர் இமயம் ஓவியம் இனிநண்பர் இராதா கை வண்ணம்.

புகழ்வணக்கம்

விண்ணில் படம்இயக்க விழைந்தவர் வையத்தில் விண்மீனை உருவாக்கி வானத்து விண்மீனைத் தோற்கடித்தாய் கருத்தம்மா மாயத்தேவர் தோட்டத்தில் குருத்தாய் வளர்ந்த குருக்கத்தி அல்லி நகர்தனில் அவதாரம் அடையாற்றுக் கரையில் அரிதாரம் பதினாறு வயதுப் படத்தாலே பாரில் ஒளிர்ந்தாய் சூரியனாய் பரட்டை சப்பானி இருவருமே கட்டிய பாத்தியின் வித்துக்கள் இனிய தமிழ்மக்கள் என்றுதான் கனிவாய் திறந்தால் கைதட்டல் ஐயர் ஆத்துகதை நீக்கி அருக்காணி கதையைக் காட்டினையே தாமரைத் திருவை அரசாங்கம் தானாய் உனக்கு வழங்கியது விருதுகள் வழங்கிக் குவித்தார்கள் விழுதுகள் விட்டு விரிந்தாயே கன்றை இழந்த காராம்பசுவே இன்று அடைந்தாய் பாற்கடலை மக்கள் கொட்டிய கண்ணீரால் சென்னை வீதியில் பெருவெள்ளம் காம தேனுவின் பால்சுவைக்க கற்பக நிழலை அடைந்தாயோ இயக்குநர் இமயம் ஆனவரே இந்திரனை இயக்கச் சென்றாயோ உன்னால் உருவான திரையுலகம் கரும்பின் சக்கையாய் போனதே முதல்மரி யாதைப்படம் எடுத்தாயே இறுதி மரியாதை செய்கின்றோம் சின்னசாமி ஆக ஆனவரே பெரியசாமி ஆகப் போனவரே சந்திர லீலா தனித்லைவா இங்கே இருந்து ஏன்சென்றாய் தொல்காப்பியச்செம்மல் புலவர் ஆ.காளியப்பன் 9788552993.

புகழ்வணக்கம்

பொழிலன் கல்லூரிக் காலங்களில் பாரதியரசு என்று தென்மொழி வழி நாங்கள் அழைத்த பாரதிராசா பெருமளவில் எம்மையும் ஈர்த்திருந்தார்.. இளையஅரசு என்கிற இளையராசாவோடு அவர் இணைந்து உருவாக்கியப் படங்களில் எல்லாவற்றையும் முதல் நாளிலேயே பார்த்து விடுகிற ஈர்ப்பு அப்போது இருந்தது.. தமிழ்நாட்டின் சிற்றூர்ப் புறங்களை நம் கண்ணிற்கும் நெஞ்சத்திற்கும் படைத்துக் காட்டிய மிகப்பெரும் படைப்பாளி.. சாதிப் பிடிமானங்களுக்கு ஆங்காங்கே கொட்டு வைக்கிற உரையாடல்கள், அவரவர் அப்பன் தொழிலை மட்டும்தான் செய்ய வேண்டும் என்று சொன்னால் பாரதியார் கோயிலில் மணி ஆட்டிக் கொண்டுதான் இருக்க வேண்டும் என்பது போன்று பல உரையாடல்கள் பார்ப்பனியத்தின் இறுக்கங்களைச் சாடியது, மூடநம்பிக்கைகளைப் பல இடங்களில் தோலுரித்துக் காட்டியது, பெரும்பாலான படைப்பாளர்களின் பெயர்களைத் தூய தமிழிலேயே கையாண்டது.. .. போன்று பல வகையில் ஈர்த்திருந்தார்.. பாலச்சந்தரிடம் இருந்த பிராமண நெடியைக் கண்டு அவரின் படைப்புகளை வெறுத்திருந்த உள்ளங்களுக்கு, பாரதி அரசுவின் 'என் இனிய தமிழ் மக்களே..' என்ற அழைப்பு நெஞ்சத்தில் குளிர்மை தந்தது.. ==== நான் சிறையில் இருந்த சூழலில்.. 2009 இல் தமிழ் அறிஞர்கள் ஆர்வலர்கள் எல்லாம் ஒரு போராட்டத்தில் போராடிச் சென்னைச் சிறைக்குள் வந்திருந்தனர்.. வந்தவர்களுள் பாரதியரசு(ராஜா)வும் இருந்தார் என்பது எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியாக இருந்தது.. பொதுப் பிரிவில் இருந்த அவரையும் புலவர் இறைக்குருவனார், ஐயா கி.த. பச்சையப்பனார் , வீர சந்தனம், ஓவியர் மருது உள்ளிட்ட பலரையும் நாங்கள் இருந்த உயர் பாதுகாப்புப் பகுதிக்கு அழைத்து வந்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.. நிறைய பேசியதால் மகிழ்ச்சியை அவரால் அடக்கிக் கொள்ள முடியவில்லை.. நான் எழுதிக் கொண்டிருந்த குறிப்புகளையும் பாவலரேறு ஐயா பெருஞ்சித்திரனார் அவர்களின் பேருழைப்பையும் விளக்கமாகக் கூறினேன்.. மகிழ்ச்சியின் உச்சத்திற்குச் சென்றவர் ஏதாவது, ஒரு நூலை உங்கள் கையெழுத்திட்டுக் கொடுங்கள், பொதுவாக நான்தான் அனைவருக்கும் கையெழுத்துப் போட்டுக் கொடுப்பேன், ஆனால் நீங்கள் எல்லாம் கையெழுத்துப் போட வேண்டியவர்களாக நான் உணர்கிறேன் - என்று சொல்லிக் கட்டாயப்படுத்திக் கையெழுத்து வாங்கி ஒரு நூலை பெற்றுச் சென்றார்.. அவரின் கலை உணர்ச்சியின் மீது இருந்த பேரன்பும், அவர் ஈடுபாட்டில் இருந்த அன்பு உள்ளத்தையும் கண்டு பெரு மகிழ்ச்சி கொண்டேன்.. எதையும் மறைத்துப் பேச தெரியாத வெள்ளை உள்ளத்தினர்.. அன்பு ஊற்று.. தமிழ் தோய்ந்த பெரும் கலைஞர்.. அவரின் இழப்பு தமிழ்க் கலை உலகிற்குப் பேரிழப்பு.. தமிழ்தோய்ந்த கலை இலக்கிய இயக்குநரே உங்களுக்கு வீரவணக்கம்..! வாழ்க உங்கள் புகழ்!

புகழ்வணக்கம்

திலீபன் 1நா · ஜாதி இல்லை ஜாதி இல்லனு சொல்ற நீங்களே மூச்சுக்கு முந்நூறு தடவ பாலுத்தேவர் பாலுத்தேவர்னு சொல்றீங்களே பாலுன்றது உங்க பேரு தேவர்ன்றது என்ன நீங்க படிச்சி வாங்குன பட்டமா?வேதம் புதிது படத்தில் இப்படி ஒரு வசனம் வெச்சி அந்த சத்யராஜ் கதாபாத்திரத்த கன்னத்துல அறையுற மாதிரி காட்சி வச்ச ஒரு விஷயத்துக்காகவே பாரதிராஜாவ எனக்கு ரொம்ப பிடிக்கும்.அமைதியாக ஓய்வெடுங்கள் அய்யா

புகழ்வணக்கம்

சொந்த மண்ணில் சாய்கிறது இயக்குநர் இமயம்! தேனி வத்தலக்குண்டு பண்ணையில் பாரதிராஜா உடல் இன்று அடக்கம்! பாரதிராஜா தனது 84-வது வயதில் கா*லமானதைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த திரையுலகமும் தமிழகமும் சோகத்தில் மூழ்கியுள்ளது. சென்னை நீலாங்கரையில் அரசியல் மற்றும் திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தியதையடுத்து, அவரது உடல் இறுதிச் ச*டங்கிற்காகத் தேனி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்தப் பண்ணை வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அங்கு பொதுமக்கள் பாரதிராஜாவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். தமிழ் சினிமாவின் கிராமத்து மண்வாசனையையும், யதார்த்த மனிதர்களின் வாழ்வியலையும் உலகத் தியேட்டர்களுக்கு கொண்டு சேர்த்த "இயக்குநர் இமயம்" பாரதிராஜா, தனது 84வது வயதில் கா*லமானார் என்ற செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தேனிக்கு கொண்டு செல்லப்பட்ட உடல் 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், முதல் மரியாதை என காலத்தால் அழியாத காவியங்களைப் படைத்த இமயத்தின் மறைவு, தமிழ் சினிமா வரலாற்றின் ஒரு பொன்னான அத்தியாயத்தின் முடிவாகப் பார்க்கப்படுகிறது. அவரது ம*றைவுக்குப் பிறகு தற்போது வெளியாகியுள்ள ஒரு உருக்கமான தகவல், திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி, கண்கலங்க வைத்துள்ளது. பாரதிராஜாவின் ம*றைவுச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த தமிழகமும் தேனியை நோக்கித் தன் பார்வையை திருப்பியுள்ளது. சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த பாரதிராஜாவின் உடலுக்கு, தமிழக முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். பாரதிராஜா உடல் இன்று அடக்கம் மேலும் பாரதிராஜாவோடு சினிமாவில் சரித்திரம் படைத்த இசைஞானி இளையராஜா, கங்கை அமரன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், மூத்த நடிகர் சிவக்குமார், சூர்யா, இயக்குநர் பாக்யராஜ், மாரி செல்வராஜ் மற்றும் கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட அரசியல், திரையுலகப் பிரபலங்கள் பலரும் கண்ணீர் மல்க தங்களது இறுதி அஞ்சலியைச் செலுத்தினர். இயக்குநர் இமயத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக, நாளை ஒருநாள் மட்டும் அனைத்து தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாகத் தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது. வத்தலகுண்டு பண்ணை சென்னை நீலாங்கரை இல்லத்தில் நேற்று இரவு 9 மணி வரை பொதுமக்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடல், பிறகு அவரது சொந்த மாவட்டமான தேனிக்கு நள்ளிரவில் எடுத்துச் செல்லப்பட்டது. தற்போது, வத்தலக்குண்டு அருகே கொடைக்கானல் செல்லும் வழியில் உள்ள காட்ரோட் பகுதியில் அமைந்திருக்கும் அவரது சொந்தப் பண்ணை வீட்டில் பாரதிராஜாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு சுற்றியுள்ள கிராம மக்கள் திரண்டு வந்து தங்களின் மண்ணின் மைந்தனுக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.. சொந்த மண்ணில் நிரந்தர ஓய்வு இந்தச் சூழ்நிலையில்தான், பாரதிராஜாவின் ம*றைவுக்குப் பின்னால் இருக்கும் அந்த உருக்கமான கடைசி ஆசை குறித்த தகவல் வெளிவந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு மலேசியாவில் உள்ள தனது மகள் ஜனனியின் வீட்டில் பாரதிராஜா தங்கியிருந்தபோது, தனது இறுதிப் பயணம் குறித்து மிகவும் எதார்த்தமாகவும் உருக்கமாகவும் பேசினாராம். "நான் இறந்துவிட்டால், என் உடலை சென்னையில் வைக்கக் கூடாது, வத்தலகுண்டுவில் உள்ள என் தோட்டத்தில் தான் அடக்கம் செய்ய வேண்டும்" என்று தனது மகளிடம் உருக்கமாகத் தனது கடைசி ஆசையைத் தெரிவித்துள்ளார். நகரத்தின் ஆடம்பரங்களை விட, தனக்கு முகவரியும் வாழ்வும் கொடுத்த கிராமத்து மண்ணையே தனது இறுதி ஓய்விடமாக அவர் தேர்ந்தெடுத்துள்ளார் என்பது அவரது மண் பற்றைக் காட்டுகிறது. உறுதிசெய்த வைரமுத்து பாரதிராஜாவின் உடல் அடக்கம் குறித்து கவிஞர் வைரமுத்து சொல்லும்போது, "பாரதிராஜாவின் உடல் அடக்கம் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் வத்தலக்குண்டு காட்ரோடு அருகேயுள்ள அவரது பண்ணை வீட்டில் இன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெறும் என்று பாரதிராஜாவின். குடும்பத்தார் சார்பில் நான் தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல பாரதிராஜாவின் உடல் அடக்கம் அரசு மரியாதையுடன் நடக்கும் என்று அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி" என்றார். இதையடுத்து பாரதிராஜாவின் கடைசி ஆசையை நிறைவேற்றும் பொருட்டே, அவரது குடும்பத்தினர் உடலை வத்தலகுண்டு தோட்டத்திற்குத் கொண்டு வந்துள்ளனர். இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இறுதிச் ச*டங்குகள் மற்றும் உடல் அடக்கம், இன்று பிற்பகல் 3 மணிக்கு மேல் வத்தலகுண்டு காட்ரோட் பண்ணை வீட்டில் முழு அரசு மரியாதையுடன் நடைபெறவுள்ளது. தமிழ் சினிமாவின் ஒரு சகாப்தம், தான் நேசித்த அதே கிராமத்து மண்ணின் மடியில் இன்றுடன் நிரந்தரமாக ஓய்வெடுக்கப் போகிறது..

புகழ்வணக்கம்

இயக்குனர் இமயம் அருந்திறல் தமிழர் ஐயா பாரதிராஜா மறைந்தார். தமிழ்க் கலை உலகின் தனிப்பெரும் ஆளுமையாய் விளங்கயவர். படித்த, நகரத்தன்மையான கதைகள், புராண இதிகாச கதைகள், மேற்குலக கதைகளின் தாக்கத்தில் உருவான கதைகள் என மூழ்கி இருந்த தமிழ்த்திரையுலகை சாமானிய- தமிழர்களின் வாழ்வியலை கதை மாந்தர்களாக, கதை களனாக மாற்றிய மாபெரும் ஆளுமை அவர். 'என் இனிய தமிழ் மக்களே!' எனும் அவரது கரகரத்த குரல் தமிழ் மக்கள் மீதான பேரன்பில் அவரிடமிருந்து ஒவ்வொரு படைப்பின் போதும் நம்மை அரவணைக்கும். கிராமப்புற கதைகள் மட்டுமல்லாமல், நவீன, நகரமயமான கட்டமைப்புகளுக்குள் நிலவும் முரண்களையும் அவர் படைப்புகள் பேசின. அவர் அனைத்துவிதமான கதைகளையும் கையாளும் தனித்திறமை கொண்ட படைப்பாளியாக மிளிர்ந்தார். அவரைப் பின்பற்றி அவரது மொழிநடையில் தமிழ்நாட்டின் பன்முகத்தன்மையான பண்பாட்டு அடுக்குகளை தமது படைப்புகளில் அவரது வழியில் பலர் வெளிக்கொணர்ந்தார்கள். கிராமப்புற, பண்ணையார் காலத்து பிற்போக்கு சடங்குகள், நம்பிக்கைகள், அடக்குமுறைகள் மீது அவரது கதாபாத்திரங்கள் தாக்குதலை நடத்தின. மக்களின் சிந்தனையில் மதம், சாதி குறித்த பிடிப்புகள் மீது அவர் கடுமையான விமர்சனங்களை தமது படைப்பின் மூலமாக வெளிப்படுத்தினார். பலர் தொடத்தயங்கிய கதைக்களங்களையும், கதை மாந்தர்களையும் படைத்து வெற்றிகரமான படைப்புகளை உருவாக்கினார். திரையுலகிற்கு வெளியே, தமிழர்களுக்கான தனித்துவமான சங்கங்களை உருவாக்க பெருமுயற்சி எடுத்தார். காவிரியில் தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட பலவேறு புரட்சிகர போராட்டங்கள் அவரால் முன்னெடுக்கப்பட்டன. தமிழ்த் திரையுலக கலைஞர்களை தமிழினப் போராட்டங்களுக்கு அழைத்து வந்த பெருமை அவருக்குண்டு. தமிழீ*ழ விடுதலைப் போராட்டத்திற்கும், புலிகளுக்கும் வெளிப்படையான ஆதரவை வழங்கியவர். 2009 இனப்படுகொ**லை போரின் பொழுது தனக்களிக்கப்பட்ட இந்திய அரசின் உயரிய விருதான 'பத்மஸ்ரீ' விருதினை திருப்பியளித்தவர். இலங்கையோடு கைகோர்த்து போரை நடத்திய இந்திய அரசிற்கு ஐயா.பாரதிராஜாவின் போர்க்குரல் கடும் நெருக்கடியை கொடுத்தது. போர் குறித்த செய்திகளை தணிக்கை செய்த இந்திய அரசின் சதிகளை இவரது அறிவிப்பு அம்பலப்படுத்தியது. தமிழ்த் திரையுலகின் இயக்குனர்கள், ஆளுமைகள், நடிகர்கள் ஆகியோரை அழைத்துக்கொண்டு இராமேஸ்வரத்தில் அவர் தலைமையில் நடந்த கண்டனப்போராட்டம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. அன்றய காங்கிரஸ் அரசின் தலைமையாக இருந்த சோனியா காந்தி அம்மையார் தமிழ்நாட்டிற்கு வருகை தந்த போது அவருக்குக் கருப்புகொடி காட்டினார். இதனால் அவர் முன்னனி இயக்குனர்களோடு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தமிழ் இனப்படுகொ**லைக்கு துணை நின்ற காங்கிரஸ் கட்சியை கடுமையாக அவர் எதிர்த்த காரணத்தினால் அவரது அலுவலகம் காங்கிரஸ் குண்டர்களால் கடுமையாக தாக்கி சேதப்படுத்தப்பட்டது. 2009 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்பதற்காக அக்கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் எதிர்ப்பரப்புரையை மேற்கொண்டார். பல இடங்களில் காங்கிரஸ் தோல்வியை எதிர்கொண்டதற்கு அவரது போராட்டம் மிகமுக்கிய காரணியாக அமைந்தது. 2011ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியால் திணிக்கப்பட்ட ராஜீவ்கொலையில் குற்றசட்டப்பட்ட அப்பாவி 3 தமிழர்களுக்கு நிறைவேற்றப்பட இருந்த தூக்குத் தண்டனையை ரத்து செய்ய குரல்கொடுத்தார். 2011ல் முல்லைப்பெரியாறு அணை உரிமையை பாதுகாக்க மே17 இயக்கம் சென்னையில் நடத்திய பேரணியில் பங்கெடுத்தார். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அலைகடலென திரண்டு நின்ற அப்பேரணி, முழக்கப்போராட்டத்தை முன்னின்று நடத்தினார். ஐயா வைகோ, தோழர் வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்கள், ஓவியர் வீரசந்தானம் போன்ற கலைஞர்களோடு அவரும் அப்பேரணியில் எழுச்சியுரையை பதிவு செய்தார். 2017ம் ஆண்டில் ஈழத்தமிழர் படுகொ**லைக்கு நினைவேந்தல் நடத்தியதற்காக குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட மே17 ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட தோழர்கள் விடுதலைக்காக துணிந்து குரல் கொடுத்தவர் ஐயா பாரதிராஜா. தனது இறுதிக்காலம் முழுவதும் தமிழ் கலையுலகிற்காகவும், தமிழின உரிமைக்காகவும் அயராது குரல் எழுப்பியவர் இயக்குனர் இமையம் ஐயா பாரதிராஜா. தமிழினத்தின் உயர்விற்கு பங்களித்த அவரது வாழ்வை போற்றும் விதமாக 2026 மார்ச் மாதத்தில் மே17 இயக்கம், வாழ்நாள் சாதனையாளர் விருதான 'அருந்திறல் தமிழர்' பட்டத்தை வழங்கி பெருமை கொண்டது. தமிழினத்தின் அழகியலை தனது திரைக்காவியங்கள் வழியே படைத்து, தமிழினத்தின் உரிமைக்காக அயராது போராடி ஒடுக்குமுறை எதிர்கொண்ட மாபெரும் கலைஞன், தமிழினத்தின் ஒப்பற்ற படைப்பாளி ஐயா பாரதிராஜா அவர்களுக்கு எமது இறுதி மரியாதையையும், வீரவணக்கத்தையும் செலுத்துகிறோம். தோழர் திருமுருகன் காந்தி ஒருங்கிணைப்பாளர் மே பதினேழு இயக்கம் 10-06-26

புகழ்வணக்கம்

பாரதிராஜாவின் திரைப்படங்களில்.... முதல் மரியாதை தனித்துவமானது... மிகவும் இறுக்கமான காட்சிகளாலானது... பாடல்களோ, அனைத்திலிருந்தும் நம்மை விடுவிக்கும் தன்மையோடிருக்கும்.... துள்ளலும் இருக்கும்... தாலாட்டும் இருக்கும்... கவித்துவமுமிருக்கும்! படத்தின் காட்சிகளோடு பொருந்தி, காட்சிகளின் உணர்வை வெளிப்படுத்துவதாக இருக்கும்... 1985ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று வெளியான அப்படத்தின் பாடல் கேசட்டுகள் விற்பனையில் சக்கைப்போடு போட்டது! எங்கப்பா அந்த படத்தின் கேசட்டை வாங்கி வந்தது இப்பவும் நினைவில் இருக்கிறது. கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதியிருப்பார்... ஒவ்வொரு பாடலுக்கு முன்பும் கவித்துவமான விளக்கத்துடன் பாடல் கேசட் வந்திருந்தது. படத்தின் வசனகர்த்தா ஆர்.செல்வராஜின் வட்டார வழக்கு சார்ந்த வசனங்கள் அப்படத்துக்கு கூடுதல் சிறப்பு! இதனாலேயே இப்படத்துக்கு சிறந்த வட்டாரத் திரைப்படத்துக்கான தேசிய விருது கிடைத்தது! நிறைய அதிர்வான... அடர்த்தியான காட்சிகள் நிறைந்த திரைப்படம்.... குடும்பத் தலைவனாக இருக்கக்கூடிய... வயதில் மூத்த சிவாஜி, தனது மகள் வயதையொத்த குயிலி என்ற பெண்ணின் மீது காதல் கொள்வது... அது ஊராருக்கு தெரிந்து பஞ்சாயத்தாவது... பஞ்சாயத்தில், அதுநாள் வரை தன்னைப் பார்த்தால் பம்மக்கூடியவர்களெல்லாம் சிவாஜியை நோக்கி கேள்விகளால் துளைக்க, "ஆமா... நா அவள வச்சிருக்கேன்" என்று அவர் சொல்வது... பின்னர் குயிலியைச் சந்திக்கும்போது... "அவசரப்பட்டு சொல்லிப்புட்டேன்... மனசறிஞ்சு சொல்லல... அத நீ ஒண்ணும் தப்பா எடுத்துக்காத!" என்று அவளை தேற்றுவதுபோல் சொல்வார். அதற்கு அவள், "ஓம்மனசுல அப்டி இல்ல?" என்று விசாரிக்க, அவர் கோபத்தில் அவளை அறைந்துவிட்டு, "ஒன்ன பச்சப்புள்ளையா நெனச்சு பழகுனது தப்பாப்போச்சு... ஊர் நெனச்ச மாதிரியே நீயும் நெனச்சுட்டியே!" என்று கூற... அப்படியும் அவள் விடாமல், "நெஞ்சுக்குள்ள கைய வச்சு சொல்லு... ஒம்மனசுல நா இல்ல?" என்று திரும்பவும் கேட்க... மனதிலிருப்பதை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் சிவாஜி அங்கிருந்து நகரும் காட்சியில் அவரது நடிப்பு அற்புதம்! அக்காட்சிக்குப் பின்னர்... சோகமாக "நான் தானே அந்த குயில்?" என்று சோகமான வரிகள் வந்துசெல்லும்! நடிகர் சிவாஜியின் 254வது திரைப்படமான முதல் மரியாதையில், படம் முழுக்க மேக்கப்பே இல்லாமல் அந்த கேரக்டராக வாழ்ந்திருப்பார். தன்னை மேக்கப் போடவிடாமல் பாரதிராஜா இயல்பாக நடிக்கவைத்தது குறித்து சிவாஜியே சொல்லியிருக்கிறார். ஊர் பெரிய மனுஷனான சிவாஜிக்கு ராதா மீது ஏற்பட்ட ஈர்ப்பு... தவறாகப் பார்க்கப்படும் சூழலில், சிவாஜி - வடிவுக்கரசி திருமணத்துக்கான நிர்ப்பந்தம், 20 ஆண்டுகளாகத் தன் மனதுக்குள் ஓர் உண்மையை வெளிச்சொல்லாமல் அடைத்துவைத்து வாழ்ந்த சிவாஜியின் மனதை, துயரை உணர்ந்து, சிவாஜியிடம் அருணா மன்னிப்பு கேட்கும் காட்சி உணர்வுப்பூர்வமானதாக இருக்கும். அக்காட்சியில் சிவாஜியின் முகத்திலிருக்கும் சதைகளிலும் உணர்வை வெளிப்படுத்தியிருப்பார். அதேபோல், சிவாஜியின்மீது அனுதாபம் ஏற்படுவதற்கு, வடிவுக்கரசியின் கோபம் தோய்ந்த நடிப்பும் முக்கியமான காரணமாக அமைந்தது. இப்படத்தில் சிவாஜியின் நடிப்புக்காக, சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதும், ஃபிலிம்பேர் விருதும் கிடைத்தன. சிறந்த நடிகைக்கான ஃபிலிம்பேர் விருது நடிகை ராதாவுக்கு கிடைத்தது! இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இயக்கத்தில், 16 வயதினிலே, அலைகள் ஓய்வதில்லை, கருத்தம்மா, வேதம் புதிது எனச் சமூக நோக்குடன் கூடிய கிராமியப் படங்கள் நிறைய வந்திருந்தாலும், கிராமத்து எதார்த்த மனிதர்களை வெளிப்படுத்திய விதத்தில் முதல் மரியாதைக்கு எப்போதும் முதல் மரியாதை உண்டு! பாரதிராஜா... தமிழ்த் திரையுலகின் பெருமிதம்! என்றென்றும் மனதில் வாழ்வார்! ❤ - வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

எம்ஜிஆர் முகத்துக்கு கடைசியாக மேக்கப் போட்டவன் நான்தான்! இயக்குநர் பாரதிராஜா உருக்கம்

எம்ஜிஆர் முகத்துக்கு கடைசியாக மேக்கப் போட்டவன் நான்தான்! இயக்குநர் பாரதிராஜா உருக்கம் ''நான் சினிமாவில் இயக்குநராவதற்கு முன் ஒரு தயாரிப்பாளர் அலுவலகத்தில் இருந்தேன். ஒருநாள் திபுதிபுவென பலர் அந்தத் தயாரிப்பு அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது, 'சின்னவர் வருகிறார்... சின்னவர் வருகிறார்...' என்று பயங்கர பரபரப்பு. அப்போது அலுவலக வளாகத்தில் படகுபோல ப்ளைமவுத் கார் வந்து நின்றது. காரிலிருந்து ஆயிரம் சூரியன் ஜொலிப்போடு குல்லா, கறுப்புக் கண்ணாடியுடன் மல்லிகைச் சிரிப்போடு எல்லோரையும் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டபடி எம்ஜி.ஆர் வந்திறங்கினார். ‘இவருக்கு யார் சந்திரன் என்று பேர் வைத்தது, சூரியன் என்றல்லவா பெயர் வைத்திருக்க வேண்டும்’ என்று நினைத்தபடி ஆச்சர்யம் அகலாமல் பார்த்துக்கொண்டு இருந்தேன். அருகில் வந்ததும் என் கைகள் தன்னிச்சையாக அவரைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டது. ரோஜா மலரின் வாசத்தோடு ராஜா மாதிரி எங்கள் அலுவலகத்துக்குள் வந்தார். பிற்காலத்தில் நான் அந்த ராஜகுமாரனின் பாசத்துக்கு ஆளாவேன் என்று கனவிலும் நினைத்தது இல்லை. அன்று அவரது அன்பில் வீழ்ந்த என்னையும் அவரையும் பின் 1987-ம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி வரையிலும் எந்தக் கொம்பனாலும் பிரிக்க இயலவில்லை. தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் இருந்த ப்ரிவ்யூ தியேட்டரில் என் 'அலைகள் ஓய்வதில்லை' படத்தை எம்.ஜி.ஆருக்குத் திரையிட்டுக் காட்டினேன். அப்போது எம்.ஜி.ஆர் முதல்வர். எனது படத்தை முழுமையாகப் பார்த்துவிட்டு என்ன விமர்சனம் சொல்லப் போகிறாரோ என்கிற பதைபதைப்போடு தியேட்டர் வாசலில் காத்திருந்தேன். படம் பார்த்துவிட்டு வெளியில் வந்தவர், நேராக என் அருகில் வந்து என் கைகளைப் பற்றிக் கொண்டார். "அஞ்சு, பத்து 'அண்ணா'க்கள் செய்ய வேண்டிய பகுத்தறிவுப் பிரசாரத்தை ஒரே படத்தில் சாதித்துக் காட்டிட்ட. என் படத்துல நான் சொல்லத் தயங்குற பல விஷயங்களை தைரியமாப் படமாக்கியிருக்க. பாராட்டுக்கள்" என்று சொல்லியபடி என்னை கட்டியணைத்துக் கொண்டார். ஒருமுறை எம்.ஜி.ஆர் தலைமையில் சென்னை விஜயசேஷ மஹாலில் நடந்த கல்யாணத்துக்கு என்னையும் அழைத்து இருந்தனர். எம்.ஜி.ஆர் என்னைப் பார்த்துவிட்டு உதவியாளர் மூலம் மேடைக்கு அழைத்தார். திடீரெனப் பேசவும் சொல்லிவிட்டார். “எங்கள் கிராமத்தில் இருக்கும் சினிமா கொட்டகையில் 'நாடோடி மன்னன்' திரைப்படத்தைப் பலமுறை பார்த்துப் பிரமித்தவன் நான். ஒருமுறை எம்.ஜி.ஆர் எங்கள் கிராமத்துக்கு வந்தார். எப்படியாவது அவரது சில்க் ஜிப்பாவைத் தொட்டுவிடவேண்டும் என்பது எங்களுக்குள் போட்டி, கடைசியாக நான் தொட்டுவிட்டேன்” என்று நான் பேசியபோது பச்சைக் குழந்தை மாதிரி எம்.ஜி.ஆர் சிரித்துக்கொண்டே இருந்தார். அதன்பிறகு அவருடைய கண்கள் கடைசியாகப் பார்த்த படம் 'வேதம் புதிது'. 'வேதம் புதிது' திரைப்படம் வெளிவந்துவிடக் கூடாது என்று சிலர் கச்சை கட்டிக்கொண்டு வேலை பார்த்தனர். என்னென்ன உள்ளடி வேலைகள் செய்யவேண்டுமோ, அனைத்தையும் செய்தனர். அப்போது ஜனாதிபதியாக இருந்த வெங்கட்ராமனிடம் போனில் பேசி, எனக்காக உரிமையுடன் சண்டை போட்டு அந்தப் படத்துக்கு சென்சார் சர்டிஃபிகேட் வாங்கிக் கொடுத்தவர் எம்.ஜி.ஆர். அடுத்து 'வேதம் புதிது' படத்தை அவருக்குத் திரையிட்டு காட்டியபோது தனது பக்கத்து இருக்கையில் என்னை அமரச் சொன்னார். ஒவ்வொரு காட்சியைப் பார்க்கும்போதும், என் கைகளை இறுகப் பற்றித் தன் உணர்வுகளை வெளிப்படுத்தினார். 'வேதம் புதிது' ரிலீஸாகும்போது எம்.ஜி.ஆர் உயிரோடு இல்லை. அந்தப் படம் திரையிட்டபோது டைட்டிலில் 'புரட்சித் தலைவர் கண்கள் கடைசியாகப் பார்த்த திரைப்படம்' என்று எழுதியிருந்தேன். அவர் டாக்டர் பட்டம் பெற்றபோது தமிழ் சினிமா உலகத்தையே ஒன்றுகூட்டி அவருக்காகப் பாராட்டுவிழா நடத்தியவன், அவரது இறுதி ஊர்வலத்தைப் படம்பிடித்து 'வேதம் புதிது' படத்தில் திரையிட்டுக் காட்டினேன். அப்போது இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் பேச்சுவார்த்தை இல்லை. நானே முன்னின்று வைரமுத்துவை தனியாக பேசவைத்தும் இளையராஜாவைப் பின்னணி இசைக்க வைத்தும் அவரையே பாடல் ஒன்றை எழுதிப் பாட வைத்தும் அந்தப் பாரத ரத்னாவுக்கு அஞ்சலி செலுத்தினேன். முன்னதாக 1987-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி அதிகாலை முதன்முதலாக ராமவரத்திலிருந்து, 'சின்னவர் இறந்துட்டார்' என்று எனக்கு போன் வருகிறது. என் மனம் நொறுங்கிப் போகிறது. கண்களின் கண்ணீர் வழிந்தோட காரை எடுத்துக்கொண்டு ராமவரம் நோக்கிப் பறந்தேன். ஜானகி அம்மையார், அவரது உறவினர்கள் தவிர வேறு யாருமே இல்லை. எப்போதும் என்னைப் பார்த்தவுடன் சிரிக்கும் உதடுகள் மூடியிருந்தன. என்னைப் பாசமாகத் தழுவிய கைகள் ஜில்லிட்டு இருந்தன. குல்லா போடாத, கண்ணாடி அணியாத எம்.ஜி.ஆர் கண்ணுறங்கிக் கொண்டு இருந்தார். அதன்பின் ஒவ்வொருவராக வரத்தொடங்கினர். எம்.ஜி.ஆர் உடலை மாடியில் இருந்து இறக்க வேண்டும். அவருக்கு ஜிப்பா அணிய முடியவில்லை, ஜிப்பாவின் பின்பக்கம் கிழித்து அணிவித்து தையல் போட்டேன். எத்தனையோ திரைப்படங்களில் அவருக்கு விதம்விதமான மேக்கப் போட்டு இருப்பார். கடைசி ஊர்வலத்துக்கான மேக்கப்பை எம்.ஜி.ஆர் முகத்துக்கு நான்தான் போட்டேன். குல்லா போட்டு, கண்ணாடி அணிவித்து கட்டிலில் படுக்க வைத்து கீழே இறக்கினேன். அடக்க முடியாத கண்ணீரோடு ராஜாஜி ஹாலுக்கு மக்கள் திலகத்தின் உயிரற்ற உடலைக் கொண்டு சென்றோம்''. நன்றி: விகடன் பொக்கிஷம்

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

இயக்குனர் பாரதி ராஜா. தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றி புரட்சி செய்தவர். என் மீது மாறாத அன்பு கொண்டவர். மகன் மனோஜின் எதிர்பாராத மரணத்தால் துவண்டு போனவர். அதன் காரணமாக உடல் நிலையில் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதி. சிறிது குணமானதும், அவரின் சூழ்நிலையை மாற்றுவதற்காக, மலேசியா கொண்டு செல்லப்பட்டார், என்று கேள்விப்பட்டேன். பின்பு, அவர் சென்னைக்கு கொண்டுவரப்பட்டார் என்று அறிந்து, அவரைப்பார்த்து விட பலவழிகளிலும் முயற்சி செய்தேன். முடியவில்லை. பழகியவர்களுடன் பேசினால் மீண்டும் அவருக்கு வேதனைகள் ஞாபகம் வந்து விடும் என்று எண்ணியதாலோ என்னவோ அவரிடமிருந்து அலைபேசியையும் எடுத்துக்கொண்டார்கள் என்று நினைக்கிறேன். கடைசி வரை, அவரைப் பார்த்துப்பேசிவிட வேண்டும் என்ற என் எண்ணம் நிறைவேறவில்லை. இன்று அடுத்த பயணத்தை துவங்கி விட்டார். அங்காவது அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதைத்தவிர வேறெதுவும் செய்யத் தோன்றவில்லை