இடுகைகள்

இறையன்பு புத்தகத் திருவிழாப் பேருரைகள் நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் மதிப்புரை : கவிஞர் இரா.இரவி வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41 பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-600 050. செல் : 044 - 26251968, 26258410 பக்கங்கள் : 556 ; விலை ரூ.550 ****** இந்த நூலை முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்கள் அண்மையில் மறைந்த அவரது அப்பா அ.வெங்கடாஜலம் அவர்களுக்கு காணிக்கையாக்கி உள்ளார்கள். அதில், அவா எழுதியுள்ள “என் கரம்பிடித்து எழுதவும், வாய்திறந்து பேசவும் கற்றுத்தந்த முதல் ஆசானாகத் திகழ்ந்த அப்பா அ.வெங்கடாஜலம் அவர்களுக்கு நன்றியுடன்” என்கிற இந்த வரிகளைப் படித்தபோது, பேச்சு, எழுத்து என இரண்டு துறையிலும் தனக்கென தனிமுத்திரை பதித்து வெற்றிக்கொடி நாட்டி வருகின்ற நூலாசிரியர், ‘இதற்கு காரணம் என் அப்பா’ என்று வெளிப்படையாக குறிப்பிட்டு அப்பாவுக்கு நன்றி உரைத்தது கண்டு நெகிழ்ந்து போனேன். மகன்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய நன்றி உணர்வு. இறையன்பு ஐயா அவர்களை, புத்தகத் திருவிழா உரை கேட்டு முடித்தவுடன், இந்த அற்புத உரைகளை நூலாகக் கொண்டு வாருங்கள் என்று நான் உள்பட, பல நண்பர்கள் வேண்டுகோள் வைத்தோம். எங்கள் வேண்டுகோளின்படி தாமதமாக வந்தாலும் மிகத்தரமாக, வரலாற்று ஆவணமாக வந்துள்ளது. பொதுவாக புத்தகத் திருவிழாவில் பேசும் பிரபலமானவர்கள் இலட்சக்கணக்கிலும், பிரபலமற்றவர்கள் ஆயிரக்கணக்கிலும் சன்மானம் பெற்று வருகிறார்கள். ஆனால் இறையன்பு ஐயா அவர்கள் புத்தகத் திருவிழாவில் பேசுவதற்கு சன்மானம் வாங்குவதே இல்லை. மதுரையில் பேசி முடித்ததும், இரண்டு இலட்சம் ரூபாய் கொண்டு வந்து கொடுக்க முற்பட்டார்கள், ஆனால் அதை பெற்றுக்கொள்ள மறுத்து விட்டார், நான் உள்பட, நண்பர்கள் பலர், ஐயாவிடம் உரைக்கான சன்மானம் பெற்றுக்கொள்ளலாமே, நீங்கள் அறக்கட்டளை வைத்து பல்வேறு உதவிகள் செய்து வருகிறீர்கள், அதற்குக்கூட பயன்படுத்தலாமே என்றோம். அதற்கும் அவர், பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டு, இங்கு மட்டுமல்ல, அரசு மட்டும் அனைத்து புத்தகத் திருவிழாவிலும், அரசுப்பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் விழாக்களில் பேசும் உரைக்கும் சன்மானம் பெறுவதே இல்லை. இது கொள்கை முடிவு. அரசு தலைமைச் செயலாளராகப் பணியாற்றி, பணிநிறைவு பெற்று விட்டு, அரசிடமிருந்து சன்மானம் பெறுவது முறையல்ல, நெறியல்ல. என் அம்மா ஆசிரியராகப் பணியாற்றியவர், என் தந்தையும் அறவழி வாழ்ந்தவர். பெற்றோரின் போதனையை மறக்கவில்லை என்றார். இந்தக்காலத்தில் இப்படி ஒரு மனிதரா? என வியந்து போனேன். அறநெறி பேசுவது, எழுதுவது மட்டுமன்றி வாழ்விலும் கடைப்பிடித்து வரும் மாமனிதர் இறையன்பு. புத்தகத் திருவிழாப் பேருரைகளின் தொகுப்பு நூல் இது என்பதால் கண்ணில் கண்ட உண்மையை இதில் எழுதி உள்ளேன். இந்த நூல் போட்டித்தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் படிக்கவேண்டிய அற்புத நூல், பல்வேறு தகவல்கள் நிரம்பப்பெற்ற தகவல் களஞ்சியமாக உள்ள நூலை தொகுத்த இறையன்பு ஐயா அவர்களை ‘நடமாடும் என்சைக்ளோபீடியா’ என்றே சொல்லலாம். அவ்வளவு தகவல்கள். இவை அனைத்தையும், நீண்ட நெடிய உரை முழுவதையும் கையில் எந்தவித குறிப்பும் இன்றி, மடைதிறந்த வெள்ளமென, தெளிந்த நீரோடை போல உரையாற்றுவார். கேட்போரின் கவனத்தை முழுவதாகவும் ஈர்த்து விடுவார். எல்லோருடைய உரையையும் நூலாக்க முடியாது. அவ்வளவு தரமாக உரை இருக்காது. அப்படியே நூலாக்கினாலும் ஒப்பனை, திருத்தங்கள் செய்துதான் நூலாகும். ஆனால் இந்த நூலில் விழாத் தலைமை, வரவேற்பு, பங்குபெற்றவர் அனைவரின் பெயர்களுடன் உரை அப்படியே ஆவணமாக இடம்பெற்றுள்ளது. பெரிய பேச்சாளர்கள் கூட குறைந்தபட்சம் அழைப்பிதழை கையில் வைத்துக்கொண்டுதான் பேசுவார்கள். ஆனால் இறையன்பு அவர்கள், அழைப்பிதழைக் கூட கையில் வைத்துக்கொள்ள மாட்டார். ஒருமுறை பார்த்தவுடன் விழியில் படம்பிடித்த மூளைக்குள் ஏற்றி விடுகிறார். ‘எந்திரன்’ திரைப்படத்தில் வரும் ‘ரோபோ’ போல, கண்ணால் பார்த்ததும் தாளில் எழுதியுள்ளவை அவர் மனதில் பதிந்து விடுகிறது. சங்கப்பாடல் வரிகளை, பாடம் நடத்தும் பேராசிரியர்கள் கூட பார்த்துத்தான் வாசிப்பார்கள், ஆனால் ஐயா பார்க்காமல் பாடல்வரிகளை சொல்வார், அவருடைய நினைவாற்றல் கண்டு பிரமித்துப் போனேன். என் வாழ்நாளில் இப்படி ஒரு ஆற்றல்மிக்க மனிதராக, வேறு யாரையும் சந்தித்தது இல்லை. இதை நான் மட்டும் கூறவில்லை. புத்தகத் திருவிழாவில் உரை கேட்க வரும் பலரும் குறிப்பிட்டுள்ளனர். வானதி பதிப்பகம் வானதி இராமநாதன் அவர்கள், இறையன்பு அவர்களின் ஒரு உரையைக் கேட்டுவிட்டு வியந்துபோய் என்னிடம் பலமுறை பாராட்டினார். சென்னையில் நடக்கும் இறையன்பு அவர்களின் விழாக்களில் உரைகேட்க தவறாமல் சென்று வருகிறார். அவர் மட்டுமல்ல, அவர் உரைகேட்க மிகப்பெரிய ரசிகர் படையே உண்டு. புத்தகத் திருவிழாவில் இறையன்பு அவர்கள் பேசுகிறார் என்றால், எல்லா ஊரிலும் பெருங்கூட்டம் கூடி விருகின்றது. அப்படி ரசித்த ரசிகர்களுக்கு, உரைகளை படித்து மகிழ, திரும்பத் திரும்ப வாசித்து அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள, பல புதிய தகவல்களை தெரிந்துகொள்ள உதவிடும் ஒப்பற்ற நூல் இது. வாங்கிப் படித்துப் பாருங்கள் உண்மையை உணருவீர்கள். இதில் சில உரைகளை நான் நேரடியாக கேட்ட அனுபவம் உண்டு. அவற்றை அசை போட்டுப் பார்த்தேன், 16 உரைகள் தொகுப்பாக வந்துள்ளது. எல்லா மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றது. தமிழ்நாடு அரசு, பபாசியுடன் இணைந்து அறிவுத் திருவிழா நடத்தி வருவது வரவேற்புக்குரியது, அதனால் வந்தது தான் இந்த அரிய நூல். சங்க இலக்கியப் பாடல்கள் மட்டுமல்ல, ‘வரவு எட்டணா, செலவு பத்தணா’ திரைப்படத்தில் வந்த அந்தப் பாடல் வரிகள் முழுவதும் நூலில் உள்ளது. இந்த வரிகளே வாழ்வியலை கற்றுத்தரும் வரிகள். இன்றைக்கு இளையதலைமுறையினர் பலர் கடன் தருகிறார்கள். கடன் மேளா என்று சொல்லி வழங்கிவிட்டு மாதாமாதம் EMI என்ற முறையில், சிறிய உயிரியான அட்டைப்பூச்சி நம் உடலில் உள்ள இரத்தத்தை உறிஞ்சி நம்மை செயலிழக்கச் செய்வது போல, மக்களின் வருமானத்தை உறிஞ்சி அவர்களின் நிம்மதியான வாழ்வை நிலைகுலையச் செய்கின்றனர். அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய பாடல் வரிகள் அவை. பதச்சோறாக மேற்குறிப்பிட்ட ஒன்றை மட்டுமே கூறியுள்ளேன், இதுபோன்ற பயனுள்ள தகவல்கள் நூல் முழுவதும் நிறைந்து உள்ளன. ஒருமுறை படித்துவிட்டு வைத்துவிடும் சராசரி நூல் அல்ல இது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் திரும்ப வாசித்து தெரிந்து கொள்ள உதவிடும் நூல். இவ்வளவு தகவல்கள் இதுவரை நாம் அறியாமல் இருந்துள்ளோமே என வியப்பில் ஆழ்த்தும் நூல். தகவல் களஞ்சியமாக நூல் உள்ளது. வீட்டு நூலகத்தில் அவசியம் இடம்பெற வேண்டிய நூல் இது. முதுகலை மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் இடம்பெறச் செய்யலாம். அறிவார்ந்த சமுதாயம் உருவாகிட உதவிடும் நூல். நூலாசிரியர் இறையன்பு அவர்களின் நூல்கள் வரவர அவரது முந்தைய நூல்களின் பிரமிப்பை வெல்லும்வண்ணம் அடுத்தடுத்த நூல்களும் வருகின்றன. பாராட்டுகள்.

: திருக்குறள் 100 நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு நூல் மதிப்புரை : கவிஞர் இரா.இரவி வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41 பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-600 050. பக்கங்கள் : 152 ; விலை ரூ.150

நூல் திறனாய்வு - திரைச்சுவடுகள் நூலின் தலைப்பு : திரைச்சுவடுகள் நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் வகை : கட்டுரை பக்கங்கள் : 178 வெளியீடு : வானதி பதிப்பகம் நூலின் விலை : ரூ.160 மதிப்புரை : முனைவர் ச.சந்திரா கோபுர நுழைவாயில் : கவிஞர் இரா.இரவியின் ‘திரைச்சுவடுகள்’ என்னும் நூல் ‘மாயாண்டி குடும்பத்தார்’ முதல் ‘மாற்றான்’ - வரையிலான ஐம்பத்து நான்கு திரை விமர்சனங்களை உள்ளடக்கிய ஒரு கட்டுரை நூலாக, வானதி பதிப்பகத்தின் வெளியீடாக நம் கரங்களில் கிட்டியுள்ளது. ‘ஓதுவார்க்கு உணவு’ முதல் ‘கன்னிகா தானம்’ வரை இலக்கியம் கூறும் அறங்களின் எண்ணிக்கை 32 வது பகவத் கீதையில் ஞானத்தின் பரிமாணத்தைப் பிரதிபலிக்கும் ஸ்லோக எண் முப்பத்து இரண்டு; சங்க இலக்கியம் பாடிய பெண் பாற்புலவர்களின் எண்ணிக்கை முப்பத்து இரண்டு; சதுரங்க விளையாட்டில் ‘கருப்பு’, ‘வெள்ளை’ – என மொத்த காய்களின் எண்ணிக்கை 32. மதிப்புறு முனைவர் இரா.இரவியின் ‘திரைச் சுவடுகள்’ எனும் நூல் இவரது 32 படைப்பாகும். சக்தி வாய்ந்த எண் என கணித ரீதியாக கருதப்படும் “32” என்ற எண் இந்த முப்பத்திரண்டாவது படைப்பின் வழி இரா.இரவியை எழுத்து ரீதியாக மேம்படச் செய்யும் என எண்ணுகிறேன். பாலுமகேந்திரா முதல் பத்மஸ்ரீவரை: ஒன்றல்ல; இரண்டல்ல; பிரபல கதாநாயகன்-நாயகி, துணைக்கதாப்பாத்திரங்கள். நகைச் சுவை நடிகர்கள் என குறைந்தது நூறு கதாப்பாத்திரங்களைப் பற்றிய விமர்சனம் ‘திரைச்சுவடுகள்’ நூலில் உள்ளடங்கியுள்ளது. ‘அல்டிமேட் ஸ்டார்’ - அஜீத் முதல் ‘அட்டக்கத்தி’ தினேஷ் வரை, 'ஆக்க்ஷன் கிங்' அர்ஜீன் முதல் அதர்வா முரளி வரை, 'இளைய தளபதி’ - விஜய் முதல் மக்கட்செல்வன் - விஜய் சேதுபதி வரை, 'சீயோன்’ – விக்ரம் முதல் உழைப்பால் உச்சம் தொட்ட ‘சிவகார்த்திகேயன்’ வரை, ‘புரட்சித்தமிழன்’ சத்யராஜ் முதல் மாஸ்டர் கிராப்ட்ஸ் மேன் பாலுமகேந்திரா வரை, ‘கும்கி’ புகழ் விக்ரம் பிரபு முதல் காலக்ஸி ஸ்டார் விமல் வரை, ‘மாமன்னன்’ புகழ் உதயநிதி முதல் ‘இந்தியன் புரூஸ்லி’ - தனுஷ் வரை நடிப்பின் நாயகன் - சூர்யா முதல் இயற்கை பட நாயகன் 'ஷாம்' - வரை, உலக நாயகன் கமலஹாசன் முதல் மெகா ஸ்டார் மம்முட்டி வரை, இயக்குநர் இமயம் பாரதிராஜா முதல் ‘தென்னிந்தியாவின் மார்லன் பிராண்டோ - மணிவண்ணன் வரை, குணசித்திர நடிகர் தம்பி இராமையா முதல் மு.இராமசுவாமி வரை, காஞ்சிவரம் படப்புகழ் பிரகாஷ்ராஜ் முதல் ‘லீ’ படப்புகழ் சிபிராஜ் வரை, ‘சாட்டை’ புகழ் சமுத்திரக்கனி முதல் ‘சைவம்’ - புகழ் நாசர் பாஷா வரை - என நடிகர்களையும், ‘புன்னகை அரசி' சிநேகா முதல் அனுஷ்கா ஷெட்டி வரை, ‘வாகை சூட வா’ - இனியா முதல் பிக்பாஸ் புகழ் ஓவியா வரை, ‘காக்கா முட்டை’ - புகழ் ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் காஜல் அகர்வால் வரை, தென்னிந்திய திரைப்படங்களின் இராணி திரிஷா முதல் அழகி, புகழ் நந்திதா தாஸ் வரை - எனப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம் நடிகைகளையும் எனும்படியாக 54. திரைப்பட விமர்சனங்களும் ஆங்காங்கே நடிக, நடிகையர் சாதனைகளைச் சொல்லிச் செல்கின்றன எனலாம். இயக்குநர் அட்லி முதல் அருண் காமராஜ் வரை : கவிஞர் இரா.இரவி எனும் திரைப்பட விமர்சகர் இந்நூலில் இயக்குநர் ராம் முதல் இராஜீ முருகன் வரை, இயக்குநர் பிரபு சாலமன் முதல் வெங்கட் பிரபு வரை, கே.வி.ஆனந்த் முதல் ரமேஷ் அரவிந்த் வரை, மணிகண்டன் முதல் மகிவர்மன் வரை, செல்வராகவன் முதல் மதுரைக்கார இயக்குநர் இராகவன் வரை, இயக்குநர் பாலாஜி சக்திவேல் முதல் பாண்டியராஜ் வரை, இயக்குநர் சமுத்திரகனி முதல் சற்குணம் வரை, இயக்குநர் மாரி செல்வராஜ் முதல் மகிழ்திருமேனி வரை. இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் முதல் சக்தி சௌந்தர் ராஜன் வரை, அரவான் புகழ் வசந்தபாலன் முதல் ஏழாம் அறிவு முருகதாஸ் வரை, இயக்குநர் விஜய் முதல் 'பரதேசி' புகழ் பாலா வரை, கௌதம் வாசுதேவ் மேனன், முதல் மதுரை மண்ணின் மைந்தன் சீனுராம சாமி வரை, இயக்குநர் ஞானவேல் முதல் 'பெரியார்’ படப்புகழ் ஞானராஜசேகரன் வரை - கிட்டத்தட்ட ஐம்பது இயக்குநர்களின் திரைப்படங்களை மனசாட்சி எனும் “கண்ணாடி" - அணிந்து, நேரடியாக களம் இறங்கி வெள்ளித்திரையில் உடனடி காட்சியாக கண்டு, களித்து, திரைப்படம் பார்த்த அன்றே திரை விமர்சனம் எழுதி அவற்றை 'திரைச்சுவடுகள்-எனும் பெயரில் தமிழ்ச்செம்மல் இரா.இரவி நூலாக வெளியிட்டுள்ளார்.