படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி கவிஞர் செ.திராவிடமணி கூடலூர்

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி கவிஞர் செ.திராவிடமணி கூடலூர் இன்று யானைகள் தினம்..🐘🐘🐘🐘 தன்னை ஆதரித்த மனிதரின் கடைசி ஊர்வலத்தில் கலந்து கொண்ட யானைகள்..... தென்னாப்பிரிக்காவில் "துலா துலா" (Thula Thula) சரணாலயத்தின் பெயர் கேட்டவுடன், நம் நினைவுக்கு வருவது வெறும் அடர்ந்த காடு மட்டுமல்ல. அந்தக் காட்டில் ஆட்சி செய்த, ஆனால் மனிதர்களின் செயல்களால் உயிரையே இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட காட்டு யானைக் கூட்டமும்தான். அந்த யானைக் கூட்டம் எந்த அளவுக்கு முரட்டுத்தனமாக இருந்தது என்றால், மனிதர்களைக் கண்டவுடன் தாக்குவது, வேலிகளை உடைத்துக்கொண்டு கிராமங்களுக்குள் நுழைவது என மிகவும் ஆபத்தானதாக இருந்தது. அதிகாரிகளாலும் அந்த யானைகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டபோது, கடைசி முடிவாக அவற்றைக் கொன்றுவிட முடிவு செய்யப்பட்டது. அந்த நேரத்தில்தான்... லாரன்ஸ் ஆண்டனி வருகிறார். பின்னாளில் உலகம் அவரை அன்புடன் “Elephant Whisperer" “யானைகளின் மனதைப் புரிந்துகொண்ட மனிதர்" என்று அழைத்தது. லாரன்ஸ் அந்த யானைகள் மீது இரக்கம் கொண்டார். வேலிகளை உடைத்துக் கொண்டு வெளியேற முயன்றபோது, லாரன்ஸ் செய்தது அவற்றின் உயிரைப் பறிப்பது அல்ல. இரவு முழுவதும் வேலிகளுக்கு அருகில் அமர்ந்து, யானைகளைப் பார்த்துக்கொண்டே அவற்றிடம் அன்பாகப் பேசினார். தெரிந்த விதத்தில், அன்போடு அவற்றுடன் பேசுவதற்கு பழகிக்கொண்டார். “என்னால் உங்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது" என்பதை வார்த்தைகளால் மட்டுமல்லாமல், இதயத்தில் அன்பின் மூலமாகவும் யானைகள் உணரும்படி செய்தார். பல மாதங்கள் தொடர்ந்த விடாமுயற்சியின் முடிவில், லாரன்ஸை தங்களுடைய குடும்பத்தில் ஒருவராகவே ஏற்றுக்கொண்டது. ஒரு மனிதனால், முரட்டுத்தனமாக இருந்த காட்டு யானைகளைக்கூட அன்பினால் நம்பிக்கை வைக்கச் செய்ய முடிந்தது. லாரன்ஸ் காட்டுக்குள் வந்தவுடன், ஓடிவந்து தும்பிக்கைகளால் உடலைத் தடவி அன்பை வெளிப்படுத்தின. மனிதனுக்கும் விலங்குக்கும் இடையே உருவான அந்த அன்பு அழகானதாக இருந்தது. ஆனால்... 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் ஒரு நாள், முழு தென்னாப்பிரிக்காவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் லாரன்ஸ் ஆன்டனி திடீரென உலகத்தை விட்டு பிரிந்தார். இதய நோயால் ஏற்பட்ட மரணம். லாரன்ஸின் வீடு சரணாலயத்தின் எல்லைக்கு அருகிலேயே இருந்தது. இறந்து சில மணி நேரங்களுக்குப் பிறகு... துலா துலா ஊழியர்களும், லாரன்ஸின் மனைவியும் வாழ்நாளில் மறக்க முடியாத காட்சியைக் கண்டனர். லாரன்ஸால் உயிர் காப்பாற்றப்பட்ட இரண்டு காட்டு யானைக் கூட்டங்களும் ஒன்றாக இணைந்து, வரிசையில், மிகவும் மெதுவாக... லாரன்ஸின் வீட்டை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தன. அதற்கு முன்பு 18 மாதங்களாக யானைகள் வீட்டின் அருகில் கூட வந்ததில்லை. 12 மைல்களுக்கு அப்பால் காட்டின் வேறு பகுதியில் இருந்தன. லாரன்ஸ் இறந்துவிட்டார் என்ற செய்தியை அவற்றுக்கு சொல்லும் அளவுக்கு எந்த மொழியும் அவற்றுக்குத் தெரியாது. யாரும் அவற்றை அழைக்கவும் இல்லை. மனிதர்களுக்குக் கூட முன்பாக... லாரன்ஸ் உலகத்தை விட்டு சென்றுவிட்டார் என்பதை மாபெரும் உயிரினங்கள் எப்படி அறிந்து கொண்டன? அவை எப்படி உணர்ந்தன? அது இன்றும் இயற்கையின் மிகப்பெரிய மர்மங்களில் ஒன்றாகவே உள்ளது. யானைக் கூட்டம் லாரன்ஸின் வீட்டைச் சுற்றி நின்றது. பொதுவாக யானைகள் எழுப்பும் சத்தமோ, பதற்றமோ, ஆரவாரமோ எதுவும் அங்கு இல்லை. பல மணி நேரம்... ஒரு பெரிய இறுதிச்சடங்கில் இருப்பதைப் போல... மிகவும் சோகமான அமைதியுடன் நின்றுகொண்டிருந்தன. தலையைத் தாழ்த்தியபடி... காதுகளை கீழே தொங்கவிட்டபடி... முழுமையான அமைதியில்... நின்றுகொண்டிருந்தன. அந்த இடத்தில் இருந்தவர்கள், யானைகளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிவதைத் தெளிவாகக் கண்டதாகக் கூறினர். தங்களுடைய உயிரைக் காப்பாற்றிய... தங்களுக்கு அன்பைக் கற்றுக்கொடுத்த... அன்பான மனிதனுக்காக... காட்டின் மாபெரும் உயிரினங்கள் இரண்டு நாட்கள் உணவு உண்ணாமலும், தண்ணீர் அருந்தாமலும் வீட்டின் அருகிலேயே தங்கி தங்களுடைய துக்கத்தை வெளிப்படுத்தின. பிறகு... இரண்டு நாட்கள் கழித்து... வந்த அதே விதத்தில், மெதுவாகத் திரும்பி... காட்டிற்குள் சென்று மறைந்துவிட்டன. கதை அங்கே முடிவடையவில்லை. இந்த சம்பவம் நடந்ததற்கு சரியாக ஒரு வருடத்திற்குப் பிறகு... லாரன்ஸ் இறந்த முதல் நினைவு நாளில்... மீண்டும் யானைக் கூட்டம் பல மைல்கள் தொலைவில் இருந்து லாரன்ஸின் வீட்டை நோக்கி வந்தது. அவற்றுக்கு நாட்கள் தெரியாது. தேதிகள் தெரியாது. காலண்டர் என்றால் என்ன என்பதும் தெரியாது. அடுத்த ஆண்டும், அதற்குப் பிந்தைய ஆண்டும், லாரன்ஸ் இறந்த நாளில் யானைகள் மீண்டும் மீண்டும் அவரது வீட்டிற்கு வந்தன. தங்களுடைய மீட்பாளருக்கு மரியாதை செலுத்திவிட்டு மீண்டும் காட்டிற்குள் சென்றன. அவை லாரன்ஸை தங்களுடைய கூட்டத்தின் தலைவராகவும, சொந்த குடும்பத்தில் ஒருவராகவும், ஏற்றுக் கொண்டிருந்தன. இந்த நிகழ்வு நமக்கு ஒரு மிகப்பெரிய பாடத்தைச் சொல்லிக்கொடுக்கிறது. அன்பையும் நன்றியையும் உண்மையாகக் கற்றுக்கொள்ள வேண்டியவர்கள் சில நேரங்களில் மனிதர்கள் அல்ல... விலங்குகளாக இருக்கலாம் என்பதே அது.

கருத்துகள்