இருளை நீக்கும் இரவி பாவலர் இரா. இரவியாரின் ‘கவியமுதம்’ பக்குவப்பட்ட கவியமுதமே!இன்ப அன்புடன் இரா. இளங்குமரன்
இருளை நீக்கும் இரவி
பாவலர் இரா. இரவியாரின் ‘கவியமுதம்’ பக்குவப்பட்ட கவியமுதமே!
அட்டை வனப்பா – தாள் வனப்பா – அச்சு வனப்பா – முன்னுரைகளின் வனப்பா – உள்ளுறையாம் செய்தி வனப்பா – எல்லாம் எல்லாம் அமுதக் கொள்ளை! ஈரடிக் கண்ணிகளில், கொள்ளை கொள்ளைச் செய்திகளைக் கொட்டுகிறார்.
“முடியாது என்று முடங்காதே!
முடியும் என்றே முயன்றிடு!”
வீறுமிக்க நெப்போலியன் முழக்கம் இது!
முன்னேறத் துடிப்பவர் எவர்க்கும், முன்னிற்க வேண்டிய தொடர் முன்னிற்கிறது என்பது நம்பிக்கைச் சிறகுகளின் மேல்மேல் பறப்புத் தூண்டல் அல்லவா!
“தன்னம்பிக்கை மலையளவு இருக்கட்டும்!
நன்னம்பிக்கை கடலளவு இருக்கட்டும்!
- வெற்றிக்கு இவை போதுமே!
“கனியாக நல்லதமிழ் எழுத்துக்கள் இருக்கையில்
காயான பிறமொழி எழுத்துக்கள் எதற்கு?”
மொழிக்கலப்பின் மூலமுழக்கம் இது! ஊருக்கும் உலகுக்கும் மட்டுமன்று! ஆசிரியருக்கும் தான்.
தமிழின் பெருமை – அதனைக் காக்கும் கடமை. திருக்குறள் விழுப்பம் – தக்கோர் அறிமுகம் – காதல் – புதுக்கவிதை எல்லாம் தொடர்கின்றன.
“மனக்கவலை நீக்கும் மருந்து” திரு.வி.க. முடிவு!
“விளையாட்டுக்கு விளையாடுகிறார்கள் “நல்ல எள்ளல்!”
எழில்மிக்க படங்கள் ‘என்னைப் பார்’ என்கின்றன!
இரவு கப்பிய இருளை நீக்குவது ‘இரவி’.
இரவியின் ஒளி மிக்க படைப்பு இது.
இன்ப அன்புடன்
இரா. இளங்குமரன்
கருத்துகள்
கருத்துரையிடுக