நா.முத்துக்குமார் அவர்களின் கவிதை

நா.முத்துக்குமார் அவர்களின் கவிதை 🍀மழை பெய்யா நாட்களிலும் மஞ்சள் குடையோடு வரும் ரோஜாப்பூ மிஸ் வகுப்பின் முதல் நாளன்று முன்பொரு முறை எங்களிடம் கேட்டார் "படிச்சு முடிச்சதும் என்ன ஆகப் போறீங்க?" _______ முதல் பெஞ்சை யாருக்கும் விட்டுத் தராத கவிதாவும் வனிதாவும் "டாக்டர்" என்றார்கள் கோரஸாக இன்று கல்யாணம் முடிந்து குழந்தைகள் பெற்று ரேஷன் கடை வரிசையில் கவிதாவையும்; கூந்தலில் செருகிய சீப்புடன் குழந்தைகளை பள்ளிக்கு வழியனுப்பும் வனிதாவையும் எப்போதாவது பார்க்க நேர்கிறது. ________ "இன்ஜினியர் ஆகப்போகிறேன்" என்ற எல்.சுரேஷ்குமார் பாதியில் கோட்டடித்து பட்டுத் தறி நெய்யப் போய்விட்டான். _______ "எங்க அப்பாவுடைய இரும்புக் கடையைப் பாத்துப்பேன்" கடைசி பென்ச் சி.என்.ராஜேஷ் சொன்னபோது எல்லோரும் சிரித்தார்கள். இன்றவன் நியூஜெர்சியில் மருத்துவராகப் பணியாற்றிக்கொண்டே நுண் உயிரியலை ஆராய்கிறான். _______ "பிளைட் ஓட்டுவேன்" என்று சொல்லி ஆச்சரியங்களில் எங்களைத் தள்ளிய அகஸ்டின் செல்லபாபு டி.ன்.பி.ஸ்.சி. எழுதி கடைநிலை ஊழியனானான். ____-___ "அணுசக்தி விஞ்ஞானியாவேன்" என்ற நான் திரைப் பாடல்கள் எழுதிக் கொண்டிருக்கிறேன். -_______ வாழ்க்கையின் காற்று எல்லாரையும் திசைமாற்றிப் போட, "வாத்தியாராவேன்" என்று சொன்ன குண்டு சுரேஷ் மட்டும் நாங்கள் படித்த அதே பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறான். "நெனைச்ச வேலையே செய்யற, எப்படியிருக்கு மாப்ளே?" என்றேன். சாக்பீஸ் துகள் படிந்த விரல்களால் என் கையைப் பிடித்துக்கொண்டு "படிச்சு முடிச்சதும் என்ன ஆகப் போறீங்க? என்று மட்டும் என் மாணவர்களிடம் நான் கேட்பதே இல்லை! " என்றான்.

கருத்துகள்