மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆன்மிக உலகு தந்த அமுதசுரபி, குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனப் பெருந்தலைமை ஏற்றிருக்கும் அருள் ஞாயிறு. ஓய்வின்றித் தமிழ்மக்களுக்காக ஓடியோடி உழைக்கின்ற அடிகளாருக்கு இது மணிவிழா ஆண்டு. எனவே, அறுபது அழகிய கட்டுரைகளைக் கொண்டு, “மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்’ என்று இந்நூல் பொலிவு பெறுகின்றது. சின்னச் சின்னக் கட்டுரைகளில், ‘அணுவில் தாண்டவம்’போல், அருமை அருமையான கருத்துக் குவியல்கள். அடிகளாருக்கே உரிய வரலாற்றுணர்வு, அறிவியல் பார்வை. ஆன்மிகத் தெளிவு. அள்ளும் நடை. அழகிய கதை மின்னல், புதிய விளக்கம், கல்வெட்டாகப் பதியும் மேற்கோள்கள் விண்மீன்கள் போல வியப்புக் கோலமிடுகின்றன. ‘அன்பே தவம்’ என்று முன்பே சொன்ன அடிகளார் பெருமான் இன்னும் ஒரு படி மேலே சென்று, ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்று இந்நூலின் வழியே மொழிகின்றார். ஒரு சிந்தனை நந்தவனத்துக்குள் புனிதப் பயணம் செல்லும் இனிய அனுபவம் இந்த நூலின் வாசகர்களுக்கு நிச்சயம் ஏற்படும் என்று உறுதியாகக் கூறலாம். மணிவிழாச் செய்தியாக இந்த மங்கல மொழியில் திளைக்கலாம் வாருங்கள்.

கருத்துகள்