ஈடு இணையற்ற ஒரே உறவு அம்மா ! கவிஞர் இரா .இரவி

ஈடு இணையற்ற ஒரே உறவு அம்மா ! கவிஞர் இரா .இரவி எத்தனையோ உறவுகள் உலகில் இருந்தாலும் ஈடு இணையற்ற ஒரே உறவு அம்மா ! இந்த உலகை நமக்கு அறிமுகம் செய்த அழகு முகம் என்றும் குழந்தைக்கு மறக்காத முகம் அம்மா ! உயிரெழுத்தில் தொடங்கி மெய்யெழுத்தில்மையமாகி உயிர்மெய்யில் முடியும் உன்னதம் அம்மா ! குழந்தைக்கு உயிரும் மெய்யும் தந்த குவலயத்தில் சிறந்த உறவு அம்மா ! கருவிலேயே குழந்தைக்கு திரு வழங்கிய கருணைக் கடல் ஒப்பற்ற அம்மா ! தாய்மொழியை சேயுக்கு கருவிலேயே தன் வயிற்றிலேயே பயிற்றுவித்தவள் அம்மா ! தன் இதயத் துடிப்பின் மூலம் கருவிலேயே குழந்தைக்கு தனது முதல் தாலாட்டைத் தொடங்கியவள் அம்மா ! குழந்தை பிறந்து பின் அழ நேர்ந்தால் மார்போடு அணைத்து தன் இதயத் துடிப்பை உணர்த்தி அழுகை நிறுத்திய அம்மா ! குருதியைப் பாலாக்கி வழங்கி பெற்றக் குழந்தையின் உயிர் வளர்த்தவள் அம்மா ! தன் துன்பம் பொறுப்பாள் அவள் ஆனால் தன் குழந்தையின் துன்பம் பொறுக்காதவள் அம்மா ! தன்னைத் தேய்த்து தன் குழந்தை வாழ்வை தரணியில் மணக்க வைக்கும் சந்தனம் அம்மா ! தன்னை உருக்கி தன் குழந்தையின் வாழ்வை தரணியில் ஒளிர வைக்கும் மெழுகு அம்மா ! தான் சுமந்து தன் குழந்தையை வாழ்வில் தவிக்காமல் கரை சேர்த்தத் தோணி அம்மா ! தான் உயராவிட்டாலும் தன் குழந்தையை தரணியில் உயர வைக்கும் ஏணி அம்மா ! உலகில் யாரை மறந்தாலும் நீங்கள் ஒருபோதும் ஒப்பற்ற அம்மாவை மறக்காதீர்கள் !

கருத்துகள்