ஹைக்கூ விருந்து! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை கவிஞர் மூரா !

ஹைக்கூ விருந்து! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை கவிஞர் மூரா ! வானதி பதிப்பகம் .தீன தயாளு தெரு .தியாகராயர் நகர் .சென்னை .17. தொலைபேசி 044- 24342810- 24310769 மின்னஞ்சல் vanathipathippakam@gmail.com பக்கங்கள் 80 விலை ரூபாய் 80 ஹைக்கூ தோழன் இனியவர் மு. முருகேஷ் அவர்களின் அணிந்துரையோடு வெளிவந்த இந்நூல் ஹைக்கூ இரா.இரவியின் 28-ஆவது நூல். அரசுப்பணியில் விருப்ப ஓய்வு பெற்றார். காரணம், வாழும் வரை வாசிக்கவும், எழுதவும் வேண்டும் என்ற வேட்கை தான். வாசித்து முடிக்காமல் கீழே வைக்க மனம் துணியாது. அப்படியொரு விருந்தை இந்நூலில் படத்தோடு பந்தி வைத்திருக்கிறார் இரா.இரவி. வாழ்க்கையில் கவிதை எழுதலாம். கவிதையே வாழ்க்கையாக வாழ்பவர் இரா.இரவி. எப்படி சாத்தியம் … ஆச்சரியம் … எழுதிக் கொண்டே இருக்கிறார். தமிழ் இவரை நூறாண்டு வாழ வைக்கும். இது உறுதி. படங்களால் கண்ணுக்கு விருந்தும், கருத்துக்களால் மனதிற்கு விருந்துமாய் ஓர் அழகிய நூல் “ஹைக்கூ விருந்து”. இரவி என்றால் சூரியன். இவரது ஹைக்கூ சூரியக் குஞ்சுகள். கேலி, கிண்டல், கோபம், காதல் – இத்தனையும் இவர் குறுங்கவியில் வழியும். “யாகம் நடந்தது மழைக்காக மரங்களை வெட்டி”. ‘மழையின் தாய் மரங்களே’ என்னும் உண்மையை இவரின் கவித்திறத்தால் சிரித்தபடி உணர வைக்கிறார். வருடா வருடம் ஏமாந்தும் திருந்தாத மக்கள் அட்சயத் திருதியை” மக்களின் மூடத்தனத்தை சாடும் வரிகள் இவை. ‘அடிதாங்கி வலிதாங்கி நிற்கும் கல்லே சிலையாக நிமிர்கிறது’. ‘தாங்காது உடையும் கல்லே படியாக படுத்து விடுகிறது’ எனும் உண்மையை. “ஒன்று சிலை மற்றொன்று படிக்கல் மலைக்கல்” அற்புதச் சுவைகளின் கலவையே “ஹைக்கூ விருந்து”. விலை கொடுத்து வாங்கி வாசிக்க அத்தனை தகுதியும் பெற்ற அற்புத நூல். வாசியுங்கள், யோசியுங்கள் …

கருத்துகள்