பாவேந்தர் பாரதிதாசன்! கவிஞர் இரா.இரவி

பாவேந்தர் பாரதிதாசன்! கவிஞர் இரா.இரவி ****** புரட்சிக்கவிஞர் என்றால் பாரதிதாசன். பாரதிதாசன் என்றால் புரட்சிக்கவிஞர். பாவேந்தர் என்றால் பாரதிதாசன். பாரதிதாசன் என்றால் பாவேந்தர். புரட்சிக் கவிஞர், பாவேந்தர் பட்டங்களுக்கு முற்றிலும் பொருத்தமானவர். வெண்தாடி வேந்தர், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் கொள்கை முழக்கங்களை, பகுத்தறிவுக் கருத்துக்களை பாடலில் விதைத்தவர் புரட்சிக்கவிஞர். பெரியாரின் சீர்திருத்த கொள்கைபரப்புச் செயலாளராக பாடல்கள் புனைந்தவர். ‘கனக சுப்புரத்தினம்’ என்ற இயற்பெயரை மகாகவி பாரதியாரின் மீது இருந்த அன்பால், பற்றால், பாசத்தால் பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டு பாடல்கள் புனைந்தவர். தமிழாசிரியர், கவிஞர், பாடல் ஆசிரியர், திரைக்கதை வசனகர்த்தா, அரசியல்வாதி என பன்முக ஆற்றல் மிக்கவராகத் திகழ்ந்தவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அந்தக் காலத்திலேயே தமிழில் புலவர் பட்டம் பெற்ற பெருமகனார். பல்வேறு இலக்கிய நூல்கள் எழுதி தமிழன்னைக்கு அழகு சேர்த்தவர். கவிதை, நாடகம், கட்டுரை, கதை என இலக்கியத்தில் உள்ள அத்தனை வடிவிலும் படைப்புகள் படைத்து சகலகலா வல்லவராக வலம் வந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்ற விருதுக்குப் பெருமை சேர்த்தவர். பாண்டியன் பரிசு, இன்பக்கடல், அமிழ்து எது? அமைதி, பாரதிதாசன் கதைகள், நான்கு தொகுதிகள், குடு\ம்ப விளக்கு 5 பகுதி, முதியோர் காதல், குயில் பாடல்கள், குறிஞ்சித் திட்டு, கேட்டலும் கிளைத்தலும், சிரிக்கும் சிந்தைகள், தேனருவி, நல்ல தீர்ப்பு, பாரதிதாசன் ஆத்திச்சூடி, திருக்குறள் உரை, பிசிராந்தையார் இப்படி 86க்கு மேலான நூல்களை வடித்தவர் பாரதிதாசன். காலத்தால் அழியாத கல்வெட்டு இலக்கியங்களை எழுதிக் குவித்தார். இன்றைக்குப் படித்தாலும் பொருந்தும் விதமாக தமிழ் விருந்து வைக்கும் விதமாக நுட்பமான ஆழமான அறிவார்ந்த படைப்புகளை வடித்தவர் பாரதிதாசன். பத்துக்கு மேற்பட்ட திரைப்படங்களுக்கு கதை வசனம் தயாரிப்பு என பங்களிப்பைச் செலுத்தியவர். தனக்கென தனி முத்திரைப் பதித்து திரைஉலகின் பாராட்டைப் பெற்றவர். கதை வசனம் மட்டுமல்ல இவரது பாடல்களும் திரைப்படங்களில் இடம்பெற்றன. ‘தமிழுக்கும் அமுதென்று பேர் ; அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்று காலத்தால் அழியாத தமிழ் வாழ்த்துப் பாடல் எழுதி புகழ் பல பெற்றவர். கவித்திறனால் உலகப்புகழ் அடைந்தவர். பாரதிதாசன். புதுவையில் பிறந்து சென்னையில் இறந்தவர். புதுவைக்கு புகழ் பல சேர்த்தவர். சிங்காரச் சென்னையை சிறப்பித்தவர். குடும்பக் கட்டுப்பாடு பற்றி கவிதை வடித்த முதல் கவிஞன் பாரதிதாசன். அவர் பாடும் வரை அவருக்கு முன் யாரும் குடும்பக் கட்டுப்பாடு பற்றி குறிப்பிடுவதில்லை. எந்த ஒரு புதிய சிந்தனையையும், சிந்திப்பதில் பாடல் வடிப்பதில் கதை, கட்டுரை வடிப்பதில் முன்னவராகத் திகழ்ந்தவர். தமிழின் எழுச்சிக்காக வளர்ச்சிக்காக உரக்கக் குரல் தந்தவர் படைப்புகள் யாத்தவர். புதுவை கல்வே கல்லூரியில் சேர்ந்து இளங்கலைப் பட்டத்தை இரண்டு ஆண்டுகளிலேயே முதலாவதாகத் தேர்ச்சிப் பெற்றார். நல்ல புலமை, தமிழறிவு தமிழ் இலக்கிய அறிவு இருந்த காரணத்தால் படிப்பு முடிந்தவுடனேயே காரைக்கால் அரசினர் கல்லூரியில் தமிழாசிரியராகச் சேர்ந்தார். இப்படித் தான் ஆரம்பித்தது அவரது வாழ்க்கை. படிப்படியாக இலக்கியங்கள் படைத்து கொஞ்சம் கொஞ்சம் வளர்ந்து சிகரம் அடைந்து சிறந்தவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். நினைத்தவுடன் பாடல் புனையும் ஆற்றல் பெற்ற பாவேந்தராகத் திகழ்ந்தார் பாரதிதாசன். பாவேந்தர் படைப்பாளி மட்டுமல்ல, சிறந்த கொள்கைவாதியாகவும், போராளியாகவும் திகழ்ந்தவர். தந்தை பெரியார் அறிவித்த போராட்டங்களில் கலந்து கொண்டு பெரியாருடன் பலமுறை சிறை சென்ற கொள்கை வீரராக விளங்கியவர் பாரதிதாசன். அய்ந்து வருடங்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்து சாதனைகள் பல நிகழ்த்தியவர், அமைதி ஊமை என்ற நாடகத்திற்கு ‘தங்கக்கிளி’ பரிசு வென்றவர். அவர் காலமான பின்னர் அவர் எழுதிய பிசிராந்தையார் நூலிற்கு சாகித்ய அகாதமி விருது வழங்கினார்கள். குயில் என்ற கவிதை இலக்கியத்திற்காக வெளிவந்த நூலைத் தொடங்கியவர் பாரதிதாசன். குயிலுக்கு தடையும் விதிக்கப்பட்டு தடைப்பட்டு பின்னர் வெளிவந்தது. பாவேந்தர் பாரதிதாசன் இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் இன்றைக்கும் இலக்கிய உலகில் தனக்கென தனி முத்திரை பதித்து சிறப்பிடம் பெற்றவர். இன்றைக்கும் புத்தக திருவிழாக்களில் இளைஞர்களால் பாரதிதாசன் படைப்புகள் பெருமளவில் விற்பனை ஆகின்றன. பாரதிதாசன் இறக்கவில்லை. சாகாத அவரது படைப்புகளில் என்றும் வாழ்கிறார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களுக்கு ஈடு இணை வேறு எவருமில்லை. அவருக்கு இணை அவர் மட்டுமே.

கருத்துகள்