பேராசிரியர் இரா. மோகனின் படைப்புலகம் ! (ஆய்வுக்கோவை) பதிப்பாசிரியர்கள் : பேராசிரியர் நிர்மலா மோகன் ! முனைவர் செ.ரவிசங்கர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

 




பேராசிரியர் இரா. மோகனின் படைப்புலகம் !

(ஆய்வுக்கோவை)

பதிப்பாசிரியர்கள் : பேராசிரியர் நிர்மலா மோகன் !

                முனைவர் செ.ரவிசங்கர் !


நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி


நூல் வெளியீடு : சித்ரா பதிப்பகம், 11/5, ஈஸ்வரன் 2ஆவது தெரு, கோடம்பாக்கம், சென்னை-600 024. பக்கங்கள்: 526, விலை: ரூ.500.


*****

தமிழ்த்தேனீ இரா.மோகன் அவர்களின் படைப்புலகம் ஆய்வுக்கோவையாக மலர்ந்துள்ளது. அய்யாவின் அன்பு மனைவி தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் அவர்கள், அய்யாவின் மாணவர் உதவிப் பேராசிரியர் முனைவர் செ. ரவிசங்கர் அவர்கள் ஆகிய இருவரும் பதிப்பாசிரியராக இருந்து பதிப்பித்து உள்ளனர்.

நுன்முகம் கட்டுரைகள் நினைவலைகள் என 71 தலைப்புகளில் நூல் வந்துள்ளது. இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டிய மிகச்சிறந்த ஆளுமையாளர் அய்யா இரா.மோகன் அவர்கள். உடலால் உலகை விட்டு 12.06.2019 அன்று மறைந்துவிட்ட போதும், அவர் எழுதிய 151 நூல்களின் மூலம் இறப்பின்றி என்றும் வாழ்வார் இலக்கிய உலகில்.

இந்த நூல் தமிழ்த்தேனீ இரா. மோகன் அய்யா அவர்களுக்கு புகழ்மகுடமாக வந்துள்ளது. அவரைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் படித்து அசைபோடும் நூல், அவரைப் பற்றி அறியாதவர்கள் அறிந்து கொள்ள உதவிடும் உன்னதமான நூல். பல அறிஞர்கள், கவிஞர்கள், பேராசிரியர்கள், முனைவர்கள், ஆய்வாளர்கள், இதழாசிரியர்கள் என பலரும் தமிழ்த்தேனீ இரா.மோகன் அய்யா அவர்களின் நூல்களை ஆய்ந்து அறிந்து ஆராய்ந்து வடித்துள்ள அழகிய நூல். மிக நேர்த்தியாக வடிவமைத்து உள்ளனர், பாராட்டுகள்.

இதில் பல கட்டுரைகள், புலனம் மூலம் அலைபேசி மூலம் பலரிடமும் பலமுறை பேசி கட்டுரைகளை அனுப்பச் செய்த எனக்கு பெரிய நூலாகப்  பார்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. அய்யா இருக்கும் போது இந்த ஆய்வுக் கோவையை கொண்டு வந்து இருக்கலாமோ? என்ற மனக்கவலையும் வந்தது.

பதிப்புரை தொடங்கி மாமனிதர் அப்துல் கலாம் வாழ்த்து அய்யா அவர்களில் 151 நூல்களின் பட்டியலுடன் நூல் நிறைவடைகிறது. திருவள்ளுவரின் வாக்குப்போல வாழ்வாங்கு வாழ்ந்த மாமனிதர், பேச்சு, எழுத்து என இருவேறு துறையிலும் தனிமுத்திரை பதித்து வென்றவரின் எழுத்தாற்றலை விளக்கிடும்  இலக்கிய அறிவொளி தரும் விளக்கு இந்த நூல்.

மு.வ.-வின் செல்லப்பிள்ளை தமிழ்த்தேனீ இரா.மோகன் அவர்களிடம், "பேச்சு காற்றோடு கலந்து போய்விடும், எழுத்து மட்டும் நிற்கும், எனவே ‘எழுதுக’" என்று மு.வ. சொன்ன வாசகத்தை தாரக மந்திரமாகக் கொண்டு 151 நூல்களை எழுதிக் குவித்து விட்டார்கள்.

தமிழ்த்தேனீ இரா.மோகன் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் இலக்கிய இணையரின் ஓரே ஒரு புதல்வியான அரசி பாலாஜி அவர்களின் ‘என் பார்வையில் ..அப்பா’ கட்டுரை மிக உருக்கமாக நெகிழ்ச்சியாக இருந்தது. மகளையும் எழுதச்சொல்லி, பேசச் சொல்லி உருவாக்கிய விதத்தை எழுதி உள்ளார்கள். மகளை மட்டுமல்ல, என்போன்ற பலரையும்' பேசுக' ‘எழுதுக, எழுதுக’ என்று ஊக்குவித்து பல நூல்கள் வரவைத்து அவற்றை விழா நடத்தி வெளியிட்டு மற்றவரை மகிழ்வித்து மகிழ்ந்த மாமனிதர் தமிழ்த்தேனீ இரா.மோகன் அவர்கள்.

‘என் தந்தைக்கும் மேலானவர்’ என்று நான் கவிதையில் குறிப்பிட்டது வெறும் புகழ்ச்சிக்கான வார்த்தை அல்ல, முற்றிலும் உண்மை. ‘தமிழ்த்தேனீயும் நானும்’ என்று எனது விரிவான கட்டுரையும் ‘மோகனம்’ என்ற நூலிற்கு நான் எழுதிய மதிப்புரை வந்துள்ளது. ‘அய்யாவின் செல்லப்பிள்ளை நான்’ என்பதால் எனக்கு மட்டும் இரண்டு கட்டுரைகள் இடமளித்து உள்ளனர், நன்றி.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் வாழ்த்து, குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் பாராட்டு, தமிழ்த்தேனீயின் வாழ்க்கைக் குறிப்பு, முனைவர் ஸ்ரீகுமார், திருக்குறள் அறிஞர் க.சி. அகமுடை நம்பி, முதுகலைத் தமிழாசிரியர் மு. அழகுராஜ் இப்படி பலரது கட்டுரைகளும் நூலில் இடம்பெற்றுள்ளன.

தமிழ்த்தேனீ இரா.மோகன் அய்யா அவர்களை நடுவராகக் கொண்டு பல்வேறு பட்டி மன்றங்களில் பேசிய முத்து இளங்கோவன், திருநாவுக்கரசு. சங்கீத் இராதா, சேரை பாலகிருட்டிணன் உள்ளிட்டவர்களின் கட்டுரைகளும் நூல் மதிப்புரைகளும் இடம்பெற்றுள்ளன. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அய்யாவுடன் பயின்ற மாணவர்கள் பலர் பேராசிரியராக முனைவர்களாக உயர்ந்துவிட்ட போதிலும் மறக்காமல் அய்யா நூல்களை வாங்கிப்படித்து மதிப்புரை தந்து உள்ளனர்.

இதழாசிரியர்கள் ஏர்வாடி இராதாகிருஷ்ணன், புதுகை மு. தருமராசன், பேராசிரியர் ஏ.எம். ஜேம்ஸ் ஆகியோர் எழுதியுள்ள கட்டுரைகளும் நூலில் இடம்பெற்றுள்ளன.

தமிழ்த்தேனீ இரா.மோகன் அய்யா அவர்கள் பல வருடங்களாக கவிதை உறவு, புதுகைத் தென்றல், மனிதநேயம் போன்ற மாத இதழ்களில் இலக்கியத் தொடராக மாதாமாதம் கட்டுரைகள் எழுதி வந்தார்கள். அந்த நன்றிக்காக அதன் ஆசிரியர்களும் கட்டுரைகள் வழங்கி உள்ளனர்.

சிவயோகம் மலர் ஆசிரியர் கலாநிதி பொன் பாலசுந்தரம் அவர்கள் எனக்கு அனுப்பிய இரங்கல் மடலும் நூலில் இடம்பெற்றுள்ளது. தமிழ்த்தேனீ இரா. மோகன் அய்யாவின் மாணவர் முனைவர் அ. இனியன் கோவிந்தராஜூ அவர்களின் திறனாய்வும் நூலில் இடம்பெற்றுள்ளது. தமிழ்நாடு காகித நிறுவனம் (TNPL) வளாகத்தில் பள்ளியில் தலைமையாசிரியாக பணியாற்றிய இனியன் கோவிந்தராஜூ அவர்கள், தன் ஆசிரியார் இரா.மோகன் அவர்களை குழுவினருடன் வரவழைத்து பள்ளியில் பட்டிமன்றம் நடத்தி TNPL நிறுவனத்தை சுற்றிக்காட்டி மகிழ்வித்து மகிழ்ந்தார். உடன் நானும் சென்று இருந்தேன். அதுபோன்ற மலரும் நினைவுகளையும் மலர்வித்தது இந்த ஆய்வு மலர்.

இப்படி ஓர் ஆய்வுக்கோவை (வித்தியாசமாக) வேறு யாருக்கும் வந்ததில்லை. சாதனை நூல் இது. பதிப்பாசிரியர்கள் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன், முனைவர் செ. ரவிசங்கர் இருவரின் கடின உழைப்பிற்கு பாராட்டுகள்.

நூல் விலைக்கு வாங்கிட பேச வேண்டிய எண் : 94436 75931


கருத்துகள்