அனல் மூச்சு! நூல் ஆசிரியர் : கவிவேந்தர் கா. வேழவேந்தன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

 




அனல் மூச்சு!
நூல் ஆசிரியர் : கவிவேந்தர் கா. வேழவேந்தன்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
வேந்தர் பதிப்பகம், 78/103, டாக்டர் இராதாகிருட்டிணன் சாலை, மயிலாப்பூர், சென்னை – 600 004.  பேச : 044 28475976
 பக்கங்கள் : 256, விலை : ரூ. 100

******

நூலாசிரியர் கவிவேந்தர் கா. வேழவேந்தன் அவர்கள் மிகச்சிறந்த மரபுக்கவிஞர் பல்வேறு பரிசும் பாராட்டும் விருதும் பெற்றவர். முன்னாள் அமைச்சர், தலைக்கனம் இல்லாத பண்பாளர். பல்வேறு இதழ்களில் மாதாமாதம் தொடர்ந்து மரபுக்கவிதை எழுதி வருகிறார்.

96 தலைப்புகளில் மிகச்சிறந்த சிந்திக்க வைக்கும் மரபுக் கவிதைகளை வழங்கி உள்ளார். கலைஞர் கருணாநிதி, முனைவர் அ. செயதேவன், நீதியரசர் பு.ர. கோகுலகிருஷ்ணன், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், முனைவர் அ. ஆறுமுகம், ஆரணி கா.மு. உமர் ஆகியோர் அணிந்துரை, வாழ்த்துரை என 48 பக்கங்களில் நூலின் சிறப்பை முன்னோட்டமாக வழங்கி உள்ளனர்.

இலண்டன் சுடரொளி இலக்கியக் கழகம் நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிதை முதல் கவிதையாக இடம்பெற்றுள்ளது. இதே போட்டியில் நானும் பரிசு பெற்ற நினைவை மகிழ்வித்தது. பரிசளிப்பு விழா சென்னையில் நடந்தது, சென்று வந்தேன்.

“அலைக்கரங்கள் உறக்கத்தைக் கலைத்த போதில்,
      அருங்கனவும் நனவாக ஏங்கி நின்றேன்;

முதல் கவிதையை முத்தாய்ப்பான இரண்டு வரிகளில் முடித்துள்ளார். அவரது கனவு நனவானால் அது தமிழுக்கு பொற்காலம், தமிழருக்கு பொற்காலம்.

வாய்மொழியாய்த் தாய்மொழியைத் பேசுதற்கும்
      வக்கில்லாத் தமிழ் நண்பா! ஒன்று கேட்பேன்;
      சேய்களெலாம் தாய்த் தமிழை மறந்தே பாழும்
      தேம்சுமொழி ஆங்கிலத்தில் பேசல் ஏன்? ஏன்?

ஏன்? ஏன்? என்ற கேள்வியின் மூலம் தமிழர்கள் இல்லத்தில் தமிழ்க்குழந்தைகள் தமிழ்வழியில் பயிலவில்லை. அழகுத்தமிழ் பேசவில்லை, மம்மி, டாடி என்ற ஆங்கிலச் சொற்களே பயன்படுத்தும் தமிழருக்கு விழிப்புணர்வு விதைக்கும் வண்ணம் தமிழ்ப்பற்று ஊட்டும் வண்ணம் பல கவிதைகள் வடித்துள்ளார்.

எத்தனை ஆசிரியர்!

பள்ளியில் தான் ஆசிரியர் உள்ளார் என்றே
      பார்க்காதே, என் தோழா! அதோ பார்! ஆழி
      துள்ளி வரும் வெள்ளலை ஓர் ஆசான்; தோயாச்
      சுறுசுறுப்பை அதைப்போல புகட்டு வோர்யார்?

ஓய்வின்றி தொடர்ந்து துள்ளி வரும் கடல்அலையின் சுறுசுறுப்பைச் சுட்டிக்காட்டி இளைஞர்களுக்கு உழைப்பின் உன்னதத்தை உணர்த்தி உள்ளார், பாராட்டுகள்.

இதழ்களே, இதழ்களே,

தித்திக்கும் தேனடைகள் சமைக்கும் தேனீ
      தேகத்தின் நோய் மட்டும் ஓட்டும்! நீங்கள்
      சித்தங்கள் தெளிய வைப்பீர்! பித்தம் தீர்ப்பீர்
      செம்மாந்த ‘அறிவுலகத்தூ
 தாய் ஆவீர்

பல்வேறு இதழ்களில் மரபுக்கவிதைகள் எழுதிவரும் நூலாசிரியர் கவிவேந்தர் கா.வேழவேந்தன் அவர்கள் இதழ்களை, பத்திரிகைகளை சித்தம் தெளிய வைக்கும், பித்தம் தீர்க்கும் என்று மனதார பாராட்டி கவிதை வடித்துள்ளார். சிற்றிதழ்களுக்கு சிகரம் தந்துள்ளார்கள். இதழ்களுக்கு மகுடம் சூட்டி உள்ளார்.

எதற்காக எழுதுகிறேன்?

புலர்காலை எழுந்தால் ‘குட்மார்னிங் என்றான்
      போய்ப்படுக்கும் வேளையிலே ‘குட்நைட்
 என்றான்
      நலங்கெட்ட பாவியினை மாற்று தற்கே
      நான் நாளும் பித்தனைப்போல் எழுது கின்றேன்!

தமிழகத்தில் ஊடகத்தில் தினமும் தமிழ்க்கொலை நடக்குது. பார்ப்பவர்களையும் தமிங்கிலம் நோய் தொற்றிக் கொண்டு விட்டது. பேச்சில் நல்ல தமிழ் இல்லை. வேதனையாக உள்ளது. தமிங்கிலம் ஒழித்து நல்ல தமிழை பேச வைப்பதற்கே எழுதுகிறேன் என்கிறார் நூலாசிரியர்.

கவியரசர் தாகூரின் கண்டனம்!

தம் மனத்தை வெளிப்படுத்த அறிஞர் தாகூர்
      தணற்பிழம்பாய்க் கொதித்தெழுந்தே பேச லானார்
      “உம் மொழியாம் தாய்த்தமிழில் வரவேற் றால்தான்
      உளம் மகிழ்வேன்; ஆங்கிலமேன்? எண்ணிப் பார்ப்பீர்!

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் நடந்த பாராட்டு விழாவில் கவியரசர் தாகூர் அவர்களை ஆங்கிலத்தில் வரவேற்றது கண்டு மனம் மகிழாமல் உங்கள் தாய்மொழியான தமிழ்மொழியிலேயே வரவேற்று இருக்கலாம் என்று சொன்ன வரலாற்று நிகழ்வை மரபுக்கவிதையில் வடித்துள்ளார், பாராட்டுக்கள்.

கேள்விச் செல்வம்!

கேள்விகளின் வேள்விகளில் ஒளிப்பி ழம்பாய்
      கிளைப்பது தான் நுண்ணறிவு! வீர தீர
      வாள்வீச்சால் தோள்வலி தான் தெரியும் அங்கே
      வழிந்தோடும் குருதியினால் யார்க்கு நன்மை!

“கேள், கேள், கேள் கிடைக்குமென்றே புகன்றார் ஏசு. கிரேக்கத்தின் மாமேதை சாக்ரடீசும் பகுத்தறிவுப் பகலவன் வெண்தாடி வேந்தர் தந்தை பெரியாரும் வாழ்நாள் முழுவதும் மக்களைப் பார்த்து, எதையும் ஏன்? எதற்கு? எப்படி? எதனால்? எங்கு? என கேள்விகள் கேளுங்கள் என்று சொல்லி பகுத்தறிவை விதைத்தார். நூலாசிரியர் கவிதையிலும் ஏன்? என்று கேள்வி கேளுங்கள் என்று வேண்டி உள்ளார்.

திராவிட இயக்கம் ஏன்?

பெரியாரே இல்லாமற் போயிருந்தால்
      பேயாட்ட ‘நால்வருணம்
 ஒழிவ துண்டோ?
      பெரியாரே இல்லாமற் போயிருந்தால்
      பிழை இந்தி தமிழ் முடிமேல் ஏறி டாதோ?

தமிழகம் பெரியார் மண், அவர் பிறந்து போதித்த காரணத்தால் தான் இங்கு அமைதி நிலவுகின்றது. பெரியார் இல்லாத காரணத்தால் தான் இந்தி மொழி தமிழகத்தில் வாலாட்டிப் பார்க்கின்றது. திராவிடம் அந்த வாலை ஒட்ட நறுக்கிவிடும் என்பது உண்மை.

குடந்தை பள்ளியில் நடந்த தீ விபத்து பற்றி கவிதை எழுதி உள்ளார். சமுதாயத்தை உற்றுநோக்கி பாதிக்கும் விஷயங்களை மரபுக்கவியாக்கி விடுகிறார்.

குறையட்டும்!

ஆசைகளைக் குறையுங்கள், அமைதி கிட்டும்!
      அருவருப்பைக் குறையுங்கள், உறவு கிட்டும்!
      பேசுவதைக் குறையுங்கள், உயர்வு கிட்டும்!
      பிழைகளினைக் குறையுங்கள், உயர்வு கிட்டும்!

ஆசையே அழிவுக்குக் காரணம் என்ற புத்தரின் பொன்மொழியை முன்மொழிந்து வடித்த கவிதை நனி நன்று.

வாழும் மரபுக்கவிஞர்களில் குறிப்பிடத்தகுந்த மரபுக்கவிஞர் மேனாள் அமைச்சர் கவிவேந்தர் கா. வேழவேந்தன் தமிழன்னைக்கு மரபு மகுடம் சூட்டி உள்ளார்.

கருத்துகள்