மருக்கொழுந்து! நூல் ஆசிரியர் : கவிஞர் மாலதி இராமலிங்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !





மருக்கொழுந்து!

நூல் ஆசிரியர் : கவிஞர் மாலதி இராமலிங்கம்

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

அம்மையப்பர் பதிப்பகம், மனை எண் 106, 6வது குறுக்குத் தெரு, கர்மவீர்ர் காமராசர் ஆசிரியர் நகர், ஒட்டம்பாளையம், புதுச்சேரி-605 004

பக்கங்கள் : 120, விலை : ரூ.120*****நூலாசிரியர் கவிஞர் மாலதி இராமலிங்கம் அவர்கள் புதுவையின் பெருமைகளில் ஒன்றானவர். தேசிய நல்லாசிரியர் திரு. துரை. இராமலிங்கம் அவர்களின் இல்லத்தரசி. இந்த நூல் இவரது முதல் நூல். இந்த நூலை புதுமனை புகுவிழாவில் வெளியிட்டு மகிழ்ந்துள்ளார். மதிப்புரைக்காக அனுப்பி வைத்தார்கள். முனைவர் லேனா தமிழ்வாணன், எழுத்தாளர் ப. முருகேசன், ஓவியர் பாரதிவாணர் சிவா, கவிமாமணி சுந்தர பழனியப்பன், உதவிப் பேராசிரியர் சி. கீதா ஆகியோர் அணிந்துரை நல்கி சிறப்பித்துள்ளனர்.
இந்த நூல் முழுவதும் காதல் கவிதைகள். இக்கவிதையை எழுதியது பெண் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். ஆண்பாலாகவே மாறி இளமை மிக்க கல்லூரி மாணவன் காதலன் எழுதுவது போல எல்லாக் கவிதைகளையும் எழுதி உள்ளார். நம்ப வியப்பாகவே இருந்தது. கணவர் இராமலிங்கம் அவர்கள் இலக்கியப் பணிக்கு துணை நிற்பதால் இந்த நூலை அவருக்கே காணிக்கை ஆக்கி உள்ளார்.
உன் / ஒரு நொடிப் பார்வை / காண்பதற்குள்
என்னுள் / ஓராயிரம் / பிரசவ வலி
காதலியின் கடைக்கண் பார்வை கிட்டாதா!
என தவம் இருக்கும் காதலனின் மன நிலையில் வடித்த கவிதை சிறப்பு!
உன் / ஓர் / உதட்டுச் சுழிப்பு / போதும்
ஓராயிரம் கவிதை / நான் எழுத
‘கடைக்கண் காட்டி விட்டால் மாமலையும் கடுகு’ என்பார் புரட்சிக்கவிஞர் பார்திதாசன். அவர் பிறந்த மண்ணில் வாழ்வதால் அவர் பாணியிலேயே வடித்த கவிதை நன்று. உண்மை தான். காதலி புன்னகை சிந்தி ஒரு பார்வை பார்த்தால் போதும். காதலனுக்கு கவிதை அருவியாகக் கொட்டும்.
என்னுடைய பெயர் / இவ்வளவு அழகா?
உன் இதழ் வழி / பயணித்து வந்ததால்
உண்மை தான். அப்பா, அம்மா குடும்பத்தார், நண்பர்கள் பெயர் சொல்லி அழைத்த போது வராத தனி உணர்வு, காதலி தன் பெயர் சொல்லி அழைக்கும் போது இனிமையாகி விடும். பிடிக்காத பெயர் கூட பிடித்து விடும்.
விழித்தாலும் / விழி மூடினாலும் / நொடிகுறை
யாமல் / கடிவாளம் / இட்டுக் கொள்கிறேன்
காட்சி மாறாமல் / என் கண்ணுக்குள்ளே
நீ மட்டும்!
நினைவிலும் கனவிலும் காதலி முகமே வந்து வந்து நிற்கும் காதலன் உணர்ந்த உன்னத உணர்வு, அதை அப்படியே கவிதை-யாக்கியது சிறப்பு.
விரிந்த விழிகளால் / விரித்து வலை வீசாதே
தரையிலிட்ட மீனாகத் / துடித்துப் போகிறேன்
நான்!
புவி ஈர்ப்பு விசை போலவே விழி ஈர்ப்பு விசை உண்டு. அந்த விசையின் ஆற்றலை காதலன் நன்கு அறிவான். விழி வீச்சால் தரையிலிட்ட மீனாக துடித்து போகிறான். நல்ல உவமை. பசுமை நினைவுகளை, மலரும் நினைவுகளை நூல் படிக்கும் வாசகர்களுக்கு இருபாலருக்கும் அவரவர் காதல் நினைவுகளை மலர்வித்து வெற்றி பெறுகின்றன கவிதைகள்.
உனது அழகு / எந்த இதயத்தையும்
பிளந்து பார்த்து விடுகிறது / என் இதயம்
மட்டும் / அதற்கென்ன / விலக்கா?
காதலியின் அழகை இதைவிட அழகாக விளக்க முடியாது. அழகோ அழகு அவள் என்பதை வர்ணித்து வடித்து கவிதை நன்று.
இதழ்களில் புன்னகையை / பூசிக்கொண்டே
என் நெஞ்சில் / கல்வெட்டாய் / பதிந்து போகிறாய் /
பொல்லாதவள் நீ.
கல்வெட்டு என்பது அழியாதது. அதுபோலவே காதலி முகம் கல்வெட்டாக பதிந்து விடுகின்றது. காதலியின் பார்வை முகம் அழகு என முழுக்க முழுக்க ரசித்து ரசித்து காதலன் பார்வையிலேயே பார்த்து வடித்த கவிதைகள் நன்று.
நம் விழிகள் / மோதிக் கொண்டு / கடந்தது
நொடிப்பொழுது தான் / அதில் அவை / பேசிக் கொண்ட
மொழி / காதல் மட்டுமே / பொன்னான /
தருணம் அது.
சிக்கி முக்கி கற்கள் உரசினால் தீ வரும். காதலர்கள் இருவரின் நான்கு விழிகள் உரசினால் காதல் மலரும்.
கவிப்பேரரசு வைரமுத்து எழுதுவார். விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே என்று.
அந்த வரிகளை எல்லாம் நினைவூட்டின இந்த வரிகள்.இதயத்தை / பதம் பார்க்க / வேலான
உன் கண்கள் / வில்லான உன் புருவங்கள்
என / பலமானப் படைக்கலங்கள் உன்னிடம்
நிராயுத பாணியாய் நான்.
விழிகளின் பார்வை வேல். புருவங்கள் வில். வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாக பார்வைக் கனைகள் தாக்குதாம். காதலன் ஆயுதம் ஏதுமின்றி தவிக்கிறானாம். சொக்க வைக்கும் சொற்களின் மூலம் காந்தப் பார்வை பற்றி பரவசம் தரும் காதல் வரிகள். படிக்கும் வாசகர்களையும் இளமையாக்கி விடுகின்றன.
கண்ணிமைக்கும் போதும் / உன் பிம்பம்
கரையாதிருக்க / கண்ணிமைக்காமல் நான்.
காதலர்கள் சந்தித்தால் இமைக்க மறந்து பார்த்து ரசிப்பார்கள் கேள்விப்பட்டு இருக்கிறோம். இமைத்தால் உருவம் சில நொடிகள் மறைந்து விடும் என்பதற்காகத் தான் இமைக்காமல் ரசிக்கிறார்கள் என்ற உண்மை இப்போதே விளங்கியது எனக்கு.
என் / மூளையின் / மூலையில் / சட்டமாய்
நிறைந்து விட்டது / உன் புகைப்படம்!
உண்மை தான். காதலியின் முகம் மூளையில், மூலையில் பதிந்து விடும். அழிக்க நினைத்தாலும் அழியாது. இந்த உண்மை காதலித்தவர்கள் மட்டுமே அறிந்த உண்மை!
நூலாசிரியர் கவிஞர் மாலதி இராமலிங்கம் பிரபல ஓவியர் மணியம் செல்வன் ம.செ. அவர்களின் மானசீக சீடர் என்பதால் அவரது ஓவியமும் மற்ற ஓவியங்களும் நூலின் அழகிற்கு அழகு சேர்ப்பதாக உள்ளன. தொடர்ந்து எழுதுங்கள், அடுத்த நூல் சமுதாயத்தை சீர்திருத்தும் கவிதைகளாக அமையட்டும்.

கருத்துகள்