ஹைக்கூ ஆற்றுப்படை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா !




ஹைக்கூ ஆற்றுப்படை !

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !

நூல் விமர்சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா !

 நூல் வெளியீடு : மின்னல் கலைக்கூடம்,          
 117, எல்டாம்ஸ் சாலை,சென்னை – 600 018.

பக்கம் : 96. விலை : 96       பதிப்பு ஆண்டு : 2010


கவிஞரின் பத்தாவது படைப்பு ஹைக்கூ ஆற்றுப்படை என்பதாகும்.
2010-ல் வெளிவந்த இந்நூலிற்கு அணிந்துரை வழங்கி சிறப்பு செய்துள்ளார் பேராசிரியர் இரா.மோகன் அவர்கள்.

நம் சங்க இலக்கியம் ஆற்றுப்படுத்துதல் என்பதை நெறிப்படுத்தல், வழிப்படுத்தல் என்கிறது. பொருள் பெற்று மகிழ்ந்த ஒருவன், பெறாதவரும் பெற்று மகிழ வழிகாட்டுதல், ஆற்றுப்படையின் இலக்கணம் ஆகும்.

‘கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
     ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
     பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
     சென்றுபயன் எதிரச் சொன்ன பக்கமும்’

எனத் தொல்காப்பியம் புறத்திணையில் கூறுகின்றது

இவ்வாறாக  ஹைகூ ஆற்றுப்படை நூல் கவிஞர் இரா. இரவியின் பல்வேறு கவிஞர்களின் கவிதைகளை ஆற்றுப்படுத்துகின்றது. இத்தொகுப்பில் இருபத்தாறு ஹைகூத் தொகுப்புகளின் மீதான விமர்சனம் உள்ளது. மூத்தவரான அமுதபாரதியையும் விமர்சித்துள்ளார். இளையவரான  புதுவை ஈழனும் இடம்பெற்றுள்ளார். தொகுப்பு உண்டு. கூட்டுத்தொகுப்பும் இருக்கிறது. விமர்சனத்தை தொடங்குமுன் கவிஞர் பற்றி குறிப்பட்டுள்ளார். புகழைத் தந்துள்ளார். புகழ்பாடி உள்ளார்.
 கவிஞர் அமுதபாரதியை ஹைக்கூ கவிஞர்களின் முன்னோடி என்கிறார். கவிஞர் மு. முருகேசை ஹைகூ பொதுமக்களிடையே பரவியதற்குக் காரணம் என்கிறார். மிகச்சிறந்த மரபுக்கவிஞர். இலக்கணம் நன்கு அறிந்தவர் என சி.விநாயகமூர்த்தியைக் குறிப்பிடுகிறார். புகழ் பெற்ற ஹைக்கூக்களை எழுதுவதில் வல்லவர் என கவிமுகிலை அறியச்செய்கிறார். வித்தியாசமாகவும் புதுமையாகவும் சிந்திப்பவர் கன்னிக்கோயில் ராசா என்கிறார். புதுவைத்தமிழ்நெஞ்சனைப் பற்றிக் குறிப்பிடும் போது ஒரு பகுத்தறிவுவாதி என்றும் இனஉணர்வு மிக்கவர் என்றும் அடையாளப்படுத்துகிறார். சோர்வில்லா உழைப்பாளி சிறந்த சிந்தனைவாதியாக வசீகரனைக் காட்டியுள்ளார். ஹைகூ உலகில் தனிஇடம் பிடித்தவர் நந்தவனம் சந்திரசேகரன் என்கிறார்.

ஒவ்வொரு ஹைகூவாளர்களின் தனித்தன்மையை அறிந்து கூறியுள்ளார். ஹைகூத் தொகுப்புகள் மீதான பற்றுடன் ஹைகூவாளர்களுடனான தொடர்பையும் வெளிப்படுத்தியுள்ளார். ஒரு விமர்சனத்தில் ஹைகூக்களை பட்டிமன்றம் மூலம் பிரபலப்படுத்தியவர்; முனைவர் இரா.மோகன் என்கிறார். தொகுப்பை விமர்சிக்கும் கவிஞர்.ஹைகூக் குறித்து தன் சிந்தனைகளை விமர்சனத்தின் ஊடாக விரவியுள்ளார். ஹைகூவிற்கான இலக்கணங்களையும் எழுதி உள்ளார். அவை :

1.ஹைகூவில் தேவையற்ற சொற்கள் இருக்கக் கூடாது.

2.ஹைகூ மிக நேர்த்தியாக நுட்பமாகவும் இருக்க வேண்டும்.

3.ஹைகூ வாசிக்கும் போதே காட்சியாக விhயவேண்டும்.

4.ஹைகூ வாசகன் மனதில் எண்ண அலைகளை ஏற்படுத்த வேண்டும். மாற்றத்தை உண்டாக்க வேண்டும்.

5. ஹைகூ சின்னதாக இருக்கும் பெரிய அற்புதம்.

6.ஹைகூ வாசகனையும் படைப்பாளியாக்கும் ஆற்றல்பெற்றது.

7.ஹைகூ வியப்பை உண்டாக்க வேண்டும்.

8.ஹைகூ  மூன்றுவாயில்  மட்டுமே இருக்க  வேண்டும்.

ஹைகூவின் சிறப்புகளையும் பண்புகளையும் எடுத்துக் கூறியவர். ஹைகூவாளர்களையும் பாராட்டியதுடன் சில ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.

பட்டாம்பூச்சி, பனித்துளி தவிர்த்து ஹைகூ எழுத வேண்டும்.

தொகுப்பில் உள்ள ஹைகூக்களில் தனக்குப் பிடித்தவை தான் இரசித்தவைகளை  எடுத்துக் காட்டியுள்ளார். ஹைகூ என்ன சொல்கிறது எதைக் குறிக்கிறது என விளக்கமளித்து வாசகர்களையும் ரசிக்கத் துண்டியுள்ளார்.

கவிஞர் எடுத்துக்காட்டிய கவிதைகளில் சில எடுத்துக்காட்டுக்கள்.

                ‘கவியும் இருட்டு
                கடைசி சொட்டில்
                மெழுகின் உயிர்’                      (மு.முருகேஷ்)

                ‘விற்காத புக்களின்
                தொலையும் மனம்
                சருகாகும் வாழ்வு’                     (குமாரராசன்)

     ‘நிசப்தமான வீதி
     அதிர்ந்து பரவுகிறது
     இராப் பிச்சைக்காரன் குரல்’            (சி.பி)

‘விரலில் மாட்டியிருந்தது
     அதிர்டக்கல் மோதிரம்
     துண்டிக்கப்பட்டகை.                  (ம.ஞானசேகரன்)

‘பவளத்தில் படகு
   ஏறத்தான் ஆளில்லை
     பிறை நிலா’                          (சி.விநாயகமூர்த்தி)

‘முடிகின்றது
     அறியும் முன்
                வாழ்க்கை’                          (புதுவை ஈழன்)

‘மணமக்கள் தேவை
                விளம்பரத்தில்
                சாதிதேடும் விழிகள’                  (க.கோ.ராசா)

‘பொதிக் காளை
         லாடம் கழற்றப்பட்டது
                அடிமாட்டுச் சந்தை’                    (அருணாசலச்சிவா)

‘சுள்ளென்ற வெயில்
        வரிசையில் குழந்தைகள்
                எப்ப வருவார் அமைச்சர்’                   (வசீகரன

படைப்பாளிக்கு மரணம் இல்லை. படைப்புகள் நிலைக்க படைப்பாளி நிலைப்பான் கவிஞர்கள் என்றால் வானத்தில் இருந்து இறங்கி வந்தவர்கள் அல்ல. தங்கம் விலை ஏற ஏற நாட்டில் கொலை, கொள்ளை வன்முறை எண்ணிக்கையும் உயருகின்றது என்பன போன்ற பொதுவான கருத்துகளையும் விமர்சனத்தினிடையே  பதிவித்துள்ளார்.

ஹைகூ ஆற்றுப்படை என்னும் இத்தொகுப்பு ஹைகூ விமர்சனங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள்