தொலைக்காட்சி நீ பேசுவது சரியா? கவிஞர் இரா. இரவி.





தொலைக்காட்சி நீ பேசுவது சரியா?
கவிஞர் இரா. இரவி.
******
தினமும் தமிழ்க்கொலை நடக்குது தொலைக்காட்சியில்
தமிங்கிலமே எல்லோரும் பேசி வருகின்றனர்!

ஆங்கிலம் கலந்தே கதைத்து வருகின்றனர்
அழகு தமிழை நாளும் சிதைத்து வருகின்றனர்!

கேள்வி கேட்க ஆளே இல்லை என்பதனால்
கண்டபடி பேசி நாளும் உளறி வருகின்றனர்!

தொலைக்காட்சி இன்று தொல்லைக்காட்சியானது
தொலைத்து வருகின்றனர் தமிழ்ப் பேச்சை!

பார்த்துப் பார்த்து மற்றவரும் பேசுகின்றனர்
பரவி வருகின்றது நோய் போல தமிங்கிலம்!

இருட்டை நைட் என்றால் விடியாது உன் வாழ்க்கை
என்று பாடினார் உணர்ச்சிக் கவி காசி ஆனந்தன்!

நல்ல தமிழோடு ஆங்கிலம் கலப்பது ஏனோ?
நாவை தமிழ் பேசிட பழக்கி வையுங்கள்!

தணிக்கை எதுவும் இல்லாத காரணத்தால்
தரம் தாழ்ந்து இரட்டைப் பொருளில் பேசுகின்றனர்!

ஆங்கிலம் கலந்து பேசுவது மடமை
ஆங்கிலத்தைக் கலப்பது கலப்படக் குற்றமாகும்!

உணவுப் பொருளில் கலப்படம் தண்டனைக்குரியது
உன்னத தமிழில் கலப்படத்திற்கும் தண்டனை தருவோம்!

தமிழை தமிழாகப் பேசிட அறிவுறுத்த வேண்டுமா?
தமிழ்நாட்டில் தான் தினமும் தமிழ்க்கொலை நடக்குது!

ஈழத்தமிழரைப் பாருங்கள் இன்னல் வாழ்விலும்
இனிய தமிழில் பேசி தமிழைக் காக்கின்றனர்!

உலகின் முதல் மொழியை உருக்குலைய விடலாமா?
உலகம் உன்னை மதிக்காது உடன் திருந்திடு!

முதல் மனிதன் பேசிய தமிழைச் சிதைக்காதே
முத்தமிழில் வேறுமொழியை நீ கலக்காதே!

எல்லா வளமும் உள்ள மொழி தமிழ்மொழி
ஏன் நீ பிச்சை எடுக்கின்றாய் பிறமொழியில்!

ஆங்கிலத்தோடு தமிழ் கலந்து உலகில்
ஆங்கிலேயன் பேசுவானா? உடன் திருந்திடு!

கருத்துகள்