சீதக்காதி ! நடிப்பு : விஜய்சேதுபதி ! இயக்கம் 'பாலாஜி தரணிதரன் திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !



சீதக்காதி !

நடிப்பு : விஜய்சேதுபதி !
இயக்கம் 'பாலாஜி தரணிதரன் திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


******
     விஜய்சேதுபதியின் 25வது படம். பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.  பல வெற்றிப்படங்களைத் தந்தவர்.  சிறிய பட்ஜெட் படங்களுக்கு பெரிய இலாபம் ஈட்டித் தந்தவர்.  பந்தா இல்லாத எளிமையான நடிகர்.  உதவிடும் உள்ளத்திற்கு சொந்தக்காரர்.

இந்த படத்தில் நாடகக் கலைஞர் ஆதிமூலமாகவே வாழ்ந்துள்ளார்.  பல்வேறு பாத்திரங்களில் வந்து நடித்து உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறார்.  பாராட்டுக்கள்.  70 வயது முதியவராகவும் நடித்துள்ளார்.  நன்று. படத்தில் 20 நிமிடங்கள் மட்டும் இவருடைய காட்சி. அதன்பின் இவரைப் பற்றியே பலரும் பேசிடும் காட்சி.

பொதுவாக குருவின் பாதிப்பு சீடர்களுக்கு வரும் என்பது இயல்பு.  நாடகக் கலைஞர் ஆதிமூலம் பயிற்றுவிக்கும் நாடக நடிகர்களுக்கு ஆதிமூலத்தின் பாதிப்பு வருவது இயல்பு.  நாடகக்கலை கலைஞர்கள் அழிவதில்லை, நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி அவர்கள் மறைந்து விட்டாலும் அவரது கலை, நடிப்பு மறையவில்லை. இன்னும் நம்மிடையே அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். 

 அவரது பாதிப்பு மற்ற நடிகர்களிடம் வந்து கொண்டுதான் இருக்கிறது.  ஆனால் அவருக்கு இணையான ஒருவர் இல்லை. அவருக்கு இணை அவர் மட்டும் தான்.  அதுபோல ஆதிமூலம் நல்ல நடிகர்.  பல சீடர்களை உருவாக்குகின்றார்.

திரைக்கதையில் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்  கணினி யுகத்தில் காதில் பூ சுத்தம் கதையாக உள்ளது. நாடகக்கலைஞர் ஆதிமூலம் இறந்து விடுகிறார். பின்னர் அவரிடம் நாடகம் பயின்ற சீடனின் உடலில் வந்து இறங்கி அவரது ஆன்மா நடக்கின்றது என்று உண்மை போல பார்ப்பவர்களின் காதில் பூ அல்ல மாலையே சுற்றி உள்ளனர்.

     ‘ஆன்மா’’' வந்து நடிக்கின்றது என்பது கற்பனை. பொய் உண்மை அல்ல. இதற்கு பாரதிராசாவை எல்லாம் பயன்படுத்தி பொய்யிற்கு வலு சேர்த்து உள்ளனர்.

     ஆன்மா என்பதெல்லாம் கற்பிக்கப்பட்ட கற்பனை. மௌலி ஆதிமூலத்திடம் மேலாளராக இருந்தவர்.  ஆதிமூலம் இறந்த பின்னும் அவரது கால்சீட் பார்த்து தேதி வழங்கி ஆதிமூலம் இந்த நடிகர் உடம்பில் புகுந்து வந்து நடிப்பார் என்று சொல்வது.  சிரிப்பை வரவழைக்கின்றது.

     இப்படி புகுந்து நடித்து வரும் ஆதிமூலம், கதை சொன்னபடி எடுக்கவில்லை மாற்றி எடுக்கின்றனர் என்று தெரிந்தவுடன் ஆதிமூலம் ஆன்மா நடிகர் உடம்பிலிருந்து சென்று விடுகிறதாம். பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும் என்பார்கள். பொருத்தமில்லாத பொய்கள் படத்தில் நிரம்ப உள்ளனர்.

     ஆசி, ஆத்மா ஏன் போனது எங்கே போனது எப்படி போனது என தொலைக்காட்சியில் விவாதங்கள் நடைபெறுகின்றன.

     இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்காடு-கின்றனர்.  நீதிபதியாக நடித்துள்ள மகேந்திரன் அவர்கள் படம் முடியும் போது நீண்ட போதனை செய்கிறார்.

     சிறுகுழந்தை கூட நம்பாத கதையை வைத்து நல்ல நடிகர் விஜய் சேதுபதியை வீணடித்து உள்ளனர்.  அவர் இறப்பிற்குப்பின் திரைப்படம் நல்ல காமெடியாகி விட்டது.

     இறந்தவர் ஆன்மா, மற்ற ஒரு நடிகரின் உடம்பில் புகுந்து எப்படி நடிக்கும்.  பகுத்தறிவிற்கு ஒப்பாத கதை.  பணம் பண்ணுவதற்காக இல்லாத பேயை இருப்பதாகக் காட்டிடும் இயக்குநர்கள் போலவே, இல்லாத ஆன்மாவை இருப்பதாக்க் காட்டி மக்களை ஏமாற்றி மூடநம்பிக்கையில் ஆழ்த்தி உள்ளனர்.

     பகுத்தறிவாளர் அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்த திரைப்படத்தை மூட நம்பிக்கை பரப்பிட பயன்படுத்துவது, கண்டிக்கத்தக்கது. விஜய்சேதுபதி, மௌலி, மகேந்திரன் தவிர மற்றவர் எல்லோருமே புதுமுகங்களாக இருப்பதால் நன்றாக நடித்தாலும் எடுபடவில்லை விஜய்சேதுபதியை வீணடித்து உள்ளனர்.

     நாடகக் கலைஞர் ஆதிமூலம் தன் பேரனுக்கு மூளையில் கட்டி அறுவைச் சிகிச்சைக்கு பணம் வேண்டுமென்று மகள் கேட்டதும், உடன் பணம் தர முடியாமல் வாடுவது, இரவில் பேரனின் தலையைக் கோதுவது என பாசத்தில் நன்கு நடித்து உள்ளார், பாராட்டுக்கள்.

     அந்தக் காலத்தில் நாடகம் பார்க்க நல்ல கூட்டம் வந்த்து. இப்போது கூட்டமே வருவதில்லை. செய்தித்தாளில் விளம்பரம் தந்தாலும் பத்துப்பேர் தான் கூடுதலாக வந்தனர்.  உலகமயம், அலைபேசிமயம், திரைப்படங்கள் காரணமாக நாடகம் என்பது நலிந்து விட்டது என்பதை நன்கு காட்சிப்படுத்தி உள்ளனர்.

     ஆதிமூலம் இறந்தவுடன் திரைக்கதையும் இறந்து விட்ட்து என்றே சொல்ல வேண்டும். நல்ல நடிகரின் நடிப்பை சொதப்பலான திரைக்கதையின் மூலம் வீணடித்து விட்டனர்.

     ஒரே காட்சியை ஒரே வசனத்தை திரும்பத் திரும்பக் காட்டி பொறுமையை சோதித்து விட்டனர். இனிமேலாவது விஜய் சேதுபதி அவர்கள் நல்ல திரைக்கதையாக தேர்ந்தெடுத்த நடிக்க வேண்டும். 24 படங்களில் ஈட்டிய நல்ல பெயரை 25 படத்தின் திரைக்கதையின் மூலம் சொதப்பி விட்டனர்.  கவனம் தேவை விஜய் சேதுபதி அவர்களே!

.
.

கருத்துகள்