முயற்சி உடையார்! வளர்ச்சி அடைவார்!! நூல் ஆசிரியர் : கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு, நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.





முயற்சி உடையார்! வளர்ச்சி அடைவார்!! 

நூல் ஆசிரியர் : கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு, 

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  

வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017. 
பக்கம் : 160, விலை : ரூ. 120  
******

      ‘முயற்சி உடையார் வளர்ச்சி அடைவார்’ நூலின் தலைப்பே தன்முன்னேற்ற சிந்தனை என்பதை பறைசாற்றி விடுகிறது.  நூலாசிரியர் கவிஞர் கே.ஜி.ராஜேந்திரபாபு அவர்கள் வங்கியில் அலுவலகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.  இலக்கிய ஈடுபாடு மிக்கவர்.  மரபு, புதுக்கவிதை, ஹைக்கூ கவிதை மூன்றும் வடிக்கும் ஆற்றல் மிக்கவர். கட்டுரையிலும் தனி முத்திரை பதித்து வருபவர்.  பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார்.

      தமிழாகரர் முனைவர் இரா.மோகன் அவர்கள் அணிந்துரை வழங்கி உள்ளார்.  வரவேற்பு தோரணமாக உள்ளது.  இந்த நூலில் 37 கட்டுரைகள் முத்தாய்ப்பாக உள்ளன.  புகழ்பெற்ற வானதி பதிப்பகம் சிறப்பாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது.  புதுகைத் தென்றல் ஆசிரியர், புதுகை மு. தருமராசன் மகிழ்வுரை நல்கி உள்ளார்.

      முயற்சி உடையார் வளர்ச்சி அடைவார் – இந்நூலின் தலைப்பிலான கட்டுரை, முதல் கட்டுரையாக உள்ளது.  தினமணி நாளிதழில் பிரசுரமான கட்டுரை “தோல்வி என்பது தேவையான முயற்சியைச் செய்யாதது தான், தோற்றவுடன் வாழ்க்கையே தொலைத்து விட்டதாக சோகப்பட வேண்டாம்”.  இந்த வைர வரிகளை இன்றைய இளைய தலைமுறையினர் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.  தோல்விக்கு துவளாத நெஞ்சம் வேண்டும்.

      ‘சுறுசுறுப்பைச் சுழல் விடுவோம்’ என்ற கட்டுரையில் சோம்பலை விடுத்து சுறுசுறுப்பை பெற்றால் வாழ்வில் முன்னேறலாம், சாதிக்கலாம் என்பதை நன்கு வலியுறுத்தி உள்ளார்.  நூலாசிரியர் கவிஞர் என்பதால் சொற்கள் முழுவதும் கவித்துவமாக வந்து விழுந்து உள்ளன.

      “எடுத்த செயலில் வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வை ஏற்றுக் கொண்டால் மலைப்பாம்பின் சக்தி மனத்துக்கு வந்து விடும்.  மலையளவு காரியத்தையும் செய்து முடிக்கும் மாபெரும் ஆற்றல் மனிதனுக்கு வந்து விடும்”.

தன்னம்பிக்கையின் அவசியத்தை சிறப்புற எடுத்து இயம்பி உள்ளார்.  முயன்றால் முடியாதது எதுவுமில்லை, முயற்சி திருவினையாக்கும், முயலாமை தோற்கடிக்கும் என பல்வேறு மேற்கோள்களுடன் தன்னம்பிக்கை வளர்க்கும் கட்டுரைகள் வடித்து உள்ளார்.  பாராட்டுக்கள்.

வறுமை நிலைக்கு பயந்து விடாதே, முயற்சி செய், பயிற்சி செய், உழை, முன்னேறலாம் என்ற கருத்தை கட்டுரைகளில் விதைத்து உள்ளார்.

“வறுமை என்ன வறுமை! நினைத்தால் வறுமை நிலையை நிர்மூலம் ஆக்கிவிடலாம். திறமையைக் கூர் தீட்டுவதன் மூலம், செயலில் தீவிரமாய் ஈடுபடுவதன் மூலம் திறமையும் செயலும் தான் வெற்றியின் மூலம்.”

இந்தக் கட்டுரையும் தினமணி நாளிதழில் பிரசுரமான கட்டுரை. மாணவர்கள் மனதில் கொள்ள வேண்டிய கருத்துக்களை சுவையான மேற்கோள்களுடன் எழுதி உள்ளார்.  நூல் படிக்கும் வாசகர்களுக்கு தன்னம்பிக்கை தரும் விதமாக கட்டுரைகள் வடித்துள்ளார்.  பாராட்டுக்கள்.

குழந்தைகளை மதிக்க வேண்டும், அவர்களின் கருத்துக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.  ‘குழந்தைகள் எண்ணத்தை யாரறிவார்?’ கட்டுரையில், “குழந்தைகள் உணர்வுகளைப் பெரியவர்கள் மதிக்கும் போது தான் பிறரின் உணர்வை மதிக்க வேண்டும் என்ற உணர்வைக் குழந்தை பெறும். மதிக்கப்படும் போது குழந்தையின் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சி! மலர்ச்சி!! ஆ! அலாதியான அழகானது”.

வாழ்வியல் கருத்துக்களை நூல் முழுவதும் வழங்கி உள்ளார்.  இலக்கிய விருந்து வைத்துள்ளார்.  கவலை எனும் நோய் தீர்க்கும் மருந்தாக நூல் உள்ளது. கட்டுரையில் திருக்குறள், கலிங்கத்துப்பரணி, முத்தொள்ளாயிரம், மகாகவி பாரதியின் வைர வரிகள் என மேற்கோள் காட்டி வடித்துள்ளார்.

‘ஜெயகாந்தனின் இலக்கியச் சிந்தனைகள்’ கட்டுரையில்,

“சுயம் மிகுந்தவர் நயத்துடன் நறுக்கென்று
      எழுதியவர் கதை வேந்தர்க்கு ஜெயகாந்தன்”

இரண்டே வரிகளி ஜெயகாந்தனின் ஆளுமையை நன்கு உணர்த்தி உள்ளார். அவரது கருத்துக்களை மேற்கோள் காட்டி வடித்த கட்டுரை சிறப்பு.  கட்டுரையின் முடிப்பில் ஜெயகாந்தன் வரிகளோடு முடித்தது முத்தாய்ப்பு. 

“சரசுவதியின் அருள் பெற்று, அவள் கைப்பிடித்து நடந்த எண்ணற்ற கலைக்குழந்தைகளின் கடைசிப் புதல்வனாகவேனும் நான் சென்றால் போதும்.  அந்த லட்சுமிதேவி என் பின்னால் கைகட்டி வருவதானால் வரட்டும். வராவிட்டால் போகட்டும் என்று பேனா பிடித்தேன் நான்” என்று கம்பீரமாய் கவிதை நயத்துடன் சொன்னவர் ஜெயகாந்தன்.

‘போலித்தனங்கள்’ கட்டுரையில் சமுதாயத்தை படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

“சாதியை எதிர்த்துச் சண்டமாருதம் செய்வார்கள்
      தேர்தல் வந்தால் சாதி பார்த்துத் தொகுதியில்
      வேட்பாளர்களை நிறுத்துவார்கள்”.

“காயமே இது பொய்யடா” என்று சொல்லுகிற சாமியார்கள் காய்ச்சிய பாலில் கற்கண்டும், குங்குமப்பூவும் போட்டுக் குடித்துக் கொண்டிருப்பார்கள்.

இப்படி நடந்தால் நடக்கும் முரண்பாடுகளை கட்டுரைகளில் சுட்டிக் காட்டி உள்ளார். தித்திக்கும் தெலுங்குக் கவிதைகள் என்ற கட்டுரையில் நல்ல பல கவிதைகளை மேற்கோள் காட்டி உள்ளார்.

‘வள்ளுவரும் வள்ளலாரும்’ கட்டுரை சிறப்பு ஓடும் நதியினிலே ஒரு சில அலைகள் 4 கட்டுரைகள் இலக்கிய விருந்தாக உள்ளன.

‘புவியை அழகுபடுத்தும் பூ உழைப்பு’ கட்டுரை.

தீக்கோளமாய் இருந்த பூமியை அழகும்
      பூக்கோளமாய் ஆக்கியது யார்?

புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் அற்புத வரிகளை மேற்கோள் காட்டி வடித்த கட்டுரை சிறப்பு.

இந்த நூல் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களின் ஏற்பாட்டில் வெளியிடப்பட்டது.  இதற்காக நூலாசிரியர் பெங்களூரில் தமிழ்ச் சங்கத்தின் ஏரிக்கரை கவியரங்கின் பொறுப்பாளராக இருந்து மாதாமாதம் நடத்தி வருகிறார்.  இயங்கிக் கொண்டே இருக்கிறார் .பாராட்டுக்கள் 

.

கருத்துகள்