படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! நன்றி .இனிய நண்பர் முதுவை ஹிதாயத் (துபாய் )

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !
நன்றி .இனிய நண்பர் முதுவை ஹிதாயத் (துபாய் )
    வாழ்வாங்கு வாழ்ந்திடலாம் !
 
            [ எம் . ஜெயராமசர்மா --- மெல்பேண் --- அவுஸ்திரேலியா ]



    மனிதனது மனமெல்லாம் மதம்நிறைந்தே இருக்கிறது
    மதமகன்று போவதற்கு மதமொன்றே உரமாகும்
    மதமதனை மனிதவினம் மயக்கமுடன் நோக்குவதால்
    மதவாதம் மனிதனையே மாண்டுவிடச் செய்கிறது !

    யானைக்கு மதமேறின் பாகனையே கொன்றுவிடும்
    ஞானமின்றி இருப்பாரின் மதவெறியோ அழித்துவிடும்
    நானென்னும் ஆணவத்தால் நல்மதமும் கெடுகிறது
    நம்பினார் கெடுவதில்லை நால்வேதம் சொல்கிறது !


    பலமதங்கள் பலகருத்தைப் பலவழியில் பகன்றாலும்
    பாரிலுள்ள மதமனைத்தும் பாதகத்தை பகரவில்லை
    பண்புநிறை உள்ளமொடு பலருமே வாழ்கவென்று
    பக்குவமாய் சொல்லுவதை பலருமே கேட்பதில்லை !

 
    எந்த மதமானாலும் சொந்தம் கொண்டாடிடுங்கள்
    பந்தமுடன் மதம்சொல்லும் வழியினிலும் சென்றிடுங்கள்
    வெந்தழலில் வீழ்த்துகின்ற வேதனைகள் தவிர்த்துவிடின்
    எந்தமதம் ஆனாலும் எல்லோரும் போற்றிடுவார் !


    நதிகள் பலவிருந்தாலும் கலக்குமிடம் கடலன்றோ
    நம்மதங்கள் பலவிருந்தும் உணர்த்துமிடம் இறையன்றோ
    நாமதனை உணராமல் நாளுமே மதம்கொண்டால்
     நம்மனத்தில் மதமின்னும் நாளுமே வளருமன்றோ !


      விலங்கினுக்கும் மதமில்லை பறவைக்கும் மதமில்லை
      விளக்கதனில் விழுகின்ற விட்டிலுக்கும் மதமில்லை
      விவேகநிறை மனிதனுக்கோ மதம்நிறைய இருந்தாலும்
      விவேகமதைக் கைவிட்டு வேற்றுமையே காணுகிறான் !


    மதங்கள் பலவிருந்தாலும் மனம்சிறக்க வேண்டாமா
    மதவெறியை ஊட்டுவதால் மானிடமே மாண்டிடுமே
    மதமென்னும் கருவதனை புனிதமாய் கொண்டுவிடின்
    மதம்பிடிப்பார் நிலைமாறி வாழ்வாங்கு வாழ்ந்திடலாம் !

கருத்துகள்