உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்! கவிஞர் இரா. இரவி



உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்!
கவிஞர் இரா. இரவி
*****
      மனிதநேய மாமணி இனிய நண்பர் எம். பழனியப்பன் எம்.ஏ. அவர்கள் 13-01-2016 அன்று காலமானார்.  எதற்கும் கலங்காதவன், கலங்கினேன். இறுதி வணக்கம் செலுத்திட சென்ற போது அவரது தம்பி கோபி அழும்போது என்னையும் அறியாமல் எனக்கு அழுகை வந்தது.  என்னால் என்னைக் கட்டுப்படுத்த இயலவில்லை, அழுது விட்டேன்.என் வாழ்நாளில் நான் அழுத நாட்கள் மிகமிகக் குறைவு .

      எம். பழனியப்பன் அவர்களுக்கு பிறக்கும் போது பார்வை இருந்தது, இடையில் காய்ச்சல் வந்து பார்வை பறிபோனது.  இதனால் பார்வையின் பலன், பார்வையற்றவரின் துன்பம் இரண்டும் அறிந்த காரணத்தால் அகவிழி பார்வையற்றோர் விடுதி ஆரம்பித்து பார்வையற்ற மாணவ, மாணவியருக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் என தந்து உதவி பார்வையற்றவர்களின் வேடந்தாங்கலாக வாழ்ந்து வந்தார்.

      விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் இசை, கவிதை, பாடல், நாடகம், பேச்சுத்திறன், கணினி என பயிற்றுவித்து அவர்களை ஊக்கப்படுத்தி வந்தார்.  மாதம் ஒரு நாள் ஏதாவது விழா வைத்து பலரையும் ஊக்கப்படுத்தி வந்தார்.  வருடம்தோறும் ஆண்டுவிழா நடத்தி விடுவார்.  வருடாவருடம் அவரும் நானும் ரத்ததானம் வழங்கி ரத்ததான முகாம் தொடங்கி வைத்தி இருக்கிறோம்.  விழிதான விழிப்புணர்வு முகாமும் நடத்தி விடுவார்.

      என் வாழ்நாளில் மறக்க முடியாத இனிய நண்பர் பழனியப்பன் உற்ற நண்பரின் மரணம் என் மனதை உலுக்கி விட்டது.  நினைவு நாடாக்கள் சுற்றிக் கொண்டே இருக்கின்றது.

      அகவிழி பார்வையற்றோர் விடுதியில் தங்கி இருந்து அமெரிக்கன் கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் உள்ளனர்.  அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் முனைவர் முத்துராஜா அவர்கள், தீபாவளி திருநாள் புத்தாடை வழங்கும் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

      இனிய நண்பர் காவல்துறை உதவி ஆணையர் கவிஞர் முனைவர் ஆ. மணிவண்ணன் அவர்களை விடுதிக்கு அழைத்தேன்.  சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு சிறப்புரையாற்றினார்.

      இப்படி நான் அறிந்த நண்பர்கள் பலரை விடுதிக்கு அறிமுகம் செய்து வைத்தேன். இனிய நண்பர் கவிஞர்
இரா. கல்யாண சுந்தரம் அவர்களை அறிமுகம் செய்து வைத்தேன்.  அவரது நெருங்கிய நண்பர் தொழில் அதிபர் மூலம் வருடாவருடம் விடுதி மாணவ, மாணவியருக்கு புத்தாடைகள் வழங்கி வந்தார்.

      இளைய நேதாஜி என்று போற்றப்படும் வே. சுவாமிநாதன் அவர்களின் தந்தை திரு. வேலுச்சாமி விமானப்படை   வீரர் ( ஒய்வு ) அவர்களை அறிமுகம் செய்து வைத்தேன்.  அவர் அரிசி மூடை வழங்கி உதவினார்.

      என்னுடைய பிறந்த நாள் அன்று நான் கோவில் செல்வதில்லை.  ஏனெனில் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் கடந்த சில வருடங்களாக பிறந்த நாள் அன்று அகவிழி பார்வையற்றோர் விடுதிக்கு சென்று இனிப்பு வழங்கி வருவதை வாடிக்கையாக வைத்து இருந்தேன்.

      என்னுடைய உறவினர்கள் பலரையும் இறந்தவர்கள் நினைவு நாள் அன்று விடுதி மாணவ மாணவியருக்கு உணவு வழங்கி நன்கொடை கொடுக்க வைத்தேன்.

      திரு. எம். பழனியப்பன் அவர்கள் பார்வை இல்லாவிட்டாலும் மன உறுதி மிக்கவர்.  அவர் வாடகைக்கு விடுதி பிடித்து இருந்த போது பலரும் நெருக்கடி தருவார்கள்.  இதற்காகவே குறுகிய காலத்தில் இடம் மாறி மாறி கஷ்டப்பட்டார்.  

கடைசியாக புதூர் இராமவர்மா நகர் சொந்த வீட்டில் விடுதி அமைத்து வெற்றிகரமாக நடத்தி வந்தார். அதிகாலை 5 மணிக்கு எழுந்து தொலைபேசி பூத்திற்கு சென்று கவனித்து வந்தார்.  அவரை பார்க்கும் போதெல்லாம் எனக்கு தன்னம்பிக்கை பிறக்கும்.  அவர் நடத்தும் அத்தனை விழாவிற்கும் என்னை மறக்காமல் அழைத்து விடுவார்.  நான் தவறாமல் எல்லா விழாக்களிலும் கலந்து விடுவேன்.புலம் பெயர்ந்த தமிழர் இனிய நண்பர்  தம்பி புவனேந்திரன் வழங்கிய ஊன்றுகோல்கள் விடுதி  மாணவர்களுக்கு வழங்கி வந்தேன்

திரு. பழனியப்பன் அகவிழி பார்வையற்றோர் விடுதி வளர்ச்சி நிதிக்காக, இசை நிகழ்ச்சி நடத்த விரும்பினார் .என் ஹைக்கூ கவிதைகளின் ரசிகர் அருட் செல்வர் சங்கர சீத்தா ராமன் அவர்களிடம் அன்பு வேண்டுகோள் வைத்தேன் இலவசமாக அக்ரிணி வாளகத்தில் மேடை தந்தார் .இசை நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது .

      திரு. பழனியப்பன் அவர்களுக்கு அவரது குடும்பமே ஒத்துழைப்பு தந்தது பெரிய வரம் என்றே சொல்ல வேண்டும்.  அவரது அம்மா, தம்பி திரு. கோபி, அவரது மனைவி, மகள் யாழினி என்று அனைவருமே நன்கு ஒத்துழைப்பு நல்கி வந்தனர்.  ஒவ்வொரு விழாவிற்கும் குடும்பமே சேர்ந்து நின்று பணியாற்றுவார்கள்.  

பழனியப்பன் மிகச்சிறந்த மனிதர், கோபம் கொள்ள மாட்டார்.  பொதுநலனில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர்.  இப்படி ஒரு மனிதரைக் காண்பது அரிது.  இவரின் சிறந்த தொண்டுள்ளம் கண்டு வியந்து, எனது நூல் வெளியீட்டு விழாவில், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்த திரு. மருதமுத்து அவர்களின் கரங்ககளால், திரு. பழனியப்பன் அவர்களுக்கு " மனிதநேய மாமணி " விருது வழங்கினேன்.  இந்த விழாவிற்கு தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களும் வந்து இருந்தார்கள்.

      தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களை அகவிழி பார்வையற்றோர் விடுதிக்கு அழைத்தேன்.  உடன் சம்மதித்து வருகை தந்து சிறப்புரையாற்றி நெகிழ்ந்து எல்லாருக்கும் என் செலவில் தேநீர் வழங்குங்கள் என்று பழனியப்பன் அவர்களிடம் நன்கொடையும் வழங்கி பேசி வந்தார்கள்.

      சிறந்த சிந்தனையாளர், எழுத்தாளர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் உரைகள் அடங்கிய குறுந்தகடுகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் வெளியிட்டு இருந்த்து.  அவற்றை வாங்கி விடுதிக்கு நன்கொடையாக வழங்கினேன்.  மாணவ, மாணவியர் உரை கேட்டு பயன் பெற்றனர்.

      பண்பலை வானொலி அறிவிப்பாளர்கள் திரு. பாலா, திருமதி செல்வகீதா உள்பட பலரும் அகவிழி விடுதி விழாக்களுக்கு வந்து சிறப்பித்து உள்ளனர்.நானும் கலந்து கொண்டேன் .

      மாமனிதர் அப்துல் கலாம் இழப்பிற்கு பிறகு, மிகவும் மனம் வருந்திய இழப்பு .என்னால் அவரை மறக்க முடியாது .எனக்கு உந்து சக்தியாக வாழ்ந்தவர் . ஈடு செய்ய முடியாத பேரிழப்பு இனிய நண்பர் எம். பழனியப்பன் அவர்களின் மறைவு. 

42 வயதில் நெஞ்சுவலி காரணமாக இறந்து விட்டார்.  அவர், மற்றவர்கள் நலன் பேணியதில், தன் நலம் மறந்து விட்டார்.  அவர் உடல் நலம் பேணி இருந்தால் இந்த இழப்பு நேர்ந்து இருக்காது.  அவரை இழந்து வாடும் விடுதி மாணவ, மாணவியருக்கும், குடும்பத்தாருக்கும், இரவோடு இரவாக தகவல் தந்த விடுதி மேலாளருக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

http://www.eegarai.net/t121810-topic
http://eraeravi.blogspot.in/2015/08/blog-post_18.html
-- http://eraeravi.blogspot.nl/2015/10/blog-post_304.html


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்