உயிரைத் தேடி ! கிராமம் நோக்கி ஒரு பயணம் ! நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை. thirugeetha@gmail.com நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
உயிரைத் தேடி !
கிராமம் நோக்கி ஒரு பயணம் !
நூல்ஆசிரியர் : மூத்த
பத்திரிகையாளர் ப. திருமலை.
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
புதிய வாழ்வியல் பதிப்பகம், 17, 1-வது மெயின் ரோடு, கோட்டூர் கார்டன், சென்னை-600
086. பேச : 044 42072076, மின்னஞ்சல் : puthiyavazhviyal@gmail.com பக்கங்கள் : 136, விலை : ரூ. 70.
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
*****
நூல்ஆசிரியர் மூத்த பத்திரிகையாளர்
ப. திருமலை அவர்கள் மதுரையின் பெருமைகளில் ஒன்றாகி விட்டவர்,பண்பாளர்,
மிக
அமைதியானவர் ,அடக்கமானவர் ,அதிர்ந்து பேசாதவர் .எழுத்தால் தீமைக்கு எதிராக
கர்ஜனை செய்பவர். எழுத்தின் வலிமையை நிருபித்து காட்டியவர் .
இந்தியாவின் முதுகெலும்பு கிராமம். கிராமங்களில் வாழ்கிறது
இந்தியா என்றார் காந்தியடிகள். உலகமயம்,
தாராளமயம், புதிய பொருளாதாரம் என எத்தனை மாற்றங்கள் வந்தாலும் மாறாத ஒன்று
கிராமத்து அன்பு. நகர வீதிகளைப் போல சூது
வாது அறியாத வெள்ளந்தி மக்கள் கிராமவாசிகள்.
அப்படிப்பட்ட மனிதர்கள் வாழும் கிராமங்களுக்கு நேரடியாகப் பயணப்பட்டு
வடித்த ஆவணம் தான் இந்நூல்.
நூலாசிரியர்
மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை அவர்களுக்கு பாராட்டுக்கள். அவரது கடின
உழைப்பை உணர முடிகின்றது. திரு. ஜெ. ஜெயகிருஷ்ணன் அவர்களின்
பதிப்புரையும், மனிதத்தேனீ இரா. சொக்கலிங்கம் அவர்களின் அணிந்துரையும் மிக
நன்று. நூலாசிரியர் ப. திருமலை என்பதை பண்பாளர்
திருமலை என்றும் பொருள் கொள்ளலாம்.
பாரம்பரியம் என்ற பிரிவில் 10 கட்டுரைகளும், விசித்திர விழாக்கள்
என்ற பிரிவில் 7 கட்டுரைகளும், கலை என்ற பிரிவில் 5 கட்டுரைகளும் ஆக மொத்தம் 22
கட்டுரகள் நூலில் உள்ளன. உறவை வளர்க்கும்
வெற்றிலை என்ற முதல் கட்டுரையில் கிராமங்களில் வெற்றிலைக்கு தரும் முக்கியத்துத்தை
நன்கு விளக்கி உள்ளார். வெற்றிலை திருவிழா
பற்றியும் எழுதி உள்ளார். கிராமத்தில்
வாக்கு தவறாமல் இருக்க வெற்றிலை மாற்றிக் கொள்ளும் பழக்கம் என்பது சத்தியத்தின்
குறியீடாக இன்றும் இருக்கும் வழக்கத்தை எழுதி உள்ளார். இழந்து வரும் அடையாளத்தையும், பண்பாட்டையும்,
பாரம்பரியத்தையும் நூல் முழுவதும் படம்பிடித்துக் காட்டி உள்ளார்.
இந்த நூல் வெளியீட்டு விழாவின் போது கவியரசு கண்ணதாசன் நற்பணி
மன்றத்தின் தலைவர் மனிதத்தேனீ இரா. சொக்கலிங்கம் அவர்கள் குறிப்பிட்டது போல, “136
பக்கங்கள் ரூ. 70க்கு தருவது அடக்கவிலை தான்” என்பது உண்மை.
உலகமயத்தின் பயனாக வந்து உணவுப் பழக்கத்தின் விளைவாக நடந்த
விளைவை உணர்த்தும் வைர வரிகள்.
“கடுமையான உடல் உழைப்பும், சிறுதானிய உணவுகளும் தான்
சிறுவட்டக்கல்லை தூக்கும் அளவுக்கு அன்றைய மனிதர்களுக்கு பலத்தைக் கொடுத்தது. ஆனால் இன்று சத்துக்கள் குறைந்த சக்கை உணவுகளை,
சுவைக்காகவே சாப்பிடுகிறோம் எனக காரணம் சொல்கிறார்கள் கிராமத்து பெரியவர்கள்”.
ஜல்லிக்கட்டு பற்றி விரிவாக கட்டுரை உள்ளது. ஜல்லிக்கட்டின் காரணமாக விதவையான பல பெண்களை
கிராமங்களில் பார்த்திருக்கிறேன். எனக்கு
தமிழ் உணர்வு, தமிழின உணர்வு, தமிழ்ப்பண்பாடு எல்லாவற்றிலும் பற்று இருந்தாலும்,
சில உயிர்கள் பறிக்கும் ஜல்லிக்கட்டில் எனக்கு உடன்பாடு இல்லை. நூலாசிரியருக்கு உடன்பாடு உள்ளது.
கிராமங்களில், கோயில் காளைகளை கடவுளாக வணங்கும் வழக்கத்தை
சித்திரமாக தீட்டி உள்ளார். வழக்கொழிந்து வரும் பூம்பூம் மாடு பற்றியும் எழுதி
உள்ளார். கிராமத்துப் பாட்டிகளின்
காதுகளில் ஆடும் பாம்படம் (தண்டட்டி) பற்றி புகைப்படங்களுடன் கட்டுரை உள்ளது. எப்படி வளர்க்கிறார்கள் என்ற விபரமும் உள்ளது.
இன்று நகர் முழுவதும் உயிருக்கு உலை வைக்கும் மட்டை விளையாட்டு
பைத்தியம் பிடித்து குழந்தைகள் விளையாடி வருகின்றனர். ஆனால், உயிருக்கு ஆபத்து இல்லாத உடற்பயிற்சி
மிக்க கிராமத்து விளையாட்டுக்களான மந்திக்குஞ்சு, பூசணிக்காய், விவசாயம் சார்ந்த
விளையாட்டு, காலாட்டுமணி, கையாட்டுமணி, ஒரு குடம் தண்ணீர் ஊற்று இப்படி
எண்ணிலடங்கா விளையாட்டுகள் பற்றிய விபரங்கள் உள்ளன. தொலைக்காட்சியின் ஆதிக்கம் காரணமாக நல்ல
விளையாட்டுகளும், கிராமங்களில் வழக்கொழிந்து வருகின்றன என்பது உண்மை.
ஆலவிளாம்பட்டி கிராமத்தில் வரதட்சணைக்கு தடை உள்ளது. மது குடித்தால் மொட்டை. கட் அவுட் வைக்க தடை
இப்படி முன்மாதிரி கிராமமாக உள்ளதை பாராட்டி உள்ளார்.
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் (நெகிழி) பிளாஸ்டிக்கிற்கு
தடை விதித்துள்ள மதுரையிலிருந்து முப்பது கி.மீட்டர் தொலைவில் இருக்கும்
கீழநாச்சிக்குளம் பற்றி எழுதி உள்ளார். முனியாண்டி விலாஸ் உணவு விடுதி பாரம்பரியம்
உள்ளது. பொங்கல் என்பது அறுவடைத்
திருவிழா, தமிழர் திருநாள், மதங்கள் கடந்து இஸ்லாமியரும் பங்குபெறும் சிறப்பை
எழுதி உள்ளார்.
அழிந்து
வரும்
கிராமியக்கலைகள் பற்றியும் நேரடியாகச் சென்று நாடக நடிகர்கள், கூத்துக்
கலைஞர்கள்
சந்தித்து சேகரித்து கட்டுரைகள் வடித்து உள்ளார். நாடகங்கள் நசிந்து வரும்
சோகத்தையும் எழுதி உள்ளார். நசிந்து வரும் கிராமியக் கலைகளை
.உயிர்ப்பிக்கும் விதமாக முது முனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப .அவர்கள்
சுற்றுலாத் துறையின் செயலராக இருந்த போது அவரது ஆணையின் காரணமாக ,
மதுரையில் ஒரு வருடத்திற்கு மேலாக தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்
கிழமைகளில் கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடத்தினோம் . அது என் நினைவிற்கு
வந்தது .
பிரபல ஓவியர் மருது அவர்கள் குதிரை ஓவியத்தை விரும்பி
வரைவார். அவர் மதுரைக்காரர். மண் குதிரை சிலை பற்றி, புரவி எடுப்புத்
திருவிழா பற்றியும், குதிரை சிலைகளின் புகைப்படங்களுடன் நன்கு எழுதி உள்ளார். இக்கட்டுரைகளைப் படிக்கும் போது நம் மனக்கண்
முன் நாம் கண்டுகளித்த கிராமங்களைக் காட்சிப்படுத்தி நூல்
ஆசிரியர் ப. திருமலை வெற்றி பெறுகின்றார். சிறு தெய்வங்கள்,
கிராமத்துக் கோயில்கள், சிறுமிகளை கடவுளாக வணங்கும் பழக்கம் வழக்கம் பற்றி எழுதி
உள்ளார்.
ஊர் கூடி மீன் பிடிக்கும் திருவிழா ஒரு வருடம் முழுவதும் அந்தக்
கண்மாயில் மீன் பிடிக்காமல் இருந்து மீன் குஞ்சுகளை கண்மாயில் விட்டு
வளர்ப்பார்கள். கிராமத்தினர் ஒற்றுமையாக
இருக்க விழாக்கள் துணைபுரிகின்றன என்ற உண்மையையும் உணர்த்தி உள்ளார்.
இந்துக்கள் பூக்குழி இறங்கும் மொகரம் பண்டிகை மத
நல்லிணக்கத்திற்கு சான்றாக விளங்குவதை அறிய முடிந்தது.
மண்ணுக்கும் ஓசை உண்டு கட்டுரை படித்த போது நகைச்சுவையாளர்
என்.எஸ். கிருஷ்ணன் அவர்களைப் பற்றி படித்தது நினைவிற்கு வந்தது. அவர் வீட்டுக்கு வந்து இசை நிகழ்ச்சி
நடத்தியவர்களுக்கு வரிசையாக பணம் தந்தார்.
ஆனால் கடம் வாசித்தவருக்கு மட்டும் மற்றவர்களை விட கூடுதலாக
பணம் வழங்கினார். என்ன காரணம்? என்று கேட்ட
போது, இங்கு சிறப்பாக வாசித்தத்தற்கு மட்டுமல்ல, பானை உடையாமல் கவனமாக கொண்டு
வந்து, திரும்பக் கொண்டு செல்வதற்கும் சேர்த்து பணம் கூடுதலாக வழங்கினேன் என்றார்.
அதுபோல கவனமாக, இந்தப் பானை செய்யும்
விதத்தையும் படத்துடன் சுட்டி உள்ளார். மானாமதுரை மீனாட்சி அம்மாளுக்கு 2013-ம்
ஆண்டுக்கான புரஷ்கார் விருதும், ஒரு லட்ச ரூபாய பரிசும் குடியரசுத்
தலைவரிடமிருந்து பெற்ற தகவலும், புகைப்படமும் உள்ளது. இப்படி ஊடக வெளிச்சம் படாத பலரை இந்நூலில்
படம்பிடித்துக் காட்டி உள்ள நூலாசிரியர் ப. திருமலை அவர்களுக்கு
பாராட்டுக்கள். நூலில் உள்ள கட்டுரைகள்
கல்கி வார இதழில் படித்து இருந்த போதும், மொத்தமாக நூலாக வாசித்ததில் மட்டற்ற
மகிழ்ச்சி.
.நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை அவர்களுக்கு பாராட்டுக்கள் .தொடர்ந்து எழுதிட வாழ்த்துக்கள் .
.


கருத்துகள்
கருத்துரையிடுக