இறப்பு ! கவிஞர் இரா .இரவி !

இறப்பு !                          கவிஞர் இரா .இரவி !


நிழலின் அருமை
வெயிலில் தெரியும்
பெற்றோர் மரணம் !

தடுக்கமுடியாது மருத்துவர்
தள்ளிப்போடலாம்
இறப்பு !

மனம் விரும்புவதில்லை
மிக  மூத்தோருக்கும்
இறப்பு !

பலருக்கு சோகம்
சிலருக்கு இன்பம்
ஒருவர் இறப்பு !

இரண்டில் ஒன்றுதான்
எரிப்பு புதைப்பு
இறப்பு !

அழுதன
நாளைய பிணங்கள்
இன்றைய பிணத்தின் முன் !

உயிர் பிரிந்ததால்
நிரந்தரமானது தூக்கம்  
இறப்பு !  

போனால் திரும்பாது உயிர்
ஒருவழிப்பாதை
இறப்பு !  

பாராட்டு திட்டு
எதுவும் கேட்காது
இறப்பு !  

நாளைக்கு என்று தள்ளாதே
இன்றே நிகழலாம்
இறப்பு !  

வருமென்று அஞ்சாதே
வரும்போது வரட்டும்
இறப்பு !  

மனக்காயம் தரும்
மாயமாய் பின் மறையும்
இறப்பு !

இறுதிச் சடங்கின்போது
தொடங்கியது
சொத்துச்சண்டை !   

தொடாமல் போங்கள்
உறவுகளின் எச்சரிக்கை 
அடுத்த வீட்டில் இறப்பு !

வேண்டாம் ஆணவம்
வேண்டும் பண்பு
உறுதி இறப்பு !

இல்லை என முடியாது
உண்டு ஒரு நாள்
இறப்பு !  

சின்ன ஆசை எப்படி அழுவார்கள்
பார்த்துவிட்டு
பிழைக்க வேண்டும் !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்