மாமனிதர் அப்துல் கலாம் காலமானார் .உண்மையில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு . கவிஞர் இரா .இரவி !

மாமனிதர்  அப்துல்  கலாம் காலமானார் .உண்மையில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு .  கவிஞர் இரா .இரவி !




இந்தியாவின் கடைக்கோடியில் உள்ள இராமேஸ்வரம் என்ற தீவில் படகோட்டி மகனாகப் பிறந்து இந்தியாவின் முதற்குடிமகனாக உயர்ந்தவர் .செய்தித்தாள்கள் விற்றுப்படித்து தலைப்பு செய்தியான மாமனிதர் அப்துல் கலாம் .
இந்தியா முழுவதும் சுற்ற்ப்பயணம் செய்து இலட்சகணக்கான மாணவ மாணவியரை சந்தித்து உரையாடிபொன்மொழிகள் உறுதிமொழிகள் சொல்லி தன்னம்பிக்கை விதை விதைத்து வருபவர் .மாணவர்களை நல் வழிப்படுத்தி வரும் நம்பிக்கை நட்சத்திரம் கலாம் .
தோன்றின் புகழோடு தோன்றுக திருக்குறளுக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர் .பேசும் மேடை தோறும் உலகப் பொது மறையான திருக்குறளை மேற்கோள் காட்டி பேசுவதோடு நில்லாமல் வாழ்விலும் கடைபிடித்து வரும் நல்லவர் .
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும் .
எல்லா உயிரும் கை கூப்பி வணங்கும் என்கிறார் திருவள்ளுவர் .கலாம் அவர்கள் மாணவராக இருந்தபோது.அசைவ விடுதி கட்டணம் கூடுதல் என்பதால் சைவ விடுதியில் சேர்த்தனர் .இஸ்லாமிய சமுதாயத்தில் பிறந்து தினமும் மீன் ,முட்டை, கறி சாப்பிட்டு வளர்ந்தவர். வந்த நோக்கம் கல்வி கற்க .உணவு முக்கியம் இல்லை என்று கருதினார் . குடும்பத்தின் ஏழ்மை உணர்ந்து சைவ உணவை விரும்பி உண்ண ஆரம்பித்தார்.அன்று பழகிய சைவ உணவு பழக்கத்தை இன்று வரை தொடர்ந்து சைவ உணவை உண்டு வருகிறார் .இன்றும் அசைவம் உண்பதில்லை. மருத்துவர்களும் சைவ உணவே நலம் தரும் என்கின்றனர் .
மனிதநேயர் அப்துல் கலாம் ! கலாம் அவர்களிடம் வாழ்வில் மிகவும் மகிழ்ந்த நேரம் எது? என்று கேட்டபோது பொக்ரானில் அணுகுண்டு வெடித்த நேரம் என்றோ ,குடியரசுத் தலைவரான நேரம் என்றோ சொல்லி இருந்தால் ,கலாம் சராசரி மனிதர் .ஆனால் அவர் சொன்னார் .
' போலியோவால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி குழந்தைகள் மிகவும் கனமான காலணி அணிந்து நடக்க மிகவும் சிரமப்படுவது கண்டு ,மிகவும் குறைந்த எடையில் செய்து வழங்கி அதை அவர்கள் அணிந்து எளிதாக நடப்பது கண்டு மகிழ்ந்தேன் .அதுதான் என் வாழ்வில் மிகவும் மகிழ்வான நேரம் என்றார் மாமனிதர் கலாம் .
புத்தக நேசர் கலாம் !
குடியரசுத் தலைவராக பதவி ஏற்கும் விழாவிற்கு தனக்கு நூல்கள் வழங்கி உதவிய நூலகரை அழைத்து மகிழ்ந்தவர். கலாம் ஒரு புத்தக நேசர் .தினமும் நூல்களை விரும்பி வாசிப்பவர் திருக்குறள் , கீதை , குரான் , பைபிள் அனைத்தும் படித்தவர். புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு புத்தகத்தின் அருமை பெருமையை பறை சாற்றி வருபவர்.
வீட்டில் ஒரு நூலகம் !
வீட்டில் ஒரு நூலகம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருபவர் .அவர் எழுதிய அக்னிச் சிறகுகள் என்னும் நூல் 2014 ஆம் ஆண்டில் 31 வது பதிப்பு வந்துள்ளது .இந்த நூல் விற்பனையில் மட்டும் சாதனை படைக்கவில்லை .மாணவ மாணவியர் மனதில் தன்னம்பிக்கை விதைத்து புத்துணர்ச்சி ஊட்டி சாதனையாளர் பலரை உருவாக்கி உள்ளது .ஒரு புத்தகம் என்ன செய்யும் என்பதற்கு எடுத்துக்காட்டு அக்னிச் சிறகுகள் நூல் .
கலாமும் நானும் !
குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக அவரை அறிவித்தவுடன் உங்கள் வெற்றி உறுதி என்று வாழ்த்தி கவிதை எழுதி எனது கவிதை நூலும் இணைத்து குரியரில் அனுப்பினேன் .அவர் முகவரி தெரியாது .அவர் பிறந்த ஊர் இராமேஸ்வரம் என்று அக்னிச் சிறகுகள் நூலில் படித்த நினைவு .அப்துல் கலாம் இராமேஸ்வரம் என்று எழுதி அனுப்பி விட்டேன் .11 ஆண்டுகள் கழித்து அவரது அண்ணனைப் பார்க்க வந்த கலாம் கைகளில் எனது கவிதையும் நூலும் கிடைக்க ' தங்களின் வாழ்த்துக்கு நன்றி .நானும் உங்களை வாழ்த்தலாமா ?. என்று கலாம் அவர்களிடமிருந்து எனக்கு மின்னஞ்சல் வந்தது.மின்னஞ்சல் கண்டு மனம் மகிழ்ந்தேன் .
எனக்கு தினமும் பல சிற்றிதழ்ககள் வரும் . அவர் குடியரசுத் தலைவரானதும் அவரைப் பற்றி சிற்றிதழ்களில் பாராட்டி செய்தி வந்தது அவற்றை சேகரித்து அவருக்கு தொடர்ந்து அனுப்பி வந்தேன் .நன்றி என்று மடலும் வந்தது.பாராளுமன்றத்தில் கலாம் அவர்கள் நிகழ்த்திய குடியரசுத் தலைவர் உரையை பாராட்டி மடல் அனுப்பினேன். அதற்கும் நன்றி மடல் அனுப்பினார் .அவர் அப்துல் கலாம் என்று தமிழில் கையொப்பம் இட்டு அனுப்பிய மடல்கள் பல் என்னிடம் உள்ளன .நேரில் சந்திக்க வாய்ப்பு கேட்டு மடல் அனுப்பினேன் .திருச்சி வந்தபோது சந்திக்க வாய்ப்பு வழங்கினார் .நேரில் சந்தித்து கவிதை நூல்கள் வழங்கி மகிழ்ந்தேன் .அதன் பின் மதுரை அரவிந்த் மருத்துவமனை தங்கும் விடுதியில் நானும் தமிழ்த் தேனீ இரா மோகன் அவர்களும் சந்தித்து மகிழ்ந்தோம் .மதுரை விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியருடன் சந்தித்து நூல் வழங்கினேன் . இதுவரை 5 முறை அவரை சந்தித்துள்ளேன். நான் மட்டுமல்ல என் போன்று பலர் அவரை சந்தித்து ஊக்கம் பெற்று உள்ளனர்.என்னுடைய முன்னேற்றத்திற்கு அவரும் ஒரு காரணம் .
குடியரசுத் தலைவராக பதவி ஏற்றபின் காலையில் நடைப்பயணம் சென்ற போது காவலர்கள் குளிரில் நடுங்குவது கண்டு .குளிராடைகள் மற்றும் தலையில் அணியும் பனிக்குல்லா வழங்கிட ஆணை வழங்கினார் .அன்று அவரால் குளிராடைகள் பெற்றவர்களில் ஒருவரான திரு சுரேஷ் என்பவர் தற்போது மதுரை விமான நிலையத்தில் மைய அரசு காவலராக பணி புரிந்து வருகிறார் .மிகவும் மனம் நெகிழ்ந்து கலாம் அவர்களை பாராட்டினார் .
மணம் முடிக்க சொன்னவர் கலாம் ! என் இனிய நண்பர் கே .ஆர் .சுப்பிரமணி என்பவர் கலாம் மீது பற்று மிக்கவர். தன பெயரில் கலாம் சுப்பிரமணி என்று இணைத்துக் கொண்டவர் .அவரும் கலாம் அவர்களை நேரில் சந்தித்தவர் .உங்களைப் போலவே நானும் திருமணம் இன்றி வாழப் போகிறேன் என்று சொன்னதும் .தவறு நீங்கள் திருமணம் செய்து கொண்டு வாழுங்கள் என்று கலாம் அறிவுரை சொன்னார் .பின்னர் அவர் திருமணம் செய்தார் .
பண்பாளர் கலாம் !
குடியரசுத் தலைவராக பதவி ஏற்றபின் மாளிகையில் கலாமிற்கு சாக்ஸ் ,சூ (காலணி ) மாட்டி விட ஒருவர் வந்தபோது உடன் மறுத்து விட்டார் .என்னால்; முடியும் நானே அணிந்து கொள்கிறேன் .மனிதனுக்கு மனிதன் இது எல்லாம் செய்தல் கூடாது என்றார். மனிதநேயம் பேசுவது மட்டுமன்றி வாழ்விலும் கடைபிடிக்கும் ஒப்பற்ற மனிதர் கலாம் .
நஷ்டம் நமக்கே !
கலாம் குடியரசுத் தலைவரானதும் உலகமே வியந்து பார்த்தது. பாராட்டியது .கலாம் அவர்களை இரண்டாம் முறை குடியரசுத் தலைவராக்க நம் நாட்டில் நிலவிய மோசமான அரசியல் விடவில்லை .இதனால் நஷ்டம் கலாமிற்கு இல்லை நமக்குத்தான் .வேறு எந்த நாட்டிலாவது கலாம் பிறந்து இருந்தால் அவரை அந்த நாட்டினர் வாழ்நாள் முழுவதும் நிரந்தர குடியரசுத் தலைவராக அறிவித்து இருப்பார்கள் .
நாட்டுப்பற்று மிக்கவர் !
இன்று குழந்தையிடம் கூட நன்றாகப் படித்து வெளிநாடு சென்று டாலர் சம்பாதிக்க வேண்டும் என்றே சொல்லி வளர்க்கின்றனர்.ஆனால் கலாம் அவர்களை அமெரிக்க நாசா உள்பட பல நாடுகள் நிரந்தரமாக அழைத்தபோதும் இந்தியாவை விட்டு வர மாட்டேன் என்று உறுதியாக நின்றவர்.
குரு பக்தி மிக்கவர் .
மாதா பிதா குரு தெய்வம் என்பதை வாழ்வில் கடைபிடிப்பவர். அம்மாவை மிகவும் நேசித்தவர் .என்னுடைய முன் மாதிரியாகத் திகழ்ந்தவர்கள் என் ஆசிரியர்கள் என்றவர் . ஆசிரியர்கள் மிகவும் மதித்து நடந்தவர் . ஆசிரியர் பணி அறப்பணி அதற்கே உன்னை அற்பணி என்று சென்னை பல்கலைக் கழகத்தில் பேராசிரியாரகப் பணி புரிந்தவர் .
மாணவர்கள் தங்கள் வாழ்கையில் முதல் 17 வருடங்களை அதாவது 25000 மணி நேரங்களை ஆசிரியரிடம் தான் செலவழிக்கிறார்கள் .எனவே ஆசிரியர்கள்தான் மாணவர்களுக்கு முன்மாதிரி ." என்றார் . மாணவர் ஆசிரியர் உறவு சீராக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வைர வரிகள் .
அவர் குடியரசுத் தலைவராக இருந்தபோது .தூக்குத் தண்டனையில் அவருக்கு உடன்பாடு இல்லை என்பதால் , வந்த கருணை மனுக்கள பலவற்றை நிராகரிக்காமல் இருந்தார். அவரால்தான் இன்றும் பலர் உயிர் வாழ்கிறார்கள்.
மாணவ மாணவியரிடம் உங்கள் பெற்றோர்களிடம் எடுத்துச் சொல்லி இலஞ்சம் ஒழியுங்கள் என்றார் .இலஞ்சத்திற்கு எதிராக குரல் கொடுத்தார் .கேள்வி கேட்டு பதில் வாங்கும் புதிய உத்தியின் மூலம் பேசுவது அவருக்கு வழக்கம் . ஒரு சிறுமி சொன்னாள் உலக அழகி பட்டம் ஐஸ்வர்யாராயுக்கு கிடைக்க காரணம் நான் அந்த போட்டியில் கலந்து கொள்ளாததே என்றாள்.இந்த விடையை கேட்டு அவளை பாராட்டினார் கலாம்
மதுரையில் நடந்த நிகழ்வு !
கலாம் அவர்கள் மதுரைக்கு ஒரு நிகழ்விற்காக வந்து இருந்தார்கள் அவரிடம் விமான நேரத்தை தவறாக சொன்னதால் .அவர் விமான நிலையம் வர 5 நிமிடங்கள் தாமதமானது .புறப்பட வேண்டிய நேரத்திற்கு முன்பாகவே வந்து விட்டார் .விமானப் பணியாளர்களும் அவருக்காக காத்து இருந்து அழைத்துச் சென்றனர் .விமானத்தின் உள்ளே சென்ற கலாம் அவர்கள் உள்ளே இருந்த பயணிகள் ஒவ்வொருவரிடமும் உங்கள் நேரம் 5 நிமிடத்தை நான் எடுத்துக் கொண்டேன் மன்னியுங்கள் என்றார் .இதனை நேரில் பார்த்த விமானப் பணியாளர் கலாம் அவர்களின் உயர்ந்த பண்பை பாராட்டினார். இவரிடம் அரசியல்வாதிகள் பண்பை கற்றுக் கொள்ள வேண்டும். என்றார் .
நேர்மையாளர் சிறந்த சிந்தனையாளர் இறையன்பு அவர்களை பாராட்டியவர் !
நேர்மையான அரசு உயர் அதிகாரி ,சிறந்த சிந்தனையாளர், சிறந்த எழுத்தாளர்,சிறந்த பேச்சாளர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப . அவர்களின் படைப்புலகம் பற்றி தேசிய அளவிலான கருத்தரங்கம் மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி மூலம் ஏற்பாடானது .முதல் நாள் சென்னையிலும் மறுநாள் மதுரையிலும் நடத்த திட்டமிட்டு , மாமனிதர் கலாமை சென்னை விழாவிற்கு அழைத்தனர் .உடன் அவரும் வர சம்மதம் தெரிவித்தார்கள். விழாவிற்கு ஒரு வாரம் மட்டும் இருந்த நிலையில் வெ .இறையன்பு இ .ஆ .ப . அவர்களின் அனைத்து நூல்களையும் அவர்க்கு அனுப்ப வேண்டும் என்றவுடன், நானே அவற்றை வாங்கி மதுரையில் இருந்து விமானத்தில் டெல்லிக்கு அனுப்பி அங்குள்ள இனிய நண்பர் உதவி சுற்றுலா அலுவலர் திரு சங்கர் மூலம் கலாம் இல்லம் சென்று கலாம் உதவியாளர் திரு .பொன்ராஜ் அவர்களிடம் ஒப்படைக்கச் செய்தேன்.இறையன்பு அவர்களும் மதுரை விழாவில் பேசும் போது இரவியிடம் புலிப்பால் கேட்டாலும் கொண்டு வந்து விடுவார் என்று மனம் திறந்து என்னை பாராட்டினார்கள் .
கலாம் அவர்கள் அனைத்து நூல்களையும் படித்து விட்டு வந்து "இறையன்பு அவர்களின் நூல்கள் படித்தால் ஞானி ஆகலாம்." என்று சிறப்பாக பாராட்டி உரையாற்றினார்கள் .இறையன்பு அவர்களின் நூல்கள் படித்து ஆராந்து நீதியரசர்கள் ,பேராசிரியர்கள் ,எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆய்வு மாணவர்கள் அனைவரும் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் தொகுப்பு' இறையன்பு படைப்புலகம் 'என 3 தொகுதிகளாக வந்தன. அவற்றையும் கலாம் வெளியிட்டார்கள் .அவரது பிறந்த நாளான் இன்று மலரும் நனைவுகளாக மலர்ந்தன .
. மிகவும் ஆபத்தான கூடங்குளம் அணு உலை பற்றி ஆதரவாக கலாம் அவர்கள் கருத்து சொன்னதில் எனக்கு தனிப்பட்ட முறையில் வருத்தம் உண்டு .அதனையும் இணையத்தில் பதிவு செய்தேன் .
இன்று கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராக இல்லாவிட்டாலும் அவர் மீதான மக்கள் ஈர்ப்பு அப்படியே உள்ளது .இன்னும் அவரை குடியரசுத் தலைவராகவே நினைக்கின்றனர் .அவரை சந்திக்க மாட்டோமா ? பேச மாட்டோமா ? அவரோடு புகைப்படம் எடுக்க மாட்டோமா? என்று பலர் ஏங்கி வருவது உண்மை .
" தமிழன் என்று சொல்லடா ! தலை நிமிர்ந்து நில்லடா ! என்ற நாமக்கல் கவிஞர் வைர வரிகளுக்கு ஏற்ப தமிழனின் பெருமையை உலகிற்கு உணர்த்தியவர் கலாம் .உலக அரங்கில் தமிழனின் புகழையும் ,இந்தியாவின் புகழையும் உயர்த்தியவர்.
இந்த மாமனிதர்க்கு நோபல் பரிசு வழங்கலாம் .
1981 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கினார்கள் .1990 ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கினார்கள்.1997 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கினார்கள். .இந்த மாமனிதர்க்கு நோபல் பரிசு வழங்கலாம் .வழங்கினால் நோபல் பரிசுக்கு பெருமை வந்து சேரும் .
இவர் வாழும்காலத்தில் நாமும் வாழ்கிறோம்.
குடியரசுத் தலைவர் பதவிக்கு பெருமைகள் சேர்த்தவர். இவரால் குடியரசுத் தலைவர் பதவி பெருமை அடைந்தது. இவர் வாழும்காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பது நமக்கு பெருமை.  
உண்மையானவர்,நேர்மையானவர் ,எளிமையானவர் ,இனிமையானவர் ,குழந்தை உள்ளம் கொண்டவர் , குழந்தைகளை நேசித்தவர் . .உடலால் உலகை விட்டு மறைந்திட்ட போதும் ,புகழால் அனைவரின் உள்ளங்களிலும் என்றும் வாழ்வார் . 
.

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்