மணிமொழியனார் வாழ்க பல்லாண்டு ! கவிஞர் இரா. இரவி!

மணிமொழியனார் வாழ்க பல்லாண்டு !

கவிஞர் இரா. இரவி!

 மதுரையின் பெருமைகளில் ஒன்றானவர் மணிமொழியனார்.  உலகப் பொதுமறையான திருக்குறளை மனப்பாடம் செய்ததோடு நின்று விடாமல் வாழ்விலும் கடைபிடித்து வரும் மாமனிதர்.  ‘தோன்றின் புகழோடு தோன்று’என்ற திருக்குறளுக்கு இலக்கணமானவர்.  இலக்கிய மேடைகளில் எந்த விழாவாக இருந்தாலும் அந்த விழாவிற்கு பொருத்தமான திருக்குறளை மேற்கோள் காட்டி பேசுவதில் வல்லவர்.  1330 திருக்குறளும் மனப்பாடமாக அறிந்த தொழில் அதிபர் மணிமொழியன் ஒருவராகத் தான் இருப்பார்.  இவருடன் ஒருமுறை உரையாடி விட்டால் உரையாடியவர்கள் வாழ்நாள் முழுவதும் அவரை மறக்க மாட்டார்கள்.  கணக்கின்றி திருக்குறளுக்காக செலவு செய்து வரும் புரவலர், நல்லவர்.

       மணிமொழியனார் மதுரை மட்டுமல்ல, உலகளாவிய இலக்கியத் தொடர்பு உள்ளவர்.  சிங்கப்பூர், மலேசியா மட்டுமல்ல இலண்டன் புதினம் இதழின் ஆசிரியர் இனிய நண்பர் திரு. இராஜகோபால் அவர்களுடன் குடும்ப நட்பு உள்ளவர்.  திரு. ராஜகோபால் அவர்களின் மனைவி திருமதி ராகினி அவர்கள் இலண்டனில் நடனப்பள்ளி ஆசிரியராக இருந்து கலை வளர்த்து வருபவர்.  திரு. இராஜகோபால் அவர்கள் எப்போது மதுரைக்கு வந்தாலும் காலேஜ் ஹவுஸ் விடுதியில் தான் தங்குவார்.  வரும் போது தகவல் தந்து விடுவார்.  நான் சென்று வரவேற்று மகிழ்வேன்.  அவருடன் பேசும் போது மணிமொழியனார் பற்றி மிக உயர்வாக எடுத்து இயம்புவார்.  இப்படி ஒரு மனிதரை, ஒரு புரவலரை எங்கும் பார்க்க முடியாது.  இயந்திரமயமான உலகில் மனிதர்களும் இயந்திரமாகவே மாறி வரும் காலத்தில் மாமனிதராக விளங்குகிறார் மணிமொழியனார் என்றார். இலண்டனில் மணிமொழியனாரே வைத்து உலகத் திருக்குறள் பேரவை தொடக்க விழாவும் நடன விழாவும் நடத்தி மகிழ்ந்தவர் திரு. இராஜகோபால்.

  இலண்டன் புதினம் திரு. இராஜகோபால் அவர்களுக்கு பத்திரிகை தொடர்பான பணிகளை பயிற்றுவித்தவர் மூத்த பத்திரிகையாளர் கலாநிதி இலண்டன் பாலசுந்தரம் அவர்கள்.  அவரை இன்றும் என்னுடைய குரு என்று மறக்காமல் குறிப்பிடுவார்.  அவர் எனக்கு குடும்ப நண்பர். திரு. பொன். பாலசுந்தரம் அவர்கள் சிவயோகம் மலர் வெளியிட்டார்கள்.  அதற்கு இங்குள்ள தமிழ்த்தேனீ இரா. மோகன் உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள் பலரிடம் கட்டுரை வாங்கி அனுப்பி உதவினேன்.  இலண்டனில் மணிமொழியனாரை சந்தித்த திரு. பொன். பாலசுந்தரம் அவர்கள் என்னிடம் அலைபேசியில் பாராட்டி மகிழ்ந்தார்.  மணிமொழியனார் பற்றி அற்புதமான கவிதை ஒன்று எழுதி அவரது நூல் ஒன்றையும் இணைத்து மணிமொழியனாரிடம் என்னை ஒப்படைக்க வேண்டினார்.  நான், அய்யா மணிமொழியனாரைச் சந்தித்து நூலையும் கவிதையையும் வழங்கினேன். பெற்றுக்கொண்டு திரு. பொன். பாலசுந்தரம் அவர்களையும், திரு. இராஜகோபால் அவர்களையும் பாராட்டி மகிழ்ந்தார்.  இலண்டன் வாழ் தமிழர்களின் உள்ளங்களையும், திருக்குறளால், உயர்ந்த பண்பால் கொள்ளை கொண்டவர் மணிமொழியனார்.

       என்னுடைய நூல் வெளியீட்டு விழாக்கள் தற்போது மணியம்மை மழலையர் தொடக்கப்பள்ளியில் நடந்து வருகின்றது.  முன்பு எனது நூல் வெளியீட்டு விழா நடத்திட காலேஜ் ஹவுஸ் விடுதி அரங்கைக் கேட்ட போது நன்கொடையாக அரங்கை வழங்கி விழாவிற்கும் வருகை தந்து சிறப்புரையாற்றி சிறப்பித்தவர் மணிமொழியனார். 
அந்த விழாவில் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள், கவிதை உறவு இதழுக்கு ரூ. 5000 நன்கொடை வழங்கிட என்னிடம் சொன்னார்கள்.  கவிதை உறவு ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடியார் அவர்களிடம் நிதி வழங்கி மகிழ்ந்தேன்.  இதுபோன்ற பல நல்ல நிகழ்வுகள், இலக்கிய நிகழ்வுகள் காலேஜ் ஹவுஸ் விடுதியில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.  எனக்கு மட்டுமல்ல பல கவிஞர்கள், படைப்பாளிகளுக்கு விடுதி அரங்கை நன்கொடையாக வழங்கி இலக்கியப்பறவைகளுக்கு வேடந்தாங்கலாக விளங்கி வருபவர் மணிமொழியனார்.  மதுரை இலக்கிய மன்றம் அவனி மாடசாமி, கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் உள்பட பலரின் நிகழ்வுகள் நடந்து உள்ளன. நடந்து வருகின்றன .

       நீதியரசர் கற்பக விநாயகம் தொடங்கி குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வரை பலரை வரவழைத்து திருக்குறள் திருவிழா நடத்தி மகிழ்பவர் மணிமொழியனார்.  இங்கு நீதியரசர் கற்பக விநாயகம் அவர்களின் சிறப்பான உரை கேட்டு, அவருக்கு மடல் எழுதி தொடங்கிய நட்பு, நூலிற்கு மதிப்புரை வாங்கும் அளவு வளர்ந்து நீதியரசர் மதுரை வரும் போதெல்லாம் இலக்கிய இணையர் தமிழ்த்தேனீ இரா. மோகன், தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் அவர்களுடன் சேர்ந்து சென்று சந்திக்கும் அளவிற்கு வளர்ந்தது.  நீதியரசருடனான நட்புக்கு காரணமாக இருந்த்து மணிமொழியனார் நடத்திய திருக்குறள் திருவிழா.

       கடந்த சில ஆண்டுகளாக திருக்குறள் திருவிழாவை மாநாடு போல நடத்தி வருகிறார்கள்.  இந்த வருடம் மணிமொழியனார் அவர்களின் 70வது வயதும் சேர்ந்து கொண்டதால் திருக்குறள் திருவிழா, சித்திரைத் திருவிழா போல ஆகி விட்டது.  இலக்கிய ஆர்வலர்கள் அனைவருமே மணிமொழியனாரை மனதார பாராட்டி மகிழ்கின்றார்கள். 

       விருதுகள் பல பெற்ற போதும் தலைக்கனம் இல்லாதவர், மென்மையானவர், மேன்மையானவர்.

       உலகப்பொதுமறையான திருக்குறளை இவர் அளவிற்கு வேறு யாரும் நேசிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு நேசிப்பவர்.  திருக்குறள் திருப்பயணம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் அவர்கள் மதுரைக்கு வந்த போது, மகாகவி பாரதியார் ஆசிரியராகப் பணிபுரிந்த சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் அவரை வரவேற்று தேசிய நூலாக அறிவிக்க ஆவன செய்ய வேண்டுமென்ற கோரிக்கையையும் வைத்து வழி அனுப்பி வைத்தார்கள்.

 திருக்குறள் தேசிய நூலானால், மணிமொழியனார் மட்டற்ற மகிழ்ச்சி அடைவார்.  எனவே அவர் மட்டுமல்ல, உலகத் தமிழர் யாவரும் மகிழ்ச்சி அடையும் வண்ணம் திருக்குறளை உடனடியாக தேசிய நூலாக்கிட அனைவரும் குரல் கொடுப்போம்.  மணிமொழியனாரின் 70வது பிறந்த நாள் விழாவில் திருக்குறளை தேசிய நூலாக்கியே தீருவோம் என்று அனைவரும் உறுதி ஏற்போம்.  மணிமொழியனார் வாழ்க பல்லாண்டு, திருக்குறள் போல வாழ்க பல்லாண்டு.  சிறப்பு மலராக வெளியிடுபவரும், எனது முதல் கவிதை பிரசுரம் செய்தவருமான மதுரை மணி ஆசிரியர் திரு. சொ. டயஸ்காந்தி அவர்களுக்கு பாராட்டுக்கள்.   



நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்