கவியமுதம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.! மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி மேலூர் !

கவியமுதம் !



நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.!

மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி மேலூர் !

வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-17.  மிகத் தரமான தாள்கள் பக்கங்கள் : 172, விலை : ரூ. 100 .

*****
நாவல் பழம் ருசித்த நாவின் வண்ணம்!
நற்சிந்தனை வளர்த்த வள்ளுவரின் முழு உருவம்!
நவீனக் கணினிக்குள்ளும் இயற்கையின் மஞ்சள் மலர்கள்!
நல்ல தரம் மிகுந்த கைபேசி!
நமது கதிரவக் கவிஞரின் பெயர், அருகே புகைப்படம்!
நனைந்த மஞ்சளின் துணைகொண்டு மேலே ‘கவியமுதம்’
கீழே ‘வானதி பதிப்பகம்’ என எழுதிய எழுத்துக்கள்!

இவை தான் கவிஞர் இரா. இரவி அவர்களின் 
‘கவியமுதம்’ என்ற கவிதை நூலின் முன் அட்டையின் முழு அழகு!

பின்பக்க அட்டையோ புகைப்படத்துடன்
பிற கவிஞர்களையும்
பின்பற்ற வைக்கும்
புதிய அழகு!
தாளின் தரம்! தகுந்த இட்த்தில் புகைப்படம்!
கவிஞரின் ரசனைக்கும், புத்தக நேசிப்பிற்கும், சான்றிதழ் அளித்திருக்கிறது.

நூலை விரித்தவுடன் முகமும் மலர்கிறது.  காரணம் இவ்வுலகமே நேசிக்கும் இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் முகமும், வரிகளும் முதல் வரிகளாய் இருப்பதால்.

அடுத்ததாய் ‘தமிழ்த்தேனீ’ இரா. மோகன் அவர்கள் நல்ல வரிகளை எடுத்துக்கூறி ‘ஏழு பக்க நீளத்திற்கு அழகை நீட்டித்து இருப்பது சிறப்பு’.

முதல் பகுதியே ‘நம்பிக்கைச் சிறகுகள்’ என்ற தலைப்பில் துவங்குவதால் வாசிப்பும், நம்பிக்கையோடு துவங்குகிறது.  நம்பிக்கை வீண் போகவில்லை என்பதை படித்தவுடன் உணர்ந்தேன்.

“வாய்ப்பு எனும் வாசல் தேடி
நீ சென்றால் கதவைத் தட்ட வேண்டாம்!
திறந்தே இருக்கும்! என்ற வரிகள் வாசிக்கும் போதே நரம்புகளின் வழியாக நம்பிக்கை பாய்கிறது.

சான்றோர் திறம் பகுதியில்,

உன்னத மனிதர்களை ஒருங்கிணைத்து
தன் மான (மன) எழுத்துக்களால் அழுத்தமாக பதிவு செய்திருப்பது அருமை!

ஒரு நொடி போதும்! என்ற தலைப்புக் கவிதையில்,

       ஊடலை உடைக்க, ஒரு நொடி போதும்!
       ஒருபோதும் அனுமதிக்கவில்லை
       தன்முனைப்பு! என்ற வரிகள்.

மனித மனத்தின் கண்ணாடி

       அசைக்க முடியாத மலை! முத்திரை வலி! போன்ற தலைப்புக் கவிதைகள் அன்பின் ஆழத்தை அளந்து காட்டியிருக்கிறது.

தோகை மயில் என்ற தலைப்பில்

       தோகை விரித்து ஆடினால் பார்க்க
       மேகமும் மழையாய் வரும்!

என்ற வரிகள் புதிய கற்பனை மிகமிக அழகு!

ஏன் வருகிறது தீபாவளி?  கவிதை

பண்டிகைத் தொல்லைக்கு நல்ல தீர்வு!

தமிழ்நாட்டில் தமிழர் உடைக்குத் தடையா? என்ற கவிதை வரிகள்,

தமிழரின் உரிமைக்கு உரத்த குரல் கொடுத்திருக்கிறது.

அரசாங்கத்தால் அச்சடிக்கப்பட்ட தாள்
அவ்வளவு தான் அடிமையாகாதீர்கள்!

என்ற வரிகள், பணம் மட்டுமே உலகம் என்போருக்கு நல்ல அறிவுரையாக 
அமையும்!

கணக்கேதும் பார்க்காமல் கதிரவக் கவிஞர் (இரா. இரவி)
முழுக்க முழுக்க
சமுதாய நோக்கத்தோடு கவியமுதத்தைப் படைத்திருக்கிறார்!
இளையதலைமுறையினரின் உள்ளத்திற்கு
இந்நூல் சத்துணவு அளித்திருக்கிறது!
எல்லோரும் எடுத்துக் கொள்ளுங்கள்!
வளமான பாரதத்திற்கு உள்ளத்தின் வலிமையே முக்கியம்!



மதிப்பிற்குரிய கவிஞருக்கு,

       “பல எழுத்தாளர்களின் விமர்சனம் நடுவே என் விமர்சனம் இருப்பதைக் கண்டு, சிகரத்திற்க்கு நடுவே அகரத்தையும் பெருமைப்படுத்த முடியுமா? என்ற இன்ப அதிர்ச்சி என்னும் எழுந்த்து.  பெருமைப்படுத்தியதற்கு எனது நன்றியை அளிக்கின்றேன்.

       ‘எழுத்தோலை’ விருது பெற்றதற்காக தங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்! ஓர் கவிதை வடிவில்,

வாழ்த்துக் கவிதை !

விடியலில் உலகை வெல்ல வேண்டுமென
துள்ளியே எழுந்தாலும்
மெல்ல மெல்ல நேரம் நகர்த்தி பணிமுடிக்க
நாளைய நாளையும் நாசுக்காய் கடன் கேட்பர் சிலர்!
கதிரவக் கவிஞரே!

சொந்தப் பணி ஒருபுறமிருக்க
சுற்றுலாப் பணி மறுபுறமிருக்க
இலக்கியப் பணிக்கு ஒதுக்கிய நேரத்தை
எப், பொழுது அளித்தது?

ஒரு ‘நடுநிசிப் பொழுது’ ஆசி வழங்கி அளித்ததா?
‘வைகறை’ ஏதும் வாய்ப்பு வழங்கியதா?
பதவிக்குள் குடியிருக்கும் பயணப்பொழுது தந்த பங்களிப்பா?
உணவு இடைவேளையையும் உறங்கும் காலவேளையையும் சுருக்கி
நீர், சில்லரையாய சேகரித்த சிறுசிறு பொழுது கொடுத்ததா?

காலத்தின் கைப்பிடிக்குள் சிக்காமல்
காலத்தை கைபிடித்து அழைத்துச் செல்லும் திறமையில் பெற்றதா?

எப்படி இருந்தாலும் சரி! – தமிழை
சிப்பியின் முத்தாய்
சிறப்பிக்கட்டும் உமது இலக்கியப் பணி!


.


.

கருத்துகள்

கருத்துரையிடுக