‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : பேராசிரியர் ,கவிஞர் மித்ரா !

‘புத்தகம் போற்றுதும்’

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
மதிப்புரை : பேராசிரியர் ,கவிஞர் மித்ரா !

வானதி பதிப்பகம் .23.தீனதயாளு தெரு ,தி. நகர் ,சென்னை .600017. தொலைபேசி 044-24342810. 044-24310769. மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com பக்கம் 224 விலை ரூபாய் 150.
*****
விமர்சன வேள்வி
*****
‘புத்தகம் போற்றுதும்’ என்னும் தலைப்பில் 50 நூல்களின் விமர்சனங்களை  இரா. இரவி தொகுத்தளித்துள்ளார்.  விமர்சனம் என்பதும் சீரிய நேரிய ஆய்வே.  சமன் செய்து சீர்தூக்கும் துலாக்கோல் போல் நடுநிலையில் இருந்து செயல்பட வேண்டும்.  இவரது விமர்சனம் நடுநிலையில் அமைந்துள்ளதை அறியலாம்.
இந்நூலில் ஐம்பது நூல்களின் விமர்சன வேள்வி நூலாசிரியரால் நிகழ்த்தப் பெற்றுள்ளது.  இதில் மூதறிஞர்கள் மூவர், முதுமுனைவர் ஒருவர், பேராசிரியர்கள் நால்வர், முனைவர்கள் ஒன்பதின்மர், எழுத்து வேந்தர், சொல் வேந்தர், கவி வேந்தர் என வேந்தர்கள் மூவர், கவிஞர்கள் பதினாறு பேர், கவிதையால் பேறு பெற்றவர்கள் அறுவர், கலைமாமணி விருது பெற்றவர் ஒருவர், மூத்த பத்திரிகையாளர் ஒருவர், ஆளுமையானவர் ஒருவர், பொறியாளர் ஒருவர், வெற்றியாளர் ஒருவர், டாக்டர் ஒருவர், ஈழத்து எழுத்தாளர் ஒருவர், ஆட்சியர் ஒருவர், சிந்தனையாளர் ஒருவர், கவிமுரசு ஒருவர் என ஐம்பதின்மர் படைப்புகள் இடம்பெற்று விமர்சனம் நிகழ்த்தப் பெற்றுள்ளன.
இனி நூல்களைப் பற்றிய விமர்சனங்கள் :
மூதறிஞர் தண்டபாணி தேசிகர் :  ‘திருக்குறள் அமைப்பும், அழகும்’ என்னும் நூலை யாத்துள்ளார். அதில் திருக்குறளின் பெருமையப் பறைசாற்றியுள்ளார்.  அதில் அந்நூலுக்குரிய பெயர்க் காரணம், நூல் அமைப்பு ஆகியவற்றை ஆராய்ந்துள்ள பாங்கு கண்டு வியக்கலாம்.  இதற்காக உலகத் தமிழ் மக்கள் அனைவரும் அவரை வணங்கலாம்.
மூதறிஞர் இரா. இளங்குமரனார் :  இவர் திருக்குறள் என்னும் நூலை யாத்துள்ளார்.  அதில் அவர் திருக்குறளின் பொருள் விளக்கம், தவம், வாய்மை, நட்பு இவற்றையெல்லாம் நூலில் விளக்கமாக பேசியுள்ளதைக் கொண்டு நூலை வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் எனலாம்.
மூதறிஞர் ம.ரா.போ. குருசாமி :  ‘மூவா நினைவுகள்’ என்னும் நூலை இயற்றி ஆசிரியர்-மாணவர் உறவு பற்றி குறிப்பிட்டுள்ளார்.  மு.வ.-வை புரவலராய், நண்பராய், தாய், தந்தையாய், குருவாய், ஒழுக்க சீலராய், வாழ்ந்து காட்டியவர் என்றார்.  பேச்சைக் குறைத்து – உழைப்பைப் பெருக்குவீர் என்ற மு.வ.-வின் உயர்ந்த கருத்துக்களை நூல் முழுவதும் காணலாம்.  குறள் வழி வாழ்ந்தவர் என்றும் குறிப்பிட்ட நூலாசிரியரின் கருத்தை மக்கள் அனைவரும் அறிய விமர்சனம் செய்துள்ள இரா. இரவிக்கு வாழ்த்துக்கள்.
முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.  :  இவர் எழுதியுள்ள நூல் ‘அவ்வுலகம்’.  இதில் மூட நம்பிக்கையை எள்ளி நகையாடும் வகையில் இறந்தவர் நெற்றியில் காசு வைப்பது மூடப்பழக்கம், மரணம் பற்றிய பயம் போக்கும் நாவல் இது. குழந்தையிடம் அன்பு செலுத்துவது அவசியம் என்னும் கருத்துக்களைப் பெற வைத்த ஆசிரியருக்கும், விமர்சகருக்கும் நன்றி.
பேராசிரியர் இரா. மோகன் :  இவரது 100வது நூல் ‘கவிதைக் களஞ்சியம்’.  20 கவிஞர்களின் 20 நூல்களைப் படித்து 20 கட்டுரைகள் எழுதியுள்ளார்.  கவிஞர் முடியரசன், கவிஞர் சுரதா, மீரா, அப்துல் ரகுமான், தமிழன்பன், வாலி, மு. மேத்தா, பாலா, தாராபாரதி, கந்தர்வன், காசி ஆனந்தன், முத்துலிங்கம், இறையன்பு, பத்மாவதி தாயுமானவர், தங்கம் மூர்த்தி, வெற்றிச் செல்வம், மு.முருகேஷ் ஆகியோரது கவிதைகளைச் சுட்டி நூலை வாங்கும் ஆர்வத்தைத் தூண்டிய விமர்சகரை பாராட்டியே ஆக வேண்டும்.
பேராசிரியர் ஜேம்ஸ் :  இவர் எழுதிய நூல் ‘ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும்’ என்பதாகும். திருக்குறள் உலக நூல்களின் சிகரம்.  இதனைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்னும் கருத்தைச் சொன்ன இவரை உலகோர் பாராட்டி மகிழ வேண்டும்.
பேராசிரியர் பொன் சௌரிநாதன் : இவர் ‘மு. வரதராசன்’ என்னும் தலைப்பில் நூல் யாத்துள்ளார்.  நூலில் மு.வ.-வின் ஆளுமையின் வரலாறு, அவரது படைப்புகள் பற்றிய ஆய்வு, அவரது குண நலங்கள், இலக்கிய ஆளுமை ஆகியவற்றை தெளிவுபடுத்தியுள்ளதை விமர்சகர் புலப்படுத்தி உள்ளார்.
பேராசிரியர் அருணன் :  இவரது 16 கட்டுரைகளை உள்ளடக்கிய நூல்.  மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை, சோதிடம் என்பது மூட நம்பிக்கை, அதனைக் கணினியோடு ஒப்பிடுவது தவறு என்னும் பகுத்தறிவுச் சிந்தனையை மக்களுக்குப் பரப்பும் வகையில் அமைந்த நூல் என்கின்றார் விமர்சகர்.
முனைவர் மு. இராசாராம் : ‘கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள்’ என்னும்  இந்நூல் கல்வியாளர்கட்கும், மாணவர்கட்கும் வழிகாட்டியாக அமைந்துள்ளது என்றால் அது உண்மையே.
முனைவர் கு. ஞானசம்பந்தன் :  இவரது நூல் ஜெயிக்கப் போவது யாரு? நீ தான்! என்பதாகும்.  25 தலைப்புகளில் நகைச்சுவைத் ததும்பும் நல்ல, எளிய நடையில் சிந்திக்க வைக்கிறார் என்பதனை நூலைப் படிக்கத் தூண்டும் வகையில் விமர்சகர் விமர்சித்துள்ளார்.
முனைவர் இளசை சுந்தரம் :  இவரது நூல் “இன்று ஒரு தகவல்”.  இதில் புதினா இலை, நொச்சி இலை – இவற்றின் மருத்துவக் குறிப்புகளைத் தந்துள்ளார்.  சிரிப்பின் விஞ்ஞானத் தகவலையும் குறிப்பிட்டுள்ளதை விமர்சகர் திறம்பட குறிப்பிட்டுள்ளார்.
முனைவர் கி.ர. அனுமந்தன் :  இவர் ‘நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை’ என்னும் நூல் யாத்துள்ளார். காந்தியடிகள் மீதும் பாரதியார் மீதும் பற்றுக்கொண்டு வாழ்ந்தார்.  தேசப்பற்று, தமிழ்ப்பற்று, தமிழர் மீது பற்றுக் கொண்டிருந்தார்.  அவரது வரலாறு அறிய விரும்புவோர்க்கு இது நல்ல நூல்.
முனைவர் ம.பெ. சீனிவாசன் :  இவர் ‘வண்டாடப் பூ மலர’ என்னும் நூலை எழுதி உள்ளார்.  காதலைப் பற்றிய உயரிய கணிப்புப், இயற்கையை நேசிக்கும் உயரிய பண்பை, நாகரிகத்தை, உலகோரை உறவாகக் கொள்ளச் சொல்லும் மனித நேயத்தையும் நூலில் காண முடிகின்றது.
முனைவர் எம்.எஸ். ஸ்ரீலக்ஷ்மி :  இவர் ‘பெண்ணிய நோக்கில் கம்பர்’ என்னும் நூலைப் படைத்துள்ளார். கம்பராமாயணத்தை அறிவுக்கண் கொண்டு வாசிக்க வேண்டும் என்கின்றார்.
முனைவர் சு. சங்கரி :  இவர் ‘இலக்கியச் சங்கமம்’ என்னும் நூலை எழுதியுள்ளார்.  இலக்கியங்களில் காணலாகும் இயற்கைக் காட்சிகளைப் பாடல் வரிகளோடு தந்துள்ளார்.  இலக்கியங்களைப் படிக்க தூண்டும் நூல் என்கின்றார் இரா. இரவி.
முனைவர் அ. கோவிந்தராஜீ :  இவர் ‘கவிதைத்தேன்’ என்னும் நூலுக்குச் சொந்தக்காரர்.  நூலைப் படித்தால் மாணவர்கள் பெறும் பயன், கல்வியின் மேன்மை, ஒழுக்கம் ஆகியவற்றோடு காந்தியடிகள், காமராசர் ஆகியோரையும் பாடுபொருளாக்கிய திறனை விமர்சகர் தக்க கவிதைகள் கொண்டு விமர்சித்துள்ளார்.
முனைவர் நிர்மலா மோகன் :  இவர் ‘சங்கச் சான்றோர் ஆளுமைத் திறன்’ என்னும் நூலில் குறுந்தொகையில் உள்ள உலக நிகழ்வுகளை பெற்ற பாடலின் விளக்கம் தமிழரின் ஆளுமைப் பெருமைகளைச் சொல்லும்.  மனித நேய மாண்பினைச் சொல்லும் பாங்கி நேர்த்தியானது.  கல்வியின் சிறப்பு, கவிஞர்கள் செயல்பட வேண்டியதைக் குறிப்பிட்டுள்ள விதம் மிகவும் நன்று,.
இனி கவிஞர்களைப் பற்றிய விமர்சனங்களை அறிவோம்.
கவிஞர் மீரா :  இவரது கவிதை நூல் ‘ஊசிகள்’ அமைச்சர், மேயர் யாராக இருந்தாலும் தவறுகளை ஊசிகள் கொண்டு குத்துவது போல் கவி யாத்துள்ள திறம் காணலாம்.
‘கவிக்கோ’ அப்துல் ரகுமான் : இவர் ‘கண்ணீர்த் துளிகளுக்கு முகவர் இல்லை’ என்னும் நூலை யாத்துள்ளார். கொள்கைப் பிடிப்பும், கோட்பாடும் கொண்டவர் இவர்.  ஈழப்படுகொலையையும், நிலவு பற்றியும், அரசு பற்றியும் அறிவார்ந்த சிந்தனையைப் புலப்படுத்தி உள்ளார்.
‘கவி வேந்தர்’ மு. மேத்தா :  இவர் எழுதிய நூல் ‘ஒரு வானம் இரு சிறகு’.  இந்நூலில் ஹைக்கூ சாயலில், 10-க்கு மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ளார்.  இன்றைய அரசியல்வாதிகளின் நிலைபாடு, நீதித்துறையின் நேர்மை இன்மை, இன்றைய கல்விநிலையின் அவலம், மரங்களின் நன்மை, பண்பாடு, மதுவின் கொடுமை, வள்ளுவர் பற்றிய கவிஞரின் கருத்து, பாரதி பற்றிய சிந்தனை ஆகியவற்றை இவரது நூலில் காணலாம்.
கவிஞர் ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் :  இவர் ‘ஒரு நாடும் ஒவ்வொரு நாளும்’ என்னும் நூலை எழுதியுள்ளார்.  38 தலைப்புகளைல் புதுக்கவிதை, மரபுக் கவிதை ஆகியவற்றை எழுதியுள்ளார்.  கவிதைகளில் நூலாசிரியர் தமிழ்ப் பற்று, அன்பின் மேன்மை, அரசியல் அவலங்களை, கடவுளைப் பற்றிய அவரது கணிப்பு ஆகியவற்றை அறியலாம்.
வித்தகக் கவிஞர் பா. விஜய் : இவரது நூல் ‘நட்பின் நாட்கள்’ என்பதாகும்.  62 கவிதைகள் அடங்கிய நூல் இது.  இதில் நண்பன், மதிய உணவு, பள்ளி, கல்லூரி பற்றிய செய்திகள்.  ஆசிரியர் பற்றிய செய்திகள் நூலில் உள்ளன.
கவிஞர் அறிவுமதி :  இவர் மழைப் பேச்சு என்னும் நூலில் மழை, உணர்ச்சிகள், நிலவான காதலி, அருவி, காதல் போன்ற பாடுபொருளோடு மனித நேயத்தையும் இடம் பெறச் செய்துள்ளார்.
கவிஞர் தங்கம் மூர்த்தி : இவரது நூல் ‘மழையின் கையெழுத்து’ இதில் காதல், முதலுதவிப் பெட்டி, கொசுத் தொல்லை, நினைவு ஊர்ச்சாலைகள், லஞ்சம், பட்டாம்பூச்சி, வாழ்வியல் தத்துவம், இயற்கை ஆகியவற்றைக் காணலாம்.
கவிஞர் நெல்லை ஜெயந்தா : இவரது கவிதை நூல் நிலாவானம்.  இதில் பத்திரிக்கைகள், கட்சிகளின் செயல், மகாகவி பாரதியார், தாயன்பு, சாமியார், தந்தை பெரியார், தொலைக்காட்சி, செல்போன் கோபுரம், காதல், ஸ்திரி தொழிலாளி, புத்தர் சிலை, குருவிகளின் நிலை இவை பாடுபொருளாக்கப்-பட்டதை அறியலாம்.
கவிஞர் லிங்குசாமி : ‘லிங்கூ’ என்னும் இவரது நூலில் பனைமரம், மயில், பிச்சைக்காரன், குருவிகள், தேர், இளநீர் வியாபாரி, ஸ்திரி தொழிலாளி, புத்தர், காக்கையின் சபதம், காதல் இவற்றை ஹைக்கூ ஆக்கியுள்ளார். ஹைக்கூ இவருக்கு பிடிபடவில்லை, 3 வரி மட்டும் ஹைக்கூ அல்ல.  வருந்துகிறேன் விமர்சிக்க.
கவிஞர் புதுயுகன் : இவரது நூல் ‘மடித்து வைத்த வானம்’.  சுனாமி, சமுதாயம், இயற்கை, அரசியல் அவலம் இவற்றைப் பாடுபொருளாக்கிய விதம் பாராட்டுக்குரியது.
கவிஞர் கவிமுகில் :  இவரது நூல் ‘கவிமுகில் கவிதைகள்’, பண்பாடு குறையக் காரணம் சி.டி. ஸ்கேன்கள், திருநங்கை, தொலைக்காட்சி தொடர்களின் நிலைபாடுகள், சாமி, குழந்தை, தன்னம்பிக்கை இவற்றைக் கவிதைகளில் கொண்டு வந்த திறம் இவற்றை காணலாம்.
கவிஞர் வசீகரன் :  இவரது கவிதை நூல் ‘மரவரம்’.  இந்நூலில் மரம், வேப்பமரக்காற்று, தென்னம்பிள்ளை, போதி மரம், மரத்தடி நிழல், படரும் கொடி, அத்தி மரம், இலை, ஈழத்தமிழர்கள், குடில், மர நாகரிகம் ஆகியவை ஹைக்கூகளாக்கப்பட்டுள்ள கவிக்கு இயற்கை தந்த வரம் எனலாம்.
கவிஞர் கன்னிக்கோவில் ராஜா :  இவர் ‘வன தேவதை’ என்னும் நூலை இயற்றியவர்.  சூழல் சிதைவு, தமிழீழம், பிள்ளையார் வெண்சுருட்டு, கந்தக நெடி, மலர்கள், அம்மா, மழைத்தூறல், அணு உலை ஆகியவற்றை கன்னிக்கோவில் ராஜா பாடுபொருளாக்கி சிந்திக்க செய்கிறார்.
கவிஞர் விஜயலெட்சுமி மாசிலாமணி :  இவர் ‘கவிதை பாட ஆசை’ என்னும் இந்நூலை எழுதியுள்ளார். கவிதைக்கு இலக்கணம் தேவையில்லை என்னும் இவர், இலை பற்றிய கவிதை, படிப்பு, பெண்ணுரிமை, படைப்பாளி இவை கவிதைக்குப் பாடுபொருளாக்கப் பெற்றுள்ளதைக் கண்டு மகிழலாம்.
கவிஞர் ஏகலைவன் :  இவர் ‘இப்படிக்குத் தோழன்’ என்னும் புதுக்கவிதை  நூலை இயற்றியுள்ளார். தோழமையுணர்வு, அதன் மகத்துவம், தோழமை என்பனவற்றை நூலில் நூலாசிரியர் நிறம்ப பேசியுள்ள திறம் காணலாம்.
கவிஞர் மன்னை பாசந்தி :  இவரது நூல் ‘மின்னல் துளிப்பா’.  கனவு, திருநங்கைகள், சாமியார், வாழ்க்கை, சாதிக் கலவரம், குடிப்பழக்கம், ஈழப்படுகொலை, சமுதாய முன்னேற்றம் போன்றவற்றை ஹைக்கூகளில் பாடுபொருளாக்கியுள்ளதை அறியலாம்.
கவியருவி ம. இரமேஷ் :  இவரது நூல் ‘ஓராயிரம் சென்ரியூ’.  நீதி தேவதை, நீதிமன்றங்கள், மருத்துவமனை, காதல் கவிதைகள், கூரைவீட்டுக்காரன், முருகன்-மயில், காகிதக்கப்பல்கள், செவ்வானம், மின்சாரத் துடிப்பு, முதுகலைப் பட்டதாரி, சீட்டு, அரசியல் போன்ற பாடுபொருட்கள் கவிதைகளாக்கப்படுவதை நூலில் காணலாம்.
கவிஞர் ச. கோபிநாத் :  இவரது நூல் குழந்தைகளைத் தேடும் கடவுள்.  அடுக்கக வாழ்க்கை, பெண்களின் திறமைகள், காதல், மூட நம்பிக்கை, நெகிழிப்பைகளால் விளையும் தீமை, குழந்தைகளின் செயல்கள், வீடுகள், நிலா, மூட நம்பிக்கை, திரைப்பாய் என்பவை பாடுபொருள்களாக்கப்பட்டு உள்ளன நூலில்.
கவிஞர் கவிவாணன் :  இவர், ‘சிறகு முளைத்த பூக்கள்’ என்னும் நூலை எழுதியுள்ளார்.  அரசு, பள்ளி செல்லும் பையன், கவிதை, மின்மினிகள், மனித இரத்தம், குஜராத், பிரிவு, அரசு, காதலியின் அழகு புல்லாங்குழலில் அமர்ந்த வண்ணத்துப்பூச்சி போன்றவை நூலில் கவிதைகளாக்கப்பட்டுள்ள திறம் அறியலாம்.
கவிதாயினி யாத்விகா :  இவர் உனக்காகவே மயங்குகிறேன் என்னும் நூலை யாத்தவர்.  இப்புதுக்கவிதை நூலில் ஒரு பெண்ணே காதலை இயல்பாகவும் வெளிப்படையாகவும் கவித்துவமாகவும் பேசுவதோடு விஞ்ஞானத்தையும் கவிதைகளில் ஊடாடவிட்டது சிறப்பாக உள்ளது.
கவிஞர் நீலம் மதுமயன் :  இவர் படிக்காத மேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை என்னும் நூலை யாத்தவர்.  இந்நூல் நூலாசிரியர் காமராஜர் மீது கொண்ட ஈடுபாட்டை எடுத்துரைக்கிறது.
ஆளுமையாளர் லேனா தமிழ்வாணன் :  இவர், நேரம் நல்ல நேரம் என்னும் நூலை 27 தலைப்புகளில் கட்டுரைகளைல் உருவாக்கியுள்ளார்.  கவனக்குறைவு, வினாடியில் நிகழும் சாலை விபத்து, நாட்களைக் கடத்தல், நேரத்தை மதித்தல், நேரம் உயரிய மூலப் பொருள் போன்றவற்றைச் சொல்லும் நூலாசிரியர் திறம் கண்டு வியக்கலலாம்.
சிந்தனைக் கவிஞர் கவிதாசன் :  இவர் ‘திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன்’ என்னும் நூலை யாத்தவர். சுறுசுறுப்பே வெற்றி தரும். உண்மை நட்பே உயர்ந்தது, அவமானங்களை எழுச்சியாக்கி உந்துசக்தியாய் மாற்றிட வேண்டும் என்னும் கொள்கையில் உள்ளடக்கிய நூலிது.
கவிஞர் ஞா. சந்திரன் :  இவர் ‘வலி தாங்கும் மூங்கில்’ என்னும் நூலை எழுதியுள்ளார்.  தன்னம்பிக்கையை மனதில் விதைக்கும் நூலில் 30 கட்டுரைகள் உள்ளன.  தற்கொலை, அவமானம் இரண்டும் வாழ்வில் நம்மை உயர்த்தவே காமராசர், பெரியார் மேற்கோள் நூலுக்கு அணி சேர்க்கின்றன.
டாக்டர் பெரு. மதியழகன் :  இவர் ‘நினைவாற்றல் மேம்பட வழி’ என்னும் நூலுக்குச் சொந்தக்காரர்.  எதனையும் சாதிக்க நினைவாற்றல் வேண்டும்.  நமது அறிவின் அளவுகோல் நினைவாற்றலே. இதற்கு கற்றல், நினைவிருத்தல், மீட்டடைத்தல் ஆகியவை மீட்டறிதல் பற்றிய விளக்கங்களாகும்.  கஷ்டப்பட்டு, இஷ்டப்பட்டு உழைத்தால் வெற்றி கிட்டும் என நூலாசிரியர் கூறுவது அனைவர்க்கும் பயனுள்ள செய்தியாகும்.
பொறியாளர் கே. முத்துராஜீ : இவர் ‘வரலாற்றில் இன்று’ என்னும் நூலை எழுதியுள்ளார்.  உலகப் புற்றுநோய் தினம் பிப்ரவரி 4.  இந்திய அறிவியல் தினம் பிப்ரவரி 28.  சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8, உலக நுகர்வோர் தினம் மார்ச் 15, இச்செய்திகளோடு உலக ஆட்டிசம் தினம் ஏப்ரல் 2 என்னும் தகவல்கள் அனைவரும் படித்தறிய வேண்டியது.  விரிவாய்-விளக்கமாய் நூலை வாங்கி படித்தறிய வேண்டும்.
கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் :  இவர் ‘யாதும் ஊரே’ என்னும் நூலை இயற்றியுள்ளார்.  பயண இலக்கிய நூலிது.  ஈழத்தமிழர்களின் இன்னல்களை அறிந்தவர் லண்டன், கனடா, பாரீசு, அமெரிக்கா போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்து நூல் எழுதியுள்ளார்.
வெற்றியாளர் ‘அமுதா’ ந. பாலகிருஷ்ணன் :  இவர் எழுதிய நூல் ‘வா.... வியாபாரி ஆகலாம்’ சிறுகதைகள் வாயிலாக படிப்போரை வியாபாரி ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.  நேரத்தின் அருமையை, உழைப்பை, கூட்டு முயற்சியை, விழிப்புணர்வை விதைத்துச் செல்லும் இவர், அறநெறியையும் குறிப்பிட மறக்கவில்லை.
       இவ்வாறு அறிஞர், கவிஞர் பெருமக்களின் நூல்களைக் காண நேர்கின்றது.  நூலாசிரியர்களின் குணாதிசயங்களை இரா. இரவி அறிந்த வகையில்  நூலில் குறிப்பிட்டுள்ளார்.  இது நூலாசிரியர்களை மேலும் அறிய வாய்ப்பாக அமைந்துள்ளது.  இரா. இரவியின் விமர்சனத் தொண்டு மேலும் தொடர வாழ்த்துகின்றேன்.
-- 

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்