தகவல் பேழை ! நூல் ஆசிரியர் ; எண்ணமும் எழுதும் திருமதி ச .செல்வகீதா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

தகவல் பேழை !

நூல் ஆசிரியர் ; எண்ணமும் எழுதும் திருமதி ச .செல்வகீதா !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

சுவாதி பதிப்பகம் ,1/188 சோமு  காளை  இல்லம் ,நத்தம் முக்கியச் சாலை ,பாலாஜி நகர் ,திருப்பாலை ,மதிரை .625014 விலை ரூபாய் 60
அலைபேசி 8012829479.

நூல் ஆசிரியர் திருமதி ச .செல்வகீதா அவர்கள் மதுரையில் ஹலோ பண்பலை வானொலியில் அறிவிப்பாளராகப் பணிபுரிந்து வருபவர். இனிமையான குரலுக்குச் சொந்தக்காரர் .டைரி நிகழ்ச்சியின் மூலம் நேயர்களின் உள்ளங்களைக் கொள்ளைக் கொண்டு வருபவர் . பல்வேறு நூல்கள் படித்து வானொலி  நிகழ்ச்சிகளுக்காக சேகரித்து வழங்கிய தகவல்களை நூலாக்கி உள்ளார்கள் .பணியோடு நின்று விடாமல் மனிதநேயப் பணிகளிலும் ஈடுபாடு கொண்டவர் .அகவிழி பார்வையற்றோர் விடுதி ஆண்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தவர் .நானும் அந்த  விழாவில்   கலந்துகொண்டேன். மலர்ந்து முகத்துடன் எல்லோருடனும் அன்பாகப் பேசும் நல் உள்ளம் பெற்றவர்கள் .

தேனீ பல்வேறு மலர்களில் இருந்து தேன் சேகரிப்பதைப் போல பல்வேறு நூல்களில் இருந்து தகவல் சேகரித்து தகவல் பேழை வழங்கி உள்ளார்கள் .தெளிந்த நீரோடை போன்ற நல்ல நடை. அனைவருக்கும் புரியும் விதமாக தகவல்களைச் சுவைபட எழுதி உள்ளார்கள் .ஒவ்வொரு தகவலுக்கு அடியில் முத்திரை வசனங்கள் மிக நன்று .  

வானொலி நேயர்களை வானொலி அருகே கட்டிப்போட்டு விடும் வசீகர  குரலுக்கு சொந்தக்காரர் .நல்ல எழுத்துக்கும் சொந்தக்காரர் ஆகி விட்டார்கள் .வாழ்த்துக்கள் .பாராட்டுக்கள். தகவல் பேழை என்று தலைப்பிட்டு 102 தகவல்கள் உள்ளன .பயனுள்ள புதிய தகவல்கள்உள்ளன . போட்டித்  தேர்வில் கலந்துகொள்ளும் மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் .பொது அறிவில் ஆர்வம் உள்ளவர்கள் படிக்க வேண்டிய நூல் .தகவல்களை எளிமையாகவும் , இனிமையாகவும் ,  சுருக்கமாகவும் வழங்கி உள்ளார்கள் .கை அடக்க நூலாக வந்துள்ளது .

கலை மாமணி,பேராசிரியர் ,முனைவர் கு . ஞானசம்பந்தன், சிந்தனைக்கவிஞர் கவிதாசன்  இருவரின் அணிந்துரையும் நூலிற்கு வரவேற்பு  தோரண வாயில்களாக  உள்ளன .அட்டைப்பட வடிவமைப்பு உள் அச்சு ,புகைப்படங்கள்   யாவும் மிக நேர்த்தியாக உள்ளன .நூல் ஆசிரியர்  திருமதி ச .செல்வகீதா அவர்கள் ஆசிரியர் தன்னுரையில் அடுத்து  கவிதை நூல் வெளிவரும் என்று குறிப்பிட்டுள்ளார்கள் .விரைவில் கவிதை நூல் வெளியிடுங்கள்  என்ற என் வேண்டுகோளையும் வைக்கிறேன் .தங்களின் கவிதைபடைப்பை காண ஆவலோடு இருக்கின்றோம் .

யான் பெற்ற  இன்பம் பெறுக  இவ்வையகம் என்ற பொது நல நோக்கில் படித்ததில் பிடித்த தகவல்களைத்  தொகுத்து  வழங்கி  உள்ளார்கள் . இதுவரை அறியாத புதிய தகவல்களாக உள்ளன. வானொலி நேயர்கள் மட்டும் அறிந்து இருந்தாலும் மற்றவர்களுக்கு புதிய தகவல்ககள்  . மதுரை புத்தகத் திருவிழாவில் வாங்கினேன் .  புத்தகத் திருவிழாவிலும் புத்தகக் கடைகளிலும்  கிடைக்கின்றது. வாசகர்கள்  வாங்கிப் படித்துப் பயன் பெறுங்கள் .

புத்தக வாசகனுக்கு புதிய அனுபவம் ." நாம் புரட்டுவது புத்தகம் அல்ல நம்மை புரட்டுவது புத்தகம்."  என்பார்கள் முனைவர் வெ  இறையன்பு அவர்கள் .அதுபோல இந்த நூலில் உள்ள சில தகவல்கள் நம்மை புரட்டி விடுகின்றன .எறும்புகள் பற்றி பறவைகள் பற்றி பல நாடுகள் பற்றி பரவசத் தகவல்கள் நூலில் உள்ளன .


பதச் சோறாக சில தகவல்கள் மட்டும் உங்கள் பார்வைக்கு .இதோ .

அளவில் சிறிய தேசிய கீதம் !

ஜப்பான் நாட்டின் தேசிய கீதம்தான் உலகின் மிகவும் பழமையான தேசிய கீதம் .இது (  kimigayo  )என்றழைக்கப்படுகிறது  .அதாவது பேரரசே  நின்  இறை என்பது வார்த்தையின் பொருள் .நான்கு வரிகள் மட்டுமே கொண்ட ஜப்பான் நாட்டின் தேசிய கீதம்
9- ம் நூற்றண்டை நினைவு கூர்வதாக இருக்கிறதாம் .

ரொம்ப நேரம் எழுந்து நிற்க வேண்டியதில்லை  .
.
ஜப்பானியர்கள்   நேரத்தை மிகவும் மதிப்பவர்கள் அதனால்தான் தேசிய கீதத்திற்கு   சில மணி துளை செலவளித்தால் போதும் என்று சுருக்கமாக வைத்துள்ளனர் .

கடலில் குதித்தால் கோபம் குறையும் !

கடலில்  குளிப்பதால் , நம் உடம்பில் இருக்கும் கேடு விளைவிக்கும் கிருமிகள்  அழிக்கப்படுகின்றன . கடல் நீரில் இருக்கும்  உப்பு அதற்கு உதவுகிறது .கடல் நீராடல் மூலம்  தோலில் ஏற்படும் சொறி , சிரங்கு    மூட்டுகளில் ஏற்படும்  வலி , மனஇறுக்கம்  ,கோபம் போன்ற பிரச்சனைகளிலிருந்து  விடுபடலாம் .உடல் பருமன் உடையவர்கள் கடலில் தொடர்ந்து குளித்து வர நல்ல பலன் கிடைக்கும் .

மொத்தத்தில் கடல் உடலுக்கு நல்லது . 

கரையோரமாகவே  குளிப்பதும் , நீச்சல்  தெரிந்து கொண்டு கடலில்   இறங்குவதும்  உயிருக்கு பாதுகாப்பு .இது என் கருத்து  . 

விநோதப் பறவைகள் !

மாஸ்கோவில் அதிகளவில் காணப்படும் மார்டின் பறவைகள் ஆண்டு தோறும் மே  17 ம் நாள் அங்கிருந்து புறப்பட்டு  ஆகஸ்டு 17ம்  நாள் திரும்பவும்  அதே இடத்திற்கு சரியாக வந்து சேர்கின்றனவாம் .

பென்குயின்   பறவைகள் ஒன்றையொன்று விரும்பியபின் பரஸ்பரம்  கூழாங்கற்களை   காதல் பரிசாக அளித்துக் கொள்கின்றனவாம் .

பறவைகள் பலவிதம் ! ஒவ்வொன்றும் ஒருவிதம் !

மேற்கண்ட தகவலைப் படிக்கும்போது பறவைகளுக்கும் பகுத்தறிவு உள்ளதோ ?என்று எண்ணத் தோன்றுகின்றது . நூல் ஆசிரியர் திருமதி ச .செல்வகீதா அவர்களுக்கு பாராட்டுக்கள்  வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் .

.

கருத்துகள்