நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ! கவிஞர் இரா .இரவி

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் !  கவிஞர் இரா .இரவி.

நடிப்பிற்கு சிறந்த  இலக்கணம் வகுத்தவன் நீ
நல்ல கர்ணனை கண்முன் கொண்டு வந்தவன் நீ


தமிழ்த் திரைப்பட வரலாற்றின் நாயகன் நீ
தமிழென அழியாப் புகழைப் பெற்றவன் நீ

பராசக்தி திரைப் படத்தில் அறிமுகமானவன் நீ
பாராத சக்திகளையும் பார்க்க வைத்தவன் நீ


நடிப்பில் நடமாடும் பல்கலைக்கழகம் நீ  
நல்ல வசன உச்சரிப்பைப் புகுத்தியவன் நீ

நாடகத்தில் நடித்துப் பயின்றுத் திரைப்படம் வந்தவன் நீ
திரைப்படத்தில் நடித்து வாழ்க்கையில் நடிக்காதவன் நீ

கூட்டுக்குடும்பப் பெருமையைக் கட்டிக் காத்தவன் நீ
குடும்பத்தின் ஒற்றுமையை பெரிதும் வலியுறுத்தியவன் நீ

அன்பில் பலரை வென்று அரசியலில் தோற்றவன் நீ
நடிப்பில் நிலையாக நின்று திரைஉலகில் வென்றவன் நீ

ஒன்பதுப் பாத்திரங்களையும் வேறுபடுத்திக் காட்டியவன் நீ
ஒன்பது மணி என்றால் எட்டு முப்பதுக்கே இருந்தவன் நீ

தாமதத்தை என்றும் வெறுத்துத் தவிர்த்தவன் நீ
சமாதானத்தை என்றும் எப்பொதும் விரும்பியவன் நீ

போலிப் பிம்பங்கள் மீது நம்பிக்கை இல்லாதவன் நீ
பாத்திரங்கள் எதுவென்றாலும் ஏற்று நடித்தவன் நீ

முகபாவத்தில் நாதஸ்வர வித்துவான்களையே வென்றவன் நீ
முகம் முதல் நகம் வரை நடிப்பைக் காட்டியவன் நீ

வீரபாண்டிய கட்டபொம்மனை அறிமுகம் செய்தவன் நீ
கப்பல்
ஓட்டியத் தமிழனைக் கண் முன் நிறுத்தியவன் நீ

பகுத்தறிவுப் பகலவனிடம் சிவாஜிப் பட்டம் பெற்றவன் நீ
படிக்காதப் பாமரர்களுக்கும் தமிழ்க் கற்பித்த ஆசான் நீ

உணர்ந்தோம் கள்ள வாக்கு அளிப்போரின் திறனை
உனது வாக்கையே வாக்களித்துச் சென்றனர் அன்று

இந்திய தேசத்தில் உன்னைப் போல நடிகர் இல்லை
இந்தியாவோ உனக்கு தேசியவிருதை தரவே இல்லை

செவாலியர் விருதுத் தந்து அயல் நாடுப் பாராட்டியது உன்னை
செந்தமிழனின் திறமையை உலகிற்கு பறை சாற்றியவன் நீ


உன்னைப் போல ஒரு நடிகன் பிறக்க வில்லை
உனக்கு இணையான நடிகன் உலகில் இல்லை 

கருத்துகள்