கவியரசு கண்ணதாசன் கவிஞர் இரா .இரவி


கவியரசு கண்ணதாசன் கவிஞர் இரா .இரவி

எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்து
எட்டாத உயரம் உயரந்தவன் நீ

கவியரசு பட்டத்திற்கு முற்றிலும்
குவலயத்தில் பொருத்தமானவன் நீ

நான் நிரந்தரமானவன் என்று அறிவித்து
நிரந்தரமாக மக்கள் மனதில் நிலைத்தவன் நீ

உன் பாடல் ஒலிக்காத வானொலி இல்லை உலகில்
உன் பாடல் ஒலிக்காத வானொலி வானொலியே இல்லை

ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து வயதினரும்

அன்போடு ரசிக்கும் பாடல் உன் பாடல்

எனக்குப் பிடித்த மதம் தாமதம் என்றுரைத்து
சினம் கொண்ட அவையைச் சிரிக்க வைத்தவன் நீ

படைத்தவன் யார் ?என்பது முக்கியம் அல்ல
படைப்பைப் பாருங்கள் என்று அறிவுறுத்தியவன் நீ

உனக்கு இணையான ஒரு கவிஞன்
உனக்கு அடுத்து யாருமில்லை என்பதே உண்மை

உனக்கு நிகர் நீ மட்டுமே தான்
உன்னை விஞ்சிட எவருமில்லை உலகில்

தொகைக் குறிப்பிடாதக் காசோலைத் தந்தபோதும்
தொகைக் குறிப்பிட ஆசைப் படாதவன் நீ

பணத்திற்காக ஏங்கும இந்த உலகில்
பணத்திற்காக ஏங்காத நல்லவன் நீ

செருக்கோடு இருந்த திரை உலகில் பலரின்
செருக்கை அகற்றிய கவிஞன் நீ

கண்ணதாசனே உன் இயற்ப பெயர் முத்தையா
கற்கண்டென நீ வடித்த பாடல்கள் தமிழின் சொத்து ஐயா

எங்கு நீ கற்றாய் இத்தனை வித்தை
இனிய பாடல்கள் பதிந்து மனதில் விதையாக

காலத்தால் அழியாத கல்வெட்டு வரிகளை
காற்றினில் விதைத்த சகல கல வல்லவன் நீ

நீ குடித்து விட்டு எழுதியதாக அறியாதவர்கள் உளறினார்
நீ குடித்து விட்டு எதையும் எழுத வில்லை அறிந்தவர்கள் சொன்னார்கள்

மகாத்மா காந்தியடிகளின் சத்திய சோதனைப் போல
மன வாசம் வீசும் ரகசியம் இல்லா வனவாசம் படைத்தாய்

அத்திப் பூத்தது போல அதிசயமாகப் பூத்த கவிஞன்
அன்பில் குழந்தைப் போல உள்ளம் கொண்டவன் நீ

வானில் இருந்து வந்த தேவ தூதன் நன் என்று சொல்லாதவன்
மண்ணில் இருந்து பிறந்து மண்மக்களுக்காக் பாடியவன் நீ '

மதுக் குடிக்க உரிமம் கேட்டு நீ விண்ணப்பித்த போது
மறுத்தார் கக்கன்ஜி தமிழ் வாழ வேண்டும் என்பதற்காக

மது மட்டும் நீ குடிக்காமல் வாழ்ந்து இருந்தால்
மதுர கவி இன்னும் பல்லாயிரம் பாடி இருப்பாய்

இயேசு காவியம் எழுதிய காலங்களில் நீ
மிகத் தூய்மையாக இருந்ததாகப் பேராயர் கூறினார்

முன் பாதியில் உனக்கு இணையான நாத்திகன் இல்லை
பின் பாதியில் உனக்கு இணையான ஆத்திகன் இல்லை

சிறு கூடல் பட்டி என்ற சிற்றூரில் பிறந்த நீ
சிகாகோ வரை புகழ் பலப் பெற்றாய்

உன் பாடல் இல்லை என்று பொய் உரைத்தப் போதும்
உன் பாடல் தான் என்று அறுதியிட்டார் மக்கள் திலகம்

உடலால் உலகை விட்டு மறைந்த போதும்
பாடலால் மக்கள் மனங்களில் வாழ்பவன் நீ

உலகம் உள்ளவரை தமிழ் மொழி நிலைக்கும்
தமிழ் மொழி உள்ளவரை உன் புகழ் நிலைக்கும்

கருத்துகள்