மனிதனைத் தேடி , நூல் விமர்சனம்: கவிஞர் இரா.இரவி

https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=129fdccfd6a94cf1&attid=0.3&disp=inline&realattid=f_gbyll5uk2&zw

மனிதனைத் தேடி , நூல் விமர்சனம்: கவிஞர் இரா.இரவி

நூல் ஆசிரியர் : கவி வேந்தர் மு.மேத்தா-


நூலின் அட்டைப்படத்தில் புதுக்கவிதையின் தாத்தா கவிஞர் மேத்தா-வின் புகைப்படம் அலங்கரிக்கின்றது. “மனிதனைத் தேடி ” கவிதை நூலின் தலைப்பு இன்றைக்கு மிகப்பொருத்தமாக உள்ளது. மேல்நாட்டு அறிஞர்கள்,”கையில் விளக்குடன் மனிதனைத் தேடுகின்றேன்” என்று தேடுவதைப் போல,இன்றைக்கு மனிதாபிமானமிக்க மனிதனாக வாழக்கூடிய நல்ல மனிதனை,தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்தக் கருத்தை வலியுறுத்தும் விதமாக பல்வேறு இதழ்களில் பிரசுரமான கவிதைகளின் தொகுப்பாக வந்துள்ளது.


மனிதம் மறந்து,சாதிமதக் கலவரத்தில் ஈடுபட்டு,வன்முறை வளர்க்கும் மனித விலங்குகளை,மனிதனாக்கும் விதமாக கவிதைகளைப் படைத்து உள்ளார் கவிஞர் மு.மேத்தா,21.03.1999 அன்று எழுதிய கவிதையில் இணையம் பற்றியும்,மின்னஞ்சல் பற்றியும் குறிப்பிட்டு உள்ளார் தொலைநோக்கு சிந்தனையாளர் கவிவேந்தர் மு.மேத்தா. மு.மேத்தா என்றால்,புதுக்கவிதையின் முன்னோடி என்று பொருள். நூலில் அணிந்துரை,என்னுரை என்ற பெயரில் பக்கங்களை விரையம் செய்யாதல் நேரடியாக கவிதைகளை அச்சிட்டு உள்ளனர்.


வெளிநடப்பு
ஆயுதம் ஏந்துகிறார்கள் பக்தர்கள்
ஆலறி ஓடுகிறான் கடவுள்


கவிதையின் கடைசி இரண்டு வரிகள் நம்மை சிந்திக்க வைக்கின்றன. வன்முறை வெறியாட்டம் நடத்தி கடவுளுக்கு ஆலயம் கட்ட வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு கட்டினால்,கடவுள் அலறி ஓடி விடுவார் என வன்முறையாளர்களுக்கு புத்திப் புகட்டும் விதமாக கவிதை உள்ளது.


சுயவரம்


சிறகுகள் உனக்கு சீதனமாய் வந்தன
நீ சிலுவைகளை தயாரித்துக் கொண்டாய்
பாரம் சுமப்பதாய்ப் பறைசாற்றுகிறாய்
வரங்களே உனக்கு வழங்கப்பட்டன அவற்றை
சாபங்களாய் மாற்றி ஏன் சங்கடப்படுகிறாய்?ஸ


சுயவரத்தில் தவறானவர்களைத் தேர்வுசெய்து விட்டு தவிக்கும் பெண்களின் சோகத்தை சொற்களால் வடித்து உள்ளார்.


நாதன் உள் இருக்கையில்,நட்டக் கல்லும் பேசுமோ என்ற சித்தர் பாடல்களை நினைவூட்டும் விதமாக ஒரு கவிதை உள்ளது.


தேடல்


கோவில் கோவிலாய் யாரைத் தேடுகிறாய்? கடவுளை
உனக்குள் இருப்பவரை நீ எப்படி வெளியே பார்க்க முடியும்?
அங்கே மனிதர்கள் இருக்கிறார்கள் ஆனால் மனிதர்களாக இல்லை!
நான் மனிதனாக இருக்கும் மனிதனைத் தேடுகிறேன்.


மனிதன் மனசாட்சியை தன்னையே கடவுளாகக் கொண்டு வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும். மனிதனைத் தான் மனிதனாக இரு என்று அறிவுறுத்த வேண்டிய அவல நிலை.விலங்கிலிருந்து வந்தவன் தான் மனிதன். அதற்காக மனிதன் விலங்காக மாறக் கூடாது என எச்சரிக்கை செய்ய வேண்டி உள்ளது. இன்றைய படைப்பாளிகளின் முக்கியக் கடமை என்னவென்றால்,மனிதனை மனிதனாக வாழ அறிவுறுத்தும் படைப்புகளே இன்றைய தேவையாக உள்ளது.


பரமனுக்கு நீ தான் பாதுகாவலனா?
கறுப்புப் பூனைப் படையுடன் காட்சியளிக்க
கடவுள் என்ன கட்சித் தலைவனா?


உண்மை தான்.இப்போது பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலங்களின் போது கட்சித் தலைவருக்கு உரிய பாதுகாப்பை விட கூடுதல் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். அப்படி இருந்தும் விரும்பத்தகாத மோதல்கள் நடைபெற்று வருகின்றன. மசூதி வழியாகத் தான் செல்வோம் என்பதும்,மசூதி முன்பு உரக்க மத்தளம் அடித்தல்,வம்பு இழுத்தல் வன்முறை வளர்த்தல் வாடிக்கையாகி வருகின்றது வேதனை.


மலர்களை உதிர்க்கும் காற்றைக் கூட மன்னிக்க மனம் வராது
மனிதர்களை உதிர்க்கும் மதவெறிகளுக்கு மண்ணில் இடம் ஏது?


எந்த ஒரு தாயும் தன் மகன் நல்லவனாக இருக்க வேண்டுமென்றே விரும்புவான். அவன் கெட்டவன் ஆகி விட்டால் கொதித்துப் போவாள்.


தலைப்புச் செய்தி


விபத்தில் தப்பித்துக் கொண்ட தாய்
செய்தி கேட்டுச் செத்துப் போனால்
ரயிலுக்கு வெடி வைத்தவன் மகன்!


தீபங்களை அணைத்து விட்டு,தீப்பந்தங்களை உயர்த்திப் பிடித்தபடி ஊருக்குள் புகுந்தது ஒரு மதவெறிக் குமபல். இந்திய தொழுநோய்க்கு மருத்துவம் பார்க்க வந்த ஆஸ்திரேலிய மூலிகை அதன் தங்கத் தளிர்களுடன் சாம்பல் ஆனது.


ஓரிசாவில் ஸ்டீவர்ட் ஸ்டெயின்ஸ் என்ற பாதிரியாரை குழந்தைகளுடன் எரித்துக் கொன்ற மனிதாபிமானமற்ற காட்டுமிராண்டிச் செயலுக்கான கண்டனத்தை கவிதைகளில் பதிவு செய்துள்ளார்.


யாதும் ஊரே


சாதிமத சமயப்பூசல்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு
முந்திய அழுக்கு நாட்காட்டிகள்
மூலையில் வீச வேண்டிய அவற்றிலா முகம் பார்த்துக் கொண்டிருக்கிறாய்?


பெரியகுளத்தில் பிறந்த கவிவேந்தர் மு.மேத்தா பெரிய உள்ளத்திற்குச் சொந்தக்காரர். சாதிமத மோதல்களை விடுத்து மனிதன் மனிதனாக வாழவேண்டும் என்று மனிதநேயம் வலியுறுத்தும் விதமாக இந்த “மனிதனைத் தேடி” நூலை எழுதி உள்ளார். புதுக்கவிதை ரசிகர்களுக்கு பலா இந்த நூல். கண்ணீர்ப் பூக்கள் என்ற முதல் நூலி;ன் மூலம் பல்வேறு பதிப்புகள் வர காரணமாக இருந்த சாதனையாளர்,சாகித்ய அகதெமி விருது பெற்ற கவிஞர் மு.மேத்தா அவர்களின் தரமான படைப்பு. வளரும் கவிஞர்கள் அவசியம் வாங்கி வாசிக்க வேண்டிய நூல். கவி வேந்தர் என்ற பந்தா இல்லாத எளிமையான மனிதர். பழகுவதற்கு இனிமையான மனிதர். புதுக்கவிதைக்கு புதுப்பாதைப் போட்டவரின் பூபாளம் இந்நூல்.

கருத்துகள்