படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

John Durai Asir Chelliah 2 நா · இயக்குநர் மணிவண்ணன் பற்றி ஒரு சில ஆண்டுகளுக்கு முன் நான் கேள்விப்பட்ட தகவல் இது. இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது. ஆனால் மிகவும் நம்பகமான நண்பர் மூலம் வந்த தகவல் என்பதால், இதில் உண்மை இருக்கலாம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. 1997 கோவை சம்பவம். கலவரம் பல இடங்களுக்கும் பரவிய காலம் அது. இந்தக் கலவரத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒரு அப்பாவி இஸ்லாமியப் பெரியவர், பள்ளிவாசல் இமாம் ஆக இருப்பவர், மசூதியிலிருந்து திரும்பும் வழியில், வழி மறித்துக் கொல்லப்பட்டாராம். அடுத்த சில நாட்களில்... விடிந்தும் விடியாத ஒரு அதிகாலை வேளை. அந்த பெரியவரின் வீட்டு வாசல் கதவு தட்டப்பட்டதாம். பதட்டத்துடனும், பயத்துடனும் மெல்ல கதவை திறந்து பார்த்திருக்கிறார்கள் அந்த இஸ்லாமிய பெரியவரின் குடும்பத்தினர். வாசலில் நின்றவர் - மணிவண்ணன் . அந்தக் குடும்பத்தினர் எதுவும் புரியாமல் திகைத்து நிற்க, அனுமதி பெற்று உள்ளே வந்த மணிவண்ணன், தன்னுடைய அனுதாபத்தை அந்தக் குடும்பத்திற்குச் சொல்லி விட்டு, தன் கையில் இருந்த ஒரு பையை, இறந்து போன இஸ்லாமியப் பெரியவரின் மகன் கையில் கொடுத்திருக்கிறார். உள்ளே இருந்தது - ஒரு லட்சம் ரூபாய் ! ஒன்றும் புரியாமல் அந்தக் குடும்பத்தினர் குழம்பி இருக்கிறார்கள் . இஸ்லாமிய பெரியவரின் மரணம் பற்றி, தான் மிகவும் மனம் வருந்துவதாகச் சொன்ன மணிவண்ணன், 'இது ஈடு செய்ய முடியாத இழப்புதான் ; எனினும் தன்னால் முடிந்த இந்த சிறு உதவியை அந்தக் குடும்பத்தினர் மறுப்பு எதுவும் சொல்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும்' என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு லட்சம் ரூபாயை அந்தக் குடும்பத்தினர் கையில் கொடுத்து விட்டு, உடனடியாக புறப்பட்டுப் போய்விட்டாராம் மணிவண்ணன். சமீபத்தில் நான் சந்தித்த ஒரு இஸ்லாமிய நண்பர், இந்த தகவலை என்னிடம் பகிர்ந்து கொண்டார். “இது உண்மையாக இருக்குமா ?” என்று நான் கேட்டேன். “அந்த இமாமின் மகனே என்னிடம் சொன்ன தகவல் இது. கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் எனக்கே தெரியும்” என்றார் அந்த நண்பர். இதில் உண்மை இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம். ஆனால் மணிவண்ணன் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்; பகுத்தறிவு பேசுபவர் என்பது உலகறிந்த உண்மை. ஒன்று மட்டும் நிச்சயம் ! ஆத்திகம் பேசிக் கொண்டு அநியாயம் செய்யும் மனிதர்களை விட , நாத்திகம் பேசினாலும் நல்லதையே செய்யும் மனிதன் உயர்ந்தவன் ! மணிவண்ணன் நினைவு தினம் (15 ஜூன் 2013)

கருத்துகள்