கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் . நூல் ஆசிரியர் கவிஞர் மீரா . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் . நூல் ஆசிரியர் கவிஞர் மீரா . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி விஜயா பதிப்பகம் 20.ராஜ வீதி ,கோவை . விலை ரூபாய் 100. நான் வாலிபனாக இருந்தபோது மிகவும் ரசித்துப் படித்த நூல் இது . கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .என்று நூலின் பெயரே மிகவும் வித்தியாசமாக உள்ளது .அக்டோபர் 1971 இல் முதல் பதிப்பாக வந்தது. தற்போது 14 பதிப்புகளைத் தாண்டி விற்பனை ஆகி வரும் நூல் .நூல் ஆசிரியர் கவிஞர் மீரா என்ற பெயரை வாசித்ததும் சிலர் நூல் ஆசிரியர் பெண் என்று எண்ணக் கூடும் .மீ .ராஜேந்திரன் என்ற பெயரை மீரா என்று சுருக்கிக் கொண்ட புதுக்கவிஞர் .நூல் ஆசிரியர் கவிஞர் மீரா அவர்கள் மறைந்து விட்டார்கள் ஆனால் அவர் கவிதைகளால் இன்னும் வாழ்ந்து கொண்டு இருப்பவர் . மறைந்த நடிகர் முரளி நடிகை ஹீரா நடித்த இதயம் என்ற திரைபடத்தில் இந்த நூல் கவிதைகள் இடம் பெற்றது .பலரின் வரவேற்பைப் பெற்றது. விஜயா பதிப்பகத்தின் தரமான பதிப்பாக கண்ணைக் கவரும் வண்ணப் படங்களுடன் நூல் வந்துள்ளது .நூல் ஆசிரியர் கவிஞர் மீரா அவர்கள் தன்னடக்கம் காரணமாக நூலின் ஆரம்பத்தில் "கவிதையல்ல ஆக்கிக் கொள்ளலாம் " என்று அறிவித்து உள்ளார் .இந்த நூல் முன்பே படித்ததின் காரணமாக என்னுடைய நூலுக்கு "கவிதையல்ல விதை " என்று பெயர் சூட்டினேன்.கவிதைகள் வசன நடையில் இருப்பதால் யாரும் இது கவிதை அல்ல என்று விமர்சனம் செய்து விடக் கூடாது என்பதற்காக முன் எச்சரிக்கையாக இப்படி அறிவித்து உள்ளார் .வசன நடையில் இருந்தாலும் அனைத்தும் வாசகர்களின் உள்ளதைக் கவரும் கவிதைகள் .பதச்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு . உன்னை வரவேற்கிறேன் ! என்னை மீண்டும் இசைக்க வைத்துள்ளாய் ! உன்னை வரவேற்கிறேன் ! நான் மகர யாழ் உன் மணிக்கரம் தீண்டினால் போதும் ! என்னால் உனக்குப் பெருமை வரும் ! என்னால் உனக்கு வாழ்வு வரும் ! உன்னை வரவேற்கிறேன் ! கவிதைகளில் விஞ்ஞானம் எழுதுகின்றார் .காதலும் எழுதுகின்றார். நியூட்டன் புவியீர்ப்புச் சக்தியைக் கண்டுபிடித்தான் ! நான் என் உயிர் ஈர்ப்புச் சக்தியைக் கண்டுபிடித்தேன் ! என் கண்டுபிடிப்பே நீ வாழ்க ! காதலில் முக்கியம் முக்கித்துவம் உண்டு .காதலைப் பற்றி எழுதும்போது கண்கள் பற்றி எழுதாமல் இருக்க முடியாது .கண்களை தவிக்கவும் முடியாது. கவிஞர் மீராவும் கண்கள் பற்றி எழுதி உள்ளார் . உனக்கென ஒரு பார்வையை வீசி விட்டுப் போகிறாய் ! என் உள்ளமல்லவா வைக்கோலாய்ப் பற்றி எரிகிறது ! உனக்கென்ன ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டுப் போகிறாய் ! என் உயிரல்லவா மெழுகாய் உருகி விழுகிறது ! காதலித்துக் கொண்டே காதலிக்க வில்லை என்று பொய் சொல்லும் காதலியைப் பார்த்து காதலன் கேட்பதுப் போல ஒரு கவிதை . என் வீட்டு முற்றத்தில் பெய்யும் மழை ! உன் வீட்டு முடரத்தில் பெய்கிறது ! என் தோட்டத்தில் பாடும் குயில் ! உன் தோட்டத்தில் பாடுகிறது ! என் கண்ணில் படும் நிலா ! உன் கண்ணில் படுகிறது ! என் இதயத்தில் நுழையும் காதல் மட்டும் உன் இதயத்தில் நுழைய வில்லையா ? காதலின் இருப்பிடம் இதயம் என்று அன்று பாடியதில் தவறு இல்லை. ஆனால் இன்று காதலின் இருப்பிடம் மூளை என்று விஞ்ஞானம் சொல்கின்றது .இதயமாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கும் காதல் மறப்பதில்லை . காதலியைப் பார்க்கச் சொல்லி வேண்டிடும் காதலன் கோரிக்கை போல ஒரு கவிதை ! நீ வானத்தைப் பார் சூரியன் குளிரட்டும் ! நீ பூமியைப் பார் பாலைவனங்கள் குளிரட்டும் ! நீ என்னைப் பார் என் இதயமும் கொஞ்சம் குளிரட்டுமே ! காதலியின் பெயரை ,காதலியின் முகத்தை பாராட்டாத காதலன் இருக்க முடியாது .பாராட்டும் கவிதை . உலக மொழிகள் அனைத்திலுமுள்ள உயர்ந்த கவிதைகளைத் தேடி எடுத்துப் படித்துள்ளேன் . என்றாலும் எனக்குப் பிடித்த கவிதை உன் பெயர்தான் ! வையப் புகழ் வாய்ந்த ஓவியர்கள் வரைந்துள்ள சிறந்த சித்திரங்களை விரும்பி வாங்கிப் பார்த்துள்ளேன் ! என்றாலும் எனக்குப் பிடித்த சித்திரம் உன் முகம்தான் ! அந்தக் கால கவிஞர்களுக்கும் இந்தக் கால திரைபட க் கவிஞர்களுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்த்தும் கவிதை .காதலை மிகவும் கண்ணியமாக எழுதி உள்ளார் .முத்தம் என்ற சொல்லைக் கூட பயன்படுத்தாமல் எழுதி உள்ளார் . கொஞ்ச காலமாக உன் இதழ்களால் அமுதம் போன்ற ..... ....... நான் பேராசைக்காரன் ! முத்தம் கேட்பதையே பேராசை என்கிறார் .இன்றைய இளைய சமுதாயம் உணர வேண்டிய வைர வரிகள் . இன்று உள்ள துறவிகள் பற்றற்று இல்லை பற்று மிக்கவர்களாக உள்ளனர். என்பதை தொலைநோக்கு சிந்தனையுடன் அன்றே கவிஞர் மீரா பாடி உள்ளார். நான் சகல பற்றுகளையும் வீசி எறிந்து விட்டு உன் மீது மட்டும் பற்று வைக்கும் துறவியாப் போகிறேன் ! யோகிகள் யோகிகளாக இருப்பதில்லை .பலரும் பகல் வேசம் போட்டு யோகிகளாக வலம் வருகின்றனர் .மக்களும் அவர்களிடம் ஏமாந்து விடுகின்றனர் .யோகிகளே திருந்துங்கள் அல்லது யோகி என்று சொல்லிக் கொளவதை நிறுத்துங்கள் .என்பதுப் போன்ற கவிதை .காதலைப் பற்றி எழுதும் போதும் சமுதாயத் தீங்கு சாடுவது போல கவிஞர் மீரா எழுதி உள்ளார். பாராட்டுக்கள் . நான் விழுந்து விட்டேன் ! ஆர்வத்தோடு பாத பூசை செய்ய வந்த பக்தி ஒருத்தியிடம் யோகி ஒருவன் வீழ்வதைப் போல நான் விழுந்து விட்டேன் ! காதலியிடம் வைக்கும் வேண்டுகோள் போல ஒரு கவிதை ! ஊர் கிடக்கட்டும் கவிஞன் பித்தன் என்று எதையாவதும் சொல்லும் ! நீ மட்டும் என்னை என் இனிய காதலன் என்று சொல் போதும் ! நூல் ஆசிரியர் கவிஞர் மீரா அவர்களைப் பற்றி இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த நூல் விமர்சனம் எழுதி உள்ளேன் .1971 ஆண்டிலேயே காதலை எவ்வளவு மென்மையாகவும் மென்மையாகவும் எழுதி உள்ளார் என்பதை எண்ணிப் பார்க்க வியப்பாக உள்ளது

கருத்துகள்