கவியருவி ஈரோடு தமிழன்பன்
வாழ்க்கைப்
பயணம் திடுக்கிட்டுநிற்கிறது
திசைகள்
நடக்க இயலாதவை
வருத்தத்தை அனுப்பி என்ன நடந்தது
என்று பார்த்துவரும்படி ஏவின,
ஒரு தாய் இறந்துபோய்விட்டாள்
அவள்
வாழ்க்கையால் அந்தக் குழந்தையைப்
பிரிய முடியவில்லை
என்ன செய்வது
இறக்காத அவள் இதயம்
இன்னும் துடித்துக்கொண்டுதான்
இருக்கிறது.
அவள் கையிருப்பில்
இன்னும் இருக்கும் முத்தங்களை
என்ன செய்வாள்?
யார் மூலமாகக் குழந்தைக்குக்
கொடுத்துப்புவாள்?
அவள்
கடைசியாகப் பாடிய தாலாட்டு
தொட்டிலில் இன்னும் உறங்கும்
குழந்தையின்
தூக்கத்திலேயே தானும்
தூங்கிக் கொண்டிருக்கலாம்.
அவளுடைய
சாகாத மனத்தின் அதிசய அறைகளில்
நிரம்பியிருக்கும்
கதைகளை அவள் ஆசைக் குழந்தை
காதாரக் கேட்க வாய்ப்பு உண்டா?
மரணத்தின்
எல்லாத் தெருக்களிலும் நிசப்தம்!
சொல்லிழந்த கண்ணீரின் பாடல்!
இருண்ட இதயத்தைத்
தன் குழந்தையின்பிஞ்சு விரல்கள்
தொட்டதும் சட்டென்று
எழுகிறாள் அந்தத் தாய் !
17--6-25 காலை 9-25
தலைப்பு- மனத்தின் அதிசய அறைகளில்.
கருத்துகள்
கருத்துரையிடுக