பண்பாளர் இறையன்பு அவர்கள்! - கவிஞர் இரா. இரவி

பண்பாளர் இறையன்பு அவர்கள்! - கவிஞர் இரா. இரவி 21.08.2023 அன்று திருமண உறுதி ஏற்பு விழாவிற்கு சென்னை சென்று இருந்தேன். அன்று இரவு 9 மணிக்கு முதுமுனைவர் வெ. இறையன்பு ஐயா அவர்களை அலைபேசியில் அழைத்து, சென்னை வந்துள்ளேன். நாளை உங்களைச் சந்திக்க வரலாமா? என்று கேட்டேன். காலை 9.30 மணிக்கு வந்துவிடுங்கள் என்றார். சென்னை போக்குவரத்து நெரிசலால் செல்ல தாமதமாகி 10 மணிக்கு சென்றேன். உதவியாளர் ராஜசேகருடன் இணைந்து முக்கியப்பணி செய்து கொண்டு இருந்தவர், அப்பணிகளை விட்டுவிட்டு என்னை வரவேற்று, பேசிக்கொண்டு இருந்தோம். 1 மணி நேரம் இலக்கியம் தொடர்பாக பேசிக்கொண்டு இருந்தோம். அவரது வேலைகள் பாதிக்கிறது என்பதை உணர்ந்து, ஐயா செல்கிறேன் என்று எழுந்தேன். அமருங்கள் இன்னும் கொஞ்சம் நேரம் பேசலாம் என்றார். அவ்வளவு அன்பு. அவருடைய நூலகத்தில் எண்ணிட்டு வைத்துள்ள நூல்களில் 10 நிமிடங்கள் ஆராய்ந்து “ஜே.வி. நாதன் சிறுகதைகள்” என்ற நூலை அன்பளிப்பாக வழங்கினார். மேடையில் பேசும் தங்களுக்கு பயன்படும் நூல் இது என்றார். விடைபெறும் போது வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார். “அவர் மலை” என்றால் “நான் மடு”. சாதாரணமான என்னையும் மதித்து அவர் காட்டிய அன்பு மறக்க முடியாதது. வாழ்வில் பொன்னாளாக அமைந்தது. பயனுள்ள சந்திப்பு.

கருத்துகள்