படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! உழைப்பு என்ற ஆயுதம்..!!

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! உழைப்பு என்ற ஆயுதம்..!! என்னால் முடியாது என்று அடிக்கடி சொல்லாதீர்கள்! அது ஆழ் மனசில் பதிந்து, அது தன் வேலையைச் செய்யும்! நீங்கள் எந்த வேலையில் ஈடு பட்டாலும், நம்மால் முடியாது என்று நினைத்தால் அது உங்களைப் பலவீனப் படுத்திக் கொண்டே இருக்கும்! அதற்குப் பதிலாக என்னால் முடியும் என்று அடிக்கடி சொல்லிப் பாருங்கள்! அது அடி மனசில் பதிந்து, நீங்கள் செயல் படும் பொழுது ஊக்கப் படுத்திக் கொண்டே இருக்கும்! விடியும் ஒவ்வொரு நாட்களையும் உற்சாகத்தோடு வரவேற்கப் பழகிக் கொள்ளுங்கள்! அப்பொழுது தான் அன்றாடம் நீங்கள் செயல் படுவதற்கு தேவையான சுறு சுறுப்பு கிடைக்கும்!* வாழ்க்கையில் எதிர் படும் தோல்விகளைக் கண்டு அஞ்சாமல் தொடர் முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் தான் வாழ்க்கையில் வெற்றியடைகிறார்கள்! பணத்தைப் பார்த்துப் பார்த்து செலவு செய்யத் தெரிந்த பலர், நேரத்தை வீணாக கண்டபடி செலவு செய்கிறார்கள்! அதனால் தான் அவர்கள் முன்னேற்றம் தடை படுகிறது! நமக்கு வேண்டிய சக்தி நமக்குள்ளே தான் இருக்கிறது. நாம் அதை பயன் படுத்தும் அளவைப் பொறுத்தே நம் முன்னேற்றம் இருக்கிறது! நம்மால் முடியும் என்று நம்பினால் நிச்சயம் அந்தக் காரியம் நினைத்தபடி நிறைவேறி விடும்! நம் மனசுக்குள் தளராத நம்பிக்கை என்ற ஒரு ஜெனரேட்டர் இருக்கிறது! அதை ‘ஆன்’ பண்ணினால் வேண்டிய மட்டும் நமக்கு சக்தியை உருவாக்கிக் கொடுக்கும்! வாழ்க்கையில் வெற்றி பெற விரும்புபவர்கள் தங்கள் ஆழ் மனசில் நல்ல சிந்தனைகளை விதைத்துக் கொண்டே இருக்க வேண்டும். எப்பொழுதும் நல்ல சிந்தனைகள் நல்ல பலன்களையும், தீய சிந்தனைகள் தீய பலன்களையும் தரும் என்பதை மறந்து விடாதீர்கள்! நம் சிந்தனைகள் எப்பொழுதும் நேர்மையான பாதையில் இருக்கும் பட்சத்தில், யார் என்ன நினைப்பார்கள் என்று ஒரு நிமிடம் கூட கவலைப் பட வேண்டிய அவசியம் இல்லை! வெற்றி பெற்றவர்களைக் கவனித்தால் நமக்கு இரண்டு விஷயங்கள் தெளிவாகப் புரியும்! ஒன்று அவர்கள் எப்பொழுதும் நேர்மையான வழியிலேயே சென்றிருப்பார்கள்! இரண்டு அவர்கள் எந்த சூழ் நிலையிலும் தங்கள் தன்னம்பிக்கையை இழந்திருக்க மாட்டார்கள்! நமது இலட்சியம் மட்டும் மிக உயர்வாக இருந்தால் போதாது. அதை அடையும் வழியும் உயர்வாகவே இருக்க வேண்டும்! ஒரு காரியத்தைத் தொடங்கும் பொழுது இருக்கும் வேகம் அதை முடிக்கும் வரை இருக்க வேண்டும்! ஓவ்வொரு அனுபவமும் ஒரு பாடமாக இருக்கும்! எதிர் படும் ஓவ்வொரு தடையும் ஒரு புதிய வழியை யோசிக்க வைக்கும்! நம் கடமைகளை ஒழுங்காக நாம் செய்யும் பொழுது, தீய வழிகளில் நாம் செல்வதை அதே தடுத்து விடும்!* நேரத்தை வீணாக்குவதும், நம்பிக்கையை இழப்பதும் கிட்டத்தட்ட தற்கொலை முயற்சி தான்! நேர்மையும், நாணயமும் இல்லாதவர்கள் தேடிக் கொள்ளும் புகழும், வெற்றியும் நிரந்தரமானது அல்ல! விரைவில் படு குழியில் தள்ளி விடும்! நல்ல புத்தகங்கள் படிப்பது நல்ல அறிவாளிகளுடன் பேசுவதற்கு சமம்!* யாரிடம் பேசினாலும் அளவோடு பேசுங்கள்! இனிமையாகப் பேசுங்கள்! நல்ல ஒழுக்கத்தை விட மேலான ஒன்றை நீங்கள் உங்கள் குழந்தைக்கு கற்றுத் தந்து விட முடியாது! எப்படி ஒருவன் மொட்டை அடிப்பதால் மட்டும் துறவியாகி விட முடியாதோ, அது போல் வெறும் ஆசைப் பட்டால் மட்டும் வாழ்க்கையில் முன்னேறி விட முடியாது! நம்பிக்கையோடு உழைப்பு என்ற ஆயுதத்தை கைகளில் எடுங்கள்! அது வறுமை, சோம்பேறித்தனம், தீய குணம் அனைத்தையும் பொசுக்கி, உங்களை வெற்றிக்கு அழைத்துச் சென்று விடும்.

கருத்துகள்