25.4.2021 தேதியிட்ட ராணி வார இதழில் " மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-*

25.4.2021 தேதியிட்ட ராணி வார இதழில் " மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-* * உள்ள உணர்ச்சிகளை எப்போதும் முகம் காட்டிக் கொடுத்துவிடுமா? பொதுவாக உடல்மொழி வாய்மொழியை விட உண்மையானது. ஆனால், முக அசைவுகளைக் கூட பயிற்சியால் மாற்றியமைக்க முடியும். மகிழ்ச்சியாக இருப்பதைப்போல நடிக்க முடியும். ஆனால், கண்கள் உண்மையான உணர்வுகளைக் காட்டிக் கொடுத்து விடுகின்றன. அவற்றைப் படிக்க நிபுணத்துவம் தேவை. * குட்டக் குட்டக் குனிவது பற்றி...? சிறிது குனிந்து சட்டென நிமிர்ந்தால் குட்டுபவர்களின் குட்டு வெளிப்பட்டுவிடும். பதுங்கிப் பாய்கிற வீரியம் வெளிப்படும். குட்டு வாங்கியவன் அடைகாத்த கோபம் வெளிவருகிறபோது ஆயிரம் மடங்காய் அது இருக்கும். * பணத்திற்கு சிறிதும் ஆசைப்படாத மனிதர்கள் உண்டா? சிலர் உண்டு. ஆனால், புகழுக்கு அதிகம் ஆசைப்படுகிறவர்களாக இருக்கிறார்கள். * வயோதிகம் ஏன் இரண்டாம் குழந்தைப் பருவம்? இரண்டிலும் பொக்கை வாய். ஒன்றில் பல் முளைக்காததால்... இன்னொன்றில் பல் விழுந்ததால்! குழந்தையில் நான்கு கால்...முதுமையில் மூன்று கால்! குழவி, கிழவி இருவரையுமே மென்மையாகக் கையாள வேண்டிய நெருக்கடி ஆகியவற்றால் வயோதிகமும் மற்றொரு குழந்தைப் பருவமே. * எது நல்ல சாவு? 'அவர் இன்னும் சில ஆண்டுகள் இருந்திருக்கக்கூடாதா!' எனப் பலர் ஏங்கும்படி வருவது.

கருத்துகள்