இறையன்பு கருவூலம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை : மு. அழகுராஜ், எம்.ஏ., எம்.எஸ் .சி ., எம்.எட்., எம்.பில் மேனாள் மேற்பார்வையாளர், முன்னை முதுகலை ஆசிரியர்




இறையன்பு கருவூலம் !

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !

நூல் மதிப்புரை : மு. அழகுராஜ், எம்.ஏ., எம்.எஸ் .சி ., 
எம்.எட்., எம்.பில்
மேனாள் மேற்பார்வையாளர், முன்னை முதுகலை ஆசிரியர்
  


வெளியீடு : 
வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017.  பக்கங்கள் : 152, விலை : ரூ.110.
இடம் : உலகத் தமிழ்ச் சங்கம்,                             நாள் : 24.09.2019
*******
நூலாசிரியரைப் பற்றி :

      தமிழ்நாடு அரசு சுற்றுலா துறையில் உதவி சுற்றுலா அலுவலராக கவிஞர் இரா. இரவி பணிபுரிந்து வருகிறார். இவரது நூல்கள் ‘கவிதைச்சாரல் எனத் தொடங்கி ‘இறையன்பு கருவூலம் வரை இருபது நூல்களை கவிதைத் தொகுப்பாகவும், கட்டுரைத் தொகுப்பாகவும் படைத்துள்ளார். பல விருதுகளுக்குச் சொந்தக்காரர்.

      ‘தமிழ்த் தேனீ பேராசிரியர் இரா.மோகன் அவர்களை நடுவராகக் கொண்டு விழிப்புணர்வு, பட்டிமன்றங்களில் பேசி தமிழை வளர்த்தவர் ஆவார்.

      இவரது ஹைக்கூ கவிதைகள் கோவை, திருச்சி, மதுரை பலகலைக்கழகங்களிலும் தமிழ்நாட்டில் சில கல்லூரிகளிலும் பாடல் நூல்களில் இடம்பெற்றுள்ளது மிகப்பெரிய கௌரவமாகும்.
நூலைப் பற்றி மதிப்புரை :

      முதுமுனைவர் வெ. இறையன்பு அவர்கள் படைத்த நூறு நூல்களுள் பதினாறு நூல்கள் தெரிவு செய்யப்பட்டு வாசகர்களுக்கு பயன்படும் வகைகள் தாமே மதிப்புரையும் வழங்கியுள்ளது கூடுதல் சிறப்பாகும்.

      ‘மூளைக்குள் சுற்றுலா என்ற நூல் முதுமுனைவர் இறையன்பு அவர்களின் நூறாவது நூல். இங்கே முதல் நூலாக கவிஞர் மதிப்புரை தருகிறார்.

      இந்த நூலில் மூளையின் செயல்பாடுகளை பற்றி விளக்குகிறார். கையளவு உள்ள மூளை, கடலளவு செயல்புரிகின்ற விதமும், நாடி, நரம்பு, எலும்பு, பல் , இனாமல் என உடல் உறுப்புகளை அனைத்தையும் பற்றியும் விரிவாகவும் விளக்கமாகவும் எழுதியுள்ளார்.

      “யானையின் கருவுற்றிருக்கும் காலம் – 660 நாட்கள், ஒட்டகம் – 406, குதிரை – 345, குரங்கு – 235, சிங்கம் – 120, புலி – 106, முயல் – 40, அணில் – 35 சுண்டெலி 21/2 நாட்கள் என பலரும் அறியப்படாத அரிய தகவல்களை இந்நூலில் காணமுடிகின்றது. அள்ள அள்ள வரும் அட்சயப் பாத்திரம் போல சிந்திக்கச் சிந்திக்கச் சிதறடிக்க வைக்கும் அட்சயப் பாத்திரம் தான் மூளை என்பதை நன்கு உணர்த்தி உள்ளார் முதுமுனைவர்
.
      இரண்டாவது நூலாக, ‘முடிவு எடுத்தல் என்ற தலைப்பில், “முடிவெடுப்பதை நிறுவனங்கள் மாத்திரமே செய்வதில்லை ஒவ்வொரு மனிதனும் காலையில் எழுந்ததிலிருந்து இரவு உறங்கச்செல்லும் வரை முடிவெடுத்துக் கொண்டே இருக்கின்றான்.

      பதச்சான்றாக தனியார் நிறுவனத்தில் ஊழல் செய்தவரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய முடியும். ஆனால் அரசாங்கத்தில் பணிபுரியும் ஊழல் பணியாளர்களை அவ்வளவு எளிதாகப் பணிநீக்கம் செய்ய முடியவில்லை.

      ‘சுயமரியாதை என்னும் நூலில் இன்று பதவிக்காகவும் பணத்திற்காகவும் சுயமரியாதையை இழந்து கொத்தடிமைகளாக மாறி பின் கோடிகள் ஈட்டி கைதாக கம்பி எண்ணும் அவலங்கள் நாட்டில் நடந்து வருவதை நாள்தோறும் ஊடகத்தின் வழி அறிகின்றோம்.

      முதுமுனைவர் வெ. இறையன்பு அவர்கள் எதற்காகவும் நேர்மையை, ஒழுக்கத்தை, பண்பை விட்டுக் கொடுக்காமல் மதிப்பாக வாழ்ந்து வரும் உயர்ந்த மனிதர்.

      ‘உலகை உலுக்கிய வாசகங்கள் என்னும் நூலின் தலைப்பில் ஆழமாக வாசிப்பது அறிவை வளர்க்கும் என்ற ஆழ்ந்த கருத்தில் இந்த நூலையும் வாசித்தால் அறிவும், ஆற்றலும் பெருகும். ‘உலகின் முதல் புரட்சியாளர் புத்தர் பகுத்தறிவின் இலக்கணம் சாக்ரட்டீசு,  அலெக்சாண்டரின் கல்லறை வாசகம், இப்படி நூலின் தலைப்புகளே கட்டுரைகளை வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் வண்ணம் உள்ளன.

      இலக்கியத்தில் மேலாண்மை என்னும் நூலில் இறையன்பு அவர்கள், ‘திருக்குறளில் மனிதவள மேம்பாடு என்ற தலைப்பில் முதல்முனைவர் பட்டமும், திருவள்ளுவரையும்,சேக்சுபியரையும் ஒப்பிட்டு இரண்டாம் முனைவர் பட்டமும், ‘கம்ப இராமாயணத்தில் சொல்லாட்சி என்ற தலைப்பில் கம்பரை மூன்றாவது முனைவர் பட்டத்திற்கும் ஆய்வு செய்தவர் என்ற காரணத்தால் மூவரையும் நன்கு உள்வாங்கி தேவையான இடங்களில் மேற்கோள் காட்டி மிகச் சிறப்பாக வடித்துள்ளார்.

      மேலாண்மை என்பது எங்கும் எதிலும் நிறைந்து உள்ளது குப்பை லாரி என்று நாம் கேவலமாகப் பார்க்கும் வாகனத்தில் ‘திடக்கழிவு மேலாண்மை கோபுரம் கட்டுவதிலும் ஒரு மேலாண்மை உள்ளது. உலகம் வியக்கும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலைக் கட்டி எழுப்பியது ஒரு மேலாண்மை தான் கரிகாலன், கல்லணையைக் கட்டியதும் பென்னி குக் முல்லைப் பெரியார் அணையைக் கட்டியதும் ஒரு மேலாணமை தான்.

      ‘நினைவுகள் என்ற நூலினை படிக்கும்போதே தாம் படித்த பள்ளியின் நினைவுகளும், ஆசிரியர்கள், நண்பர்கள் பற்றிய நினைவுகள் வந்து போயின.

      ‘இல்லறம் இனிக்க என்ற நூலில், ஒரு கணவன் முழுமையாவது மனைவியால் தான். ஒரு மனைவி முழுமையாவது கணவனால் தான். இந்த உண்மையை இருவரும் புரிந்து நடந்தால் வாழ்க்கை இனிக்கும்.

      ‘காகிதம் என்ற நூலில், “மனித வாழ்வில் மகத்தான இடம் காகிதத்திற்கு உண்டு. மணச் செய்தியையும், மரணச்செய்தியையும் காகிதத்தின் மூலமே பரிமாறிக் கொள்கிறோம். மணச்செய்தியையும், மரணச்செய்தியையும் கணினியுகமாக இருந்தாலும் திருமண அழைப்பிதழை காகிதத்தில் அச்சிட்டு வழங்கினால் தான் திருமணத்திற்கு வருவார்கள். மின் அஞ்சலில் அனுப்பினேன் என்றால் கிடைக்கவில்லை, பார்க்கவில்லை என்பார்கள். மரணச்செய்தியை அறிவிப்பதில் காகிதம் முன்நிற்கிறது. மதுரையில் சாதாரண ஒருவர் இறந்தாலும், ‘இமயம் சரிந்தது என்று சுவரொட்டிகள் ஒட்டிவிட்டு தான் பிணத்தை எடுக்கும் பழக்கம் இன்றும் உள்ளது.

      ‘வனநாயகம்  என்ற நூலில் காட்டிற்குச் செல்பவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதைப் பல்வேறு நிகழ்வுகளின் மூலம் அறிவுறுத்தி உள்ளார்.

      ‘வனங்கள் நாம் வாழ்வதற்கான மூலாதாரங்கள் ; ஒரு நாட்டின் பரப்பளவில் 33 சதவிகிதம் வனங்கள் இருக்க வேண்டும்; அப்போது தான் மழை சரியாக பெய்யும், மண்ணரிப்பு தடுக்கப்படும், அருவிகள் உண்டாகும், ஆறுகள் பெருகும், வெப்பமயம் குறையும், வேளாண்மை செழிக்கும்; கால்நடைகள் தழைக்கும் ; சிறுதொழிகள் மேம்படும் ; மண் சுழற்சி அதிகரிக்கும், பொருளாதாரம் உயரும்.

      ‘பணிப்பண்பாடு என்ற நூலில் பணியில் ஈடுபாட்டையும், உழைப்பையும், முயற்சியையும், புதுமையையும், உண்மையையும், அன்பையும், வாய்மையையும் கலக்கிறபோது அது கலப்படம் செய்யாத தூய பணியாகிறது.

      பண்பாடு என்பது வெளியில் இருந்தால் போதாது. பணியிலும் பண்பாடு இருக்க வேண்டும். திருக்குறள் அளவில் சிறியது. கருத்தை அளவிட முடியாது.

      ‘உள்ளொளிப் பயணம் என்ற நூலில் முதுமுனைவர், புத்தருக்கு சிலைகள் வைத்து வணங்குவதில் பலன் ஒன்றுமில்லை. ‘ஆசையே அழிவுக்குக் காரணம் என்று சொன்ன புத்தரின் போதனையை மனத்தில் ஏற்றினால் போதும்.

      மன இருள் அகற்றும் உள்ளொளி
      உள்ளத்தில் ஒளி உண்டாக்கும் உள்ளொளி
      சிந்தனை மின்னல் உருவாக்கும் உள்ளொளி
      செயலில் ஒளி ஏற்படுத்தும் உள்ளொளி
      கண்களில் ஒளி ஏற்படுத்தும் உள்ளொளி
திறமையை அடையாளம் காணுங்கள்
சிறந்த அடையாளம் கொண்டவர்கள்
சமூகத்திற்கு வழிகாட்டுவார்கள்.
குழந்தையிடம் குழந்தையாகவே
நடந்து கொள்ள வேண்டும்
தொழிலாளிகளிடம் தொழிலாளியாகவே
நடந்து கொள்ள வேண்டும்
“யாருடைய இதயத்திலாவது மகிழ்ச்சியை
விதையாகத் தூவினால் அது சாதனை
பிறருக்குப் பயன்பட வாழ்வதே சாதனை.
ஒவ்வொரு நொடியையும் பயனுள்ளதாக ஆக்க வேண்டும்.

உள்ளத்திலிருந்து வருவது தாய்மொழி.
      எந்த மொழியும் அறிந்து கொள்வது தவறில்லை. சொந்தமொழி தாய்மொழியை தமிழ் அறியாமல் இருப்பது தான் தவறு.

      உதட்டில் இருந்து வருவது அந்நிய மொழி. உள்ளத்தில் இருந்து வருவது தாய்மொழி.

ஹைக்கூ முதற்றே உலகு

      1999ம் ஆண்டு சுற்றுலா இயக்குநராக முதுமுனைவர் இருந்து வந்தார். ‘ஆத்தங்கரையோரம் நாவலை தமிழில் முக்கிய ஐந்து நூல்களில் ஒன்றாக மலேசியப் பத்திரிக்கை தமிழ்நேசனில் கைசாசபதி என்பவர் எழுதியிருந்தார். அந்தபடிக்கு முத்முனைவருக்கு அனுப்பியவர் நூலாசிரியர் கவிஞர் கவிஞர் இரா. இரவி.

கருத்துகள்