இருட்டை விரும்பாத இரவுகள்! நூல் ஆசிரியர் : மகுவி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !






இருட்டை விரும்பாத இரவுகள்!

நூல் ஆசிரியர் : மகுவி !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

வெளியீடு : பாவைமதி வெளியீடு,
எண் : 55, வ.உ.சி. நகர், மார்கெட் தெரு, தண்டையார்பேட்டை,
சென்னை – 600 081. பக்கங்கள் : 96, விலை : ரூ.80
******
நூலாசிரியர் கவிஞர் மகுவி அவர்கள் சென்னையில் ஒரே நாளில் தனது மூன்று நூல்களை வெளியிட்டவர். மூன்று நூல்களும் பாவைமதி பதிப்பகம் சிறப்பாக பதிப்பித்து உள்ளது. அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு யாவும் மிக நேர்த்தி. இனிய நண்பர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா வடிவமைத்து உள்ளார்.

இந்த நூலை ‘சமர்ப்பணம் – என்னுயிர் அம்மாவுக்கு’ என்று சமர்ப்பித்து உள்ளார். சிறப்பு.  அடுத்த பதிப்பில் அம்மாவின் பெயரையும் பதியுங்கள். கவிஞர்கள் தமயந்தி, தமிழமுதன், திரு. சத்தியசீலன், பதிப்பாளர் ம. வான்மதி ஆகியோர் அணிந்துரை நல்கி உள்ளனர்.

பக்கத்து வீட்டு மாமி 
எதற்கெடுத்தாலும்
      பகவான் கையில் என்பார்! 
தன் மகள்
      எதிர்வீட்டுப் பையனோடு 
ஓடிப்போனது
      மட்டும் 
அவன் செயல் என்கிறாள்!

எள்ளல் சுவையுடன் பகுத்தறிவு விதைத்து உள்ளார். எல்லாம் அவன் செயல் என்பவர்கள் சிந்திக்கும் விதமாக குறும்பா வடித்துள்ளார். நன்று. 

மதுவை முதலில் 
அவன் குடிக்கிறான்
      மது பிறகு 
அவனைக் குடிக்கிறது!

      அடிமையாக்க நினைத்து 
அடிமையாகி விட்டான்
      மன ஆழத்தில் 
மதுவை ஊற்றி நிரப்பி விட்டான்!

இன்றைய இளைஞர்களில் பலர் மதுவிற்கு அடைமையாகி விட்டனர். நண்பர்களின் பிறந்த நாளில் குடிக்க ஆரம்பித்து தினமும் குடிக்கும் நிலைக்கு அடிமையாகி வருகின்றனர். கல்லூரி மாணவர்கள் குடித்து விட்டு கைதாகி நீதிமன்றம் சென்றனர். நீதியரசர், காமராசர் இல்லத்தை சுத்தம் செய்திட வேண்டுமென்று தீர்ப்பு வழங்கிய செய்தி படித்தேன். மதுக்கடைகளை உடனடியாக மூடி இளைஞர்கள் சமுதாயத்தைக் காத்திட முன்வர வேண்டும்!

சர்க்கரைத் தூள் சுமக்கும் எறும்பின் முதுகில்
மிளகாய்த் தூள் தூவிய விரல்கள்
      அடுத்து நீள்கின்றன!

சமுதாயத்தில் பலர் பாராட்டி ஊக்கப்படுத்தாவிட்டாலும் கேலி செய்து காயப்படுத்தி விடுகின்றனர். அப்படிப்பட்ட நபர்களின் பேச்சைக் கேளாமல் செவிடாக இருப்பதே சிறப்பு. மனிதர்கள் பலவிதம், ஒவ்வொருவரும் ஒரு விதம்.

பச்சைத் தமிழனை 
பிச்சைத் தமிழனாய்
      ஆக்கி விட்டீர்கள் 
கொல்லைப்புறம்
      நுழைந்த இந்திக்கு 
நடுவீட்டில் பந்தி
பந்தி பரிமாறியவன் பட்டினி 
வாழ்க தமிழ் 
ஒழிக தமில் !

தமிழர்களுக்கு என்றுமே பிடிக்காத இந்தி மொழியை திணிப்பதற்கு முயற்சி நடந்து கொண்டே இருக்கின்றது. அதனைத் தடுக்க முடியாத தன்னலவாதிகளாக இருக்கும் அவலத்தை கவிதை வரிகளின் மூலம் நூலாசிரியர் கவிஞர் மகுவி உணர்த்தி உள்ளார். பாராட்டுக்கள்.

ஒரு சில பெண் கவிஞர்கள் போல கொச்சையான சொற்களை இனிவரும் காலங்களில் பயன்படுத்த வேண்டாம் என்பது வேண்டுகோள். திருவள்ளுவர் சொன்ன சொல்லை கடைபிடியுங்கள். கனி இருக்க காய் எதற்கு? நல்ல சொற்கள் நிறைய கெட்ட சொற்கள் எதற்கு?

பகலில் பழுத்த எலுமிச்சைச் சாற்றில்
      வெயில் சிந்தியது
      இரவில் பூத்த பூக்களைப் / பறிக்கையில்
      கைகளில் விண்மீன் பூத்தது!

இயற்கையைக் காட்சிப்படுத்தும் விதமாக சில கவிதைகள் உள்ளன.  பாராட்டுக்கள்.

ஒவ்வொரு முறை 
சாலையைக் கடக்கும் போதும்
      சிறு சிறு பிள்ளையாகவே 
எனை உணர்கிறேன்!

சாலையைக் கடக்கும் போது சிறு பிள்ளையின் பயத்துடனும் கவனமாக கடக்க வேண்டும். கவனம் சிதறினால் சாலையில் நாம் சிதறி விடுவோம். மக்கள் தொகை பெருக்கத்தால் போக்குவரத்தும் பெருகி விட்டது.

காடுகள் காடுகளாக இல்லை
      வயல்கள் வயல்களாக இல்லை
      மனிதன் மனிதனாக இல்லை
      உயிர்கள் உயிர்களாக இல்லை
      உலகம் உலகமாக இல்லை!

இந்த உலகில் மாற்றம் ஒன்று தான் மாறாதது என்ற தத்துவத்திற்கு ஏற்ப எல்லாமே மாறிக் கொண்டே இருக்கின்றன என்பது உண்மை. காடு, வயல் மாறலாம். ஆனால் மனிதன் மாறக் கூடாது. மனிதன் மனிதனாக இருப்பதே மனிதனுக்கு அழகு என்பதை உணர்த்தியது.

கடன் கொடுத்த 
பெட்டிக் கடைக்காரன்
      இறந்து விட்டான் 
கடனோடும் 
நன்றிக்
      கடனோடும் 
சுடுகாடு சென்றேன்.

கடன் கொடுத்த நன்றிக் கடனுக்காக மனிதாபிமானத்துடன் சுடுகாடு சென்ற நல்ல உள்ளம் வாழ்க! சுடுகாடு சென்றதோடு முடிந்து விடாமல் பெட்டிக் கடைக்காரன் மனைவி கடை திறந்தால் கடனையும் அடைத்து விட வேண்டும். நல்ல சிந்தனை. பாராட்டுக்கள்.

கடந்த காலத்தையும் 
எதிர் காலத்தையும்
      யோசித்துக் கொண்டிருந்தேன் 
நிகழ்காலத்தில் !

      யோசித்து யோசித்து காலம் கழிக்காதே  நிகழ்காலத்தை வீணாக்காதே நிகழ்காலத்தை 
பயனுள்ளதாக்கு பயன்படுத்து 
என்பதை வலியுறுத்தும் விதமாக வடித்த கவிதை நன்று.          
      மனிதனை நான் வாசிக்கிறேன்
      மனிதர்களை நான் நேசிக்கிறேன்
      ஒவ்வொரு மழைத்துளியும்
      மண்ணில் மழையாகிறது!
      ஒவ்வொரு மனிதனும் மண்ணில்
      புத்தகமாகிறான்!

ஒரு படைப்பாளியின் கடமை ஒவ்வொரு மனிதனையும் உற்றுநோக்க வேண்டும் படைப்பிற்கான கருக்கள் கிடைக்கும். புத்தகங்களை வாசிப்பதோடு நின்று விடாமல் மனிதர்களையும் வாசிக்க வேண்டும்.

51ஆம் பக்கம் டம்ளர் என்பது டம்ளார் என்று உள்ளது. அடுத்த பதிப்பில் திருத்தி விடுங்கள்.  

      நூலாசிரியர் கவிஞர்  மகுவி சமுதாயத்தை உற்றுநோக்கி கவிதைகள் வடித்துள்ளார். மனதில் பட்டதை எல்லாம் கவிதையாக்கி நூலாக்கி விடுகிறார். பாராட்டுக்கள்.

.

கருத்துகள்