பா உழுதவன் ! நூல் ஆசிரியர் : கவிஞர் பொள்ளாச்சி குமார ராஜன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !





பா உழுதவன் !

நூல் ஆசிரியர் : கவிஞர் பொள்ளாச்சி குமார ராஜன் !


நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

வெளியீடு : மின்னல் கலைக்கூடம், 117, எல்டாம்ஸ் சாலை,
சென்னை-600 018. பக்கம் : 64, விலை : ரூ.40



*******

நூலாசிரியர் மா. ஆனந்குமார் என்ற பொள்ளாச்சி குமாரராஜன் அவர்களின் நான்காவது ஹைக்கூ நூல் ‘பா உழுதவன்’. நூலின் பெயரே சிறப்பு. நிலம் உழுபவன் உழவன். பா உழுபவன் கவிஞன். பெயருக்கேற்றபடி ஹைக்கூ பா உழுது உள்ளார். பாராட்டுக்கள். மின்னல் கலைக்கூடம் கவிஞர் வசீகரன் மிக நேர்த்தியாக பதிப்பித்து உள்ளார். பதிப்புரையும் நனி நன்று.

ஹைக்கூ என்றவுடன் நினைவிற்கு வரும் ஆளுமை கவிஞர் மு. முருகேஷ் அவர்களின் அணிந்துரை நூலின் அழகிற்கு அழகு சேர்ப்பதாக உள்ளது.

தாயின் தொப்புள் கொடி
வலி எடுத்தது வாழும் போதே
முதியோர் இல்லத்தில்!

பெற்ற தாயின் தியாகத்தை மறந்து சிலர் முதியோர் இல்லத்தில் விட்டுவிடும் அவலம் நம் நாட்டில் இன்று சர்வ சாதாரணமாக அரங்கேறி வருகின்றது. முதியோர் இல்லங்களும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. தாயின் மனவலியை ஹைக்கூவில் படம்பிடித்துக் காட்டி உள்ளார்.

சிதைந்த குருவிக்கூடு
ஓ இது அவலம்
ஈழம்!

குருவிக்கூடு போல அழகாக இருந்த ஈழத்தை முப்படைகள் கொண்டு சிறப்பாக வாழ்ந்திட்ட ஈழத்தை சின்னப்புத்திக்காரர்கள் சிதைத்திட்ட கொடுமையை நினைவூட்டிய ஹைக்கூ நன்று.

எழுத எழுத எழுத
இனிக்கிறது, தேனாய் சுவைக்கிறது
உன் ஞாபக பெயர் மட்டும்!

உண்மை தான்! காதலியின் பெயரை எழுதிப் பார்ப்பதும் சுகம் தான். எங்காவது யாராவது காதலியின் பெயரை உச்சரித்தால் உடன் அத்திசையை திரும்பிப் பார்ப்பதும் இயல்பு தான்.

மகளை திட்டி விட
மகள் மட்டுமல்ல
அழுதது வானம்!

மகள் அழுவதால் வானமும் அழுகின்றது. திட்டியதற்காக அப்பா கவலைப்படுகிறார். அப்பா மகள் பாசத்தை மழையை முன்நிறுத்திக் காட்டி உள்ளார்.

அடித்த தப்பு
தாளம் மாறுகிறது
பா உழுதவனை பார்த்து!

நூலின் பெயரிலான ஹைக்கூ இது. பா உழுத கவிஞனைப் பார்த்ததும் தப்பு கூட தாளம் மாறி சரியாக அடிக்கின்றதாம். சரியான தாளம் தப்பு தான், இதற்கு தப்பாக தப்பு என்று பெயர் வைத்ததிலும் ஒரு அரசியல் உள்ளது.

விட்டில் பூச்சிகள்
நேற்று வரை
பள்ளி வரா மழலைகள்!

பள்ளிகள் குழந்தைகளை குதூகலப்படுத்தாமல் கவலைப்படுத்து-கின்றன. பால் மணம் மாறாத குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்து துன்பப்படுத்துகின்றனர். ஐந்து வயது ஆகும்வரை பள்ளியில் சேர்க்காமல் வீட்டில் பயிற்றுவிப்பதே சிறப்பாகும். பள்ளியில் சேர்க்கும் குழந்தைகளை விட்டில் பூச்சிகள் என்றது.

உண்மையிலும் உண்மை. பிஞ்சு மனங்களில் நஞ்சு பாய்ச்சும் விதமாகவே இன்றைய கல்விமுறை குறிப்பாக ஆங்கில வழி கல்விமுறை உள்ளது.

விடை
கொடு
ஜாதியை!

முன்பெல்லாம் பெயருக்கு அருகே சாதியை எழுதியவர்கள் இப்போது எழுதுவதில்லை என்றாலும் பெயரிலிருந்து அகற்றியவர்கள் மனதிலிருந்து சாதியை அகற்றுவதில்லை. அதனால் தான் சாதிச்-சண்டைகள் வருகின்றன. வன்முறைகள் வெடிக்கின்றன. இரு தனி மனிதர்கள் சண்டையை இரு சாதிகளின் சண்டையாக கற்பிதம் செய்து பெரிதாக்கி விடுகின்றனர். சாதிக்கு விடை கொடுங்கள் என்ற வேண்டுகோள் நன்று.

என்னை காவு கேட்கிறது
விடாத புகையிலை பழக்கம்
நொடி வாழ்வு ஈசலாய்!

திரைப்படத்திலும் கொலைக் காட்சியிலும் புகைபிடித்தால் புற்றுநோய் வரும் உடல்நலத்திற்கு கேடு தரும் என்று விளம்பரங்கள் செய்த போதும் சிலர் திருந்துவதாக இல்லை. திரைப்படத்தில் பிடித்த நடிகர்கள் புகை பிடிப்பதைப் பார்த்து கெட்டுப் போகிறார்கள் என்பது உண்மை தான். நம் உடல்நலம் நம் கையில் என்பதை உணர்ந்து புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும். உயிர் மேல் ஆசை இருந்தால் ஒருபோதும் புகை பிடிக்காதீர்கள். ‘புகை என்பது உயிருக்கும் பகை’ என்பதை உணருங்கள்.

வெட்டை வெளி
களமற்ற மண்ணில்
விளைந்தது காதல் மட்டும்!

காதலர்கள் தங்களை மறந்து வெட்டை வெளி பொட்டல்களிலும் சந்தித்து உரையாடி மகிழ்வதை காட்சிப்படுத்தி வெற்றி பெறுகின்றார் நூல் ஆசிரியர் கவிஞர் குமாரராஜன்.

புத்தனின் புன்னகையில்
இல்லாத ஒரு புன்னகை
காதல் கண்ணசைப்பில் அவள்!

காதலியை உயர்த்த வேண்டும் என்பதற்காக புத்தரையே சற்று தாழ்த்தி விடுகின்றார். அந்த அளவிற்கு காதலி மீது அன்பு, பாசம், நேசம் – புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடிய வைர வரிகளை நினைவூட்டியது. ‘மாமலையும் சிறு கடுகாகும்’ என்பதை மனதில் கொண்டு வந்தது.

உயிர் உள்ளவரை
வாழ்க்கை சக்கரத்தில்
ஓடும் மண்பானையாய்!

சித்தர்கள் போல வாழ்வியல் தத்துவத்தை குயவன் மண்பானை செய்யும் போது சக்கரத்தில் வைத்து சுற்றுவதை நினைவூட்டியது. அதுபோல வாழ்க்கை சக்கரம் சுற்றுகின்றது என்கிறார்.

இப்படி நூல் முழுவதும் சிந்திக்க வைக்கும் ஹைக்கூ கவிதைகள் உள்ளன. நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி குமாரராஜன் அவர்கள் மிக நன்றாகவே பா உழுது உள்ளார். வாசக மனங்களில் நல்ல விளைச்சல் வரும்.p
-- 

.

கருத்துகள்