ஹைக்கூ உலா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : முனைவர் ஜெ. ரஞ்சனி, தமிழ்த்துறைத் தலைவர், எஸ்.ஆர்.எம். கலை அறிவியல் கல்லூரி, இருங்களூர், திருச்சி.




ஹைக்கூ உலா !
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !
நூல் விமர்சனம் : முனைவர் ஜெ. ரஞ்சனி,
தமிழ்த்துறைத் தலைவர், எஸ்.ஆர்.எம். கலை அறிவியல் கல்லூரி, இருங்களூர், திருச்சி.
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு,
தியாகராய நகர், சென்னை-600 017. தொலைபேசி : 044 24342810, 24310769 மின்னஞ்சல் : vanathipathippakam@gmail.com விலை : ரூ. 80.
******
எல்லோர் மனதிலும் ஒரு கதை, கவிதை, உரைநடை தோன்றும். தோன்றியவற்றை மிகச்சிறந்த எழுத்து வடிவத்தில் கொண்டுவரக் கூடியவனே மிகச்சிறந்த படைப்பாளன்.
சிறந்த படிப்பாளியே படைப்பாளனாக முடியும் என்பதற்கு நம் கவிஞர் இரா.இரவி ஒரு முன்னுதாரணம்.
மரபு கவிதை, புதுக்கவிதை எழுதுபவர்கள் கூட ஹைக்கூ எழுத நினைத்து தோற்று போனது உண்டு. ஆனால் நம் கவிஞர் இரா. இரவி மூன்று கவிபுலனிலும் சிறப்பு பெற்றவர்.
இன்று கணினி உலகை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருந்தாலும் சில மூட நம்பிக்கைகளில் ஆட்பட்டு தன் உடைமை, செல்வத்தை இழப்பதை அழகாக இந்த நூலின் முதல் கவிதையிலேயே சுட்டிக்காட்டுகின்றார்.
‘கைரேகையில் இல்லை
கைகளில் உள்ளது
எதிர்காலம்!’
என்று உழைப்பவன் தான் உயரமுடியும் என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தி உள்ளார்.
இயற்கை ஒரு வரப்பிரசாதம். இயற்கையை ரசிப்பவன் தன் இருப்பை தள்ளிப்போட முடியும். கவிஞர் இரா. இரவியின் இயற்கை பற்றிய கவிதையை படிப்பவனுக்கு சாவு விரைவில் நெருங்காது.
பூனையில் சைவம் இல்லை
பசுவில் அசைவம் இல்லை
இயற்கையின் இயல்பு!
என்பதன் மூலம் மனிதன் தான் சைவம், அசைவம் பிரித்து வைத்துள்ளான். ஆனால் இயற்கையாக அது இல்லை என்பதை அழகாக வெளிக்காட்டியுள்ளார்.
இன்றைய தேர்தல் வெற்றி பணத்தைக் கொண்டே மதிப்பிடப்படுகின்றது. ஜனநாயகத்தை பணநாயகம் தீர்மானிக்கும் அவலத்தை.
பணம் பத்தும் செய்யும்
உணர்த்தியது
தேர்தல்!
என்று அழகாக வெளிப்படுத்துகின்றார்.
வேட்பாளர்கள் தேர்தல் அறிக்கை வாசித்து வாக்கு சேகரிப்பதும், அதில் வாக்காளர்கள் ஏமாந்து வாக்களிப்பதும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன் என்பதை,
கேலிக் கூத்தானது
உலக அரங்கில்
தேர்தல்!
என்று வசைபாடுகின்றார்.
ஹைக்கூ உலகின் முடிசூடா மன்னன் கவிஞர் இரா. இரவி என்றால் அது மிகையல்ல.

கருத்துகள்