நேற்று-இன்று-நாளை ! தே. பிர்த்தோ கலை இலக்கியப் பவளங்கள் 75 . ஆசிரியர்கள் : அருட்பணி இ. இருதய வளனரசு சே.ச. முனைவர் ஸ்டீபன்ராஜ் மிக்கேல்ராஜ் ! மதிப்புரை : கவிஞர் இரா. இரவி !




நேற்று-இன்று-நாளை !

தே பிர்த்தோ கலை இலக்கியப் பவளங்கள் 75 .

ஆசிரியர்கள் : அருட்பணி இ. இருதய வளனரசு சே.ச. 
முனைவர் ஸ்டீபன் மிக்கேல்ராஜ் !

மதிப்புரை : கவிஞர் இரா. இரவி !

பவளவிழா வெளியீடு,
முன்னாள் மாணவர் மன்றம், வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம், தே பிரித்தோ மேல் நிலைப்பள்ளி, தேவகோட்டை. பேச : 98425 89571
பக்கம் : 96, விலை : ரூ.75

******

தேவகோட்டையின் பெருமைகளில் முதன்மையானது தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளி. பவளவிழா முன்னிட்டு பவளம் போன்ற நூலை வெளியிட்டு உள்ளனர்.

இப்படி ஒரு நூலை இதுவரை எந்தஒரு பள்ளியும் வெளியிட்டதில்லை எனலாம். புதுமையான நூல். பல்வேறு ஆளுமைகளை உலகிற்கு தந்த வரலாற்று சிறப்புமிக்க பள்ளி.

பள்ளியில் பயின்ற, நேற்று சாதித்த 25, இன்று சாதிக்கின்ற 25, நாளை சாதிக்க உள்ள 25 ஆக மொத்தம் 75 ஆளுமைகள் பற்றிய வரலாற்றுப் பதிவு..

இந்த நூல் படித்த போது இந்தப்பள்ளியில் நாம் படித்து இருந்தால் நமது பெயரும் புகைப்படமும் சிறுகுறிப்பும் இடம்பெற்று இருந்திருக்குமே என்ற ஏக்கம் வந்தது.

நூலாசிரியர்கள் இருவரின் கடின உழைப்பை உணர முடிந்தது. பள்ளியில் பயின்ற ஆளுமைகளின் சிறு வரலாறு திரட்ட எவ்வளவு தேடல் முயற்சி எண்ணிப்பார்க்கவே வியப்பாக இருந்தது. கடின உழைப்பின் விளைவு இந்நூல். இதுபோன்று மற்ற பள்ளிகளும் வெளியிட முன்வர வேண்டும்.

இதற்கு முன்பு பள்ளியில் பயின்ற மாணவர்கள் எழுதிய ஹைக்கூ தொகுப்பு நூல் வெளியிட்டனர். அதன் மதிப்புரை இணையங்களில் பதிவு செய்தேன். இந்த பவள மலரையும் மதிப்புரைக்காக அனுப்பி வைத்தனர்.

பள்ளியின் வரலாறு தலைமையாசிரியரின் பெயர் ஆண்டு யாவும் புள்ளி விபரங்களுடன் நன்கு தொகுத்து உள்ளனர். பேரா.சே. செந்தமிழ்பாவை அணிந்துரை வழங்கி உள்ளார். அருட்பணி செ. ஜோசப் கென்னடி சே.ச. வாழ்த்துரை வழங்கி உள்ளார். தலைமையாசிரியர் அருட்பணி பெ. ஆரோக்கியசாமி சே.ச. அவர்கள் முன்னுரை வழங்கி உள்ளார்.

பள்ளியில் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் 75 பேரின் கலை இலக்கிய சாதனையை பட்டியலிட்டு உள்ளனர்.

நேற்று கலை இலக்கிய ஆளுமைகள் 25 பேரும் சிறந்தவர்கள் என்றாலும், வெளிஉலகில் நன்கு அறியப்பட்ட சில ஆளுமைகளின் பெயர் மட்டும் பதச்சோறாக இங்கு குறிப்பிடுகிறேன். பாருங்கள்.

கலைமாமணி சுப. முத்துராமன், சிறுகதை மன்னர் எஸ்.எஸ். தென்னரசு, நகைச்சுவை நாவரசர் பேராசிரியர் கண் சிற்பேசன், மேனாள் நடுவண் அமைச்சர் ஏ.மா. சுதர்சன் நாச்சியப்பன், நடிகர், அரசியல் தலைவர் விஜய்காந்த, கோலங்கள் தொலைக்காட்சித் தொடர் திருச்செல்வம், பிரபலங்களான இவர்கள் அனைவருமே வரலாற்று சிறப்புமிக்க தே.பிரித்தோ மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள். இவர்களைப் பற்றிய குறிப்புகள், இவர்களின் சாதனைகள், பிறந்த நாள் என அனைத்து விபரங்களும் நூலில் உள்ளன.

பள்ளியால் இவர்களுக்கு பெருமை வந்ததா? அல்லது இவர்களால் பள்ளிக்கு பெருமை வந்ததா? என வியக்கும் அளவிற்கு மிகப்பெரிய ஆளுமைகள் பலரும் இங்கு பயின்றுள்ளனர். ஆசிரியப்பணி சீரும் சிறப்புமாக செய்து வருவதால் தான் இப்பெருமை தொய்வின்றி தொடர்கின்றது.

இன்று வளர்ந்து வரும் கலை இலக்கியச் சாதனையாளர்கள் பட்டியல் 25 பேரில் பதச்சோறாக ஒருவர் தேவகோட்டை இராமநாதன். இவர் தொலைக்காட்சிகள் மட்டுமன்றி பல வெளிநாடுகளுக்கும் சென்று நகைச்சுவை உரை நிகழ்த்தி வருகிறார். கணினி வரைகலைஞர், ஓவியர், கட்டுரையாளர், கவிஞர், முனைவர், இயக்குநர், இசையமைப்பாள்ர், குறும்பட விருதாளர், பத்திரிகையாளர் இப்படி பல்வேறு துறைகளில் சாதனை நிகழ்த்தி வளர்ந்து வரும் ஆளுமைகள் 25 பேர் பற்றிய விபரங்கள் தகவல் களஞ்சியமாக உள்ளது. பள்ளியில் பயின்ற மாணவர் 75 பேருக்கு இந்த நூலின் மூலம் மகுடம் சூட்டி உள்ளனர்.

நாளை மாவட்ட அளவில் வாகை சூடி வரும் இந்நாள் மாணவர்கள் 25 பேர் பட்டியல் படித்தால் ‘விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’ என்ற பொன்மொழிக்கு ஏற்ப மாணவர்கள் கல்வியில் மட்டுமன்றி பல்வேறு பேச்சு, ஓவியம், கவிதை, தனி நடிப்பு, குறு நாடகம், போட்டியில் பரிசு, பன்னாட்டு தேசிய கருத்தரங்கில் கட்டுரை சமர்ப்பித்தல், இசைக்கச்சேரி நடத்தும் ஆற்றல், நாட்டுப்புறப் பாடகர், விவாதமேடையில் விவாதித்தல் – இப்படி சகலகலா வல்லவர்களாக இன்றைய மாணவர்கள் திகழ்ந்து வருகின்றனர். இவர்கள் நேற்று இன்று சாதனையாளர்கள் வழியில் இவர்களும் சிகரம் அடைவார்கள் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.


வீரமாமுனிவர் பெயரில் கலை இலக்கிய மன்றம் தொடங்கி கலை இலக்கிய ஆர்வத்தை மாணவர்களிடையே விதைத்து பயிற்றுவித்து பட்டை தீட்டி வைரங்களாக மிளிர வைத்து வருகின்றனர். இந்த நூல் படிக்கும் வாசகர்கள் தே. பிரித்தோ மேனிலைப்பள்ளி மாணவர்களாக இருந்தால் மட்டற்ற மகிழ்ச்சி அடைவார்கள். மற்றவர்கள் இந்தப் பள்ளியில் நாம் பயிலாமல் போனதே என வருத்தம் அடைவார்கள். பெருமைமிகு பள்ளியின் பெருமைமிகு மாணவர்கள் 75 பேரையும் புகழ்உச்சிக்கு கொண்டு சென்றுள்ளனர். பாராட்டுக்கள்.

கருத்துகள்