இரா இரவியின் கவிச்சுவை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் விமர்சனம் : கவிஞர் கே ஜி ராஜேந்திரபாபு


இரா இரவியின்   கவிச்சுவை!

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!

நூல் விமர்சனம் : கவிஞர் கே ஜி ராஜேந்திரபாபு  
பெங்களூரு அலைபேசி : 94440 40490  
பக்கம் 186.விலை ரூபாய் 120.  வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, 
 தியாகராய நகர்,  
சென்னை-600 017. தொலைபேசி : 044 24342810, 24310769
மின்னஞ்சல் : 
vanathipathippakam@gmail.com
******                              
      கவிச்சுவை! எழுதிச் செல்லும் இரவியின் கரம் எழுதி எழுதி மேற்சென்று கொண்டிருக்கிறது. 
      கவிச்சுவை இரவியின் பதினெட்டாவது நூல். மரபுக் கவிதைப் பாணியில் எழுதியுள்ள நூலிது. வரிகளுக்கேற்ப கருத்துக்களை வளைக்காமல் - வதைக்காமல் சொல்லவந்த எண்ணத்தைத் தெளிவாகச் சொல்லியுள்ளார். 
     இரவி நம் எதிரிலே உட்கார்ந்து சொல்வதுபோல் எளிய அழகிய பாணியில் எழுதியுள்ள கவிதைகள் அடங்கிய நூலிது.. மொத்தம் 78 கவிதைகள்.  வானதி பதிப்பகம் வெளியீடு
      “கடுங்குளிரில் தள்ளிவிடப்பட்ட தென்ஆப்பிரிக்காவில்
      கட்டி உள்ளனர் அழகிய நினைவுச்சின்னம்”
     “சங்கம் வைத்து தமிழ்வளர்த்த மதுரையில்
     சபதம் எடுத்தார் அரையாடை அணிவதற்கு”
வரலாற்றுக் குறிப்பைச் சொல்லி மகாத்மா காந்தியைப் போற்றுகின்றார். மதுரைக்காரர் அல்லவா மதுரையை மறக்காமல் சொல்லியுள்ளார்.
     திருக்குறள் படிப்பதோடு நின்றுவிடாமல்
     திருக்குறள் வழி வாழ்ந்தால் ஆகலாம் கலாம் !
திருக்குறளைப் படிப்பதால் மட்டும் ஒருவர் கலாம் ஆகமுடியாது. கற்றபின் நிற்க அதற்கு தக” என்று வாழ்ந்தால் கலாம் ஆகலாம் என்கிறார் கவிஞர்.
      “கல்விச் சாலைகள் மட்டுமல்ல ஆலைகளும் திறந்தவன்
      கல்வியைத் தமிழகத்தில் வெள்ளமாகப் பாய்ச்சியவர்”
      ஆயிரக் கணக்கான பள்ளிக்கூடங்களைத் திறந்து இலவச மதிய உணவு அளித்து இலட்சக்கணக்கான மாணவர்களைப் படிக்கவைத்த காமராசரைக் கல்வியைத் தமிழகத்தில் வெள்ளமாகப் பாய்ச்சியவர் என்று சரியான சொல்லாட்சியில் குறிப்பிட்டுள்ளார் இரவி.
      மனிதநேயத்தின் சின்னமாக வாழ்ந்து சிறந்தவர்
      மக்கள் மனங்களில் என்றும் வாழ்பவர்
சத்துணவு வழங்கிய மாமனிதர் எம்ஜியாரை மனித நேயத்தின் சின்னமென்று”  என்று புகழ்ந்துள்ளார்.  இரவி மட்டுமா இந்நாடே மனிதநேயம் மிக்கவர் என்ற பொன்மனச் செம்மலைப் போற்றுகிறது.
“தமிழ்வழிக் கல்விக்காக உண்ணாவிரதம் இருந்தவர்
       தமிழை உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர்”
வெறும் பேச்சல்ல செயல்வீரர் என்று தமிழண்ணல் சிறப்பை உரைக்கின்றார்.
      மருத்துவர்கள் குறித்த வாழ்நாளோ இரண்டு ஆண்டுகள்
      மாமனிதர் வாழ்வு நீட்டித்ததோ ஐம்பத்தி அய்ந்து ஆண்டுகள்”
      உடலைவிட உயர்ந்தது மனம் என மெய்ப்பித்தார்                உடல்நலமின்றியே உலக சாதனை நிகழ்த்தியவர்”
மனத்திடத்தால்தான் ஸ்டீபன் வாழ்நாள் நீடித்தது. உடல்நிலை குறித்துக் கவலைப்படாமல் உலகச் சாதனை நிகழ்த்தினார் என்று இரு சிறப்புகளைப் பாடியுள்ளார் இரவி
      ஊடகங்களின் தமிழ்க்கொலைக்கு கண்டனத்தை
      உடன் அனைவரும் பதிவு செய்து திருத்திடுவோம்”
      தமிழின் சிறப்பை எழுதும்போதெல்லாம் ஆங்கிலம் கலந்து பேசுவது நன்றன்று என்றும் உச்சரிப்பு குறிப்பாக ஊடகத்தில் பாங்காக இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டுபவர் இரவி
      “ஆணை வரவென்றும் பெண்ணைச் செலவென்றும்
      அறிவிலித்தனமாகப் பேசுவதை முதலில் நிறுத்துங்கள்”
      பெண்சமூகம் முன்னேறிக்கொண்டே வரினும் இன்னும் பழைய சிந்தனையோடே பெண்களைப் பெரியவர்கள் பார்க்கிறார்கள்.  அந்த பார்வையை மாற்றச் சொல்கிறார் கவிஞர்.
      “பெண் என்னும் பிரபஞ்சம்” என்ற தலைப்பே பெண்ணின் சக்தியைச் சொல்கிறது. 
“இடஒதுக்கீடு தர மறுத்தால் முடிவெடுங்கள்
       இனி மகளிர் வாக்கு யாருக்குமில்லை என்று”
தனியொருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம் என்று மகாகவி பாரதி சொன்ன பாணியில் சொல்லியிருக்கிறார் கவிஞர் இரவி
      “வீரவாள் சுழற்றி வளரும்போதே பயின்றார்
       விவேகமாகப் பலமொழிகளும் கற்றுத் தேர்ந்தார்”
என்று வேலுநாச்சியார் களவீர மங்கை மட்டுமன்று - கல்வியிலும் தேர்ந்தவள் என்கிறார்.
       “மழலைகளுடன் விளையாடும் நேரங்களில்
        மனதில் கவலைகள் மறந்துவிடும்”
இது எல்லோருடைய அனுபவம்தான்.  மழலைகளோடு மகிழ்ந்து விளையாடினால் நீரிழிவு நோயே கூட குறையலாம்.
        “சினம் என்பதை அறியாதிருந்திட வேண்டும்
         சிறுவர்களையும் மதித்து நடந்திட வேண்டும்”
      சிறுவர்களையும் மதிப்புடன் நடத்தியவர் தந்தை பெரியார். அவர் போலவே யாவரையும் மதித்து நடத்தல் பண்பாடு.
      “இரக்கம் காட்டி வாழ்வதும் சாதனைதான்
       இன்சொல் மட்டுமே பேசுவதும் சாதனைதான்”  
என்கிறார் இரவி.
      “சாதனை தான்” என்ற கவிதையைப் படித்துப் பார்த்தால் சின்ன-சின்னதாய் செய்வது கூட சாதனை என்ற மகிழ்ச்சியைத் தரும்.  வாழ்க்கைச் சூழ்நிலைக்கேற்ப-- சுழன்றுவரும் உணர்ச்சியில் சொற்கள் பொன்சொல்லாக வரலாம் புழுதிச்சொல்லாகவும் வரலாம்.  ஆகவே என்றும் இனிமையாய் பேசிவந்தால் அதுவே சாதனைதானே!
       சப்தங்களால்தான் பலயுத்தங்கள் வந்தன
       நிசப்த யுத்தம் நாம் நடத்துவோம் வா!
      இந்த வரிகளில் காதலின் ஒலி மௌனமாய் நம் செவிகளில் கேட்கிறது.
      தினமணி கவிதைமணி இணையத்தில் --- கவிமாமணி வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் இயங்கும் மாமதுரைக் கவிஞர் பேரவையில் கவிஞர் இரா .இரவி அரங்கேற்றிய கவிதைகளின் தொகுப்பான ”கவிச்சுவை”யை படித்து இனிமையை அனுபவியுங்கள்.

கருத்துகள்