முதல் தனிமை ! கவிஞர் இரா. இரவி


முதல் தனிமை ! 
கவிஞர் இரா. இரவி


கணவனோடு இரண்டறக் கலந்து வாழ்ந்தவள் 
கணவனை விட்டு பிரிந்து இயற்கையில் கலந்தாள்!



சோடிப் புறாவாக வாழ்ந்த அவர்கள் இன்று
தனித்த புறாவாக தவித்து வாடி வாழ்கிறான் !



குறிப்பு அறிந்து உதவி மகிழ்ந்த இனியவள்
கேட்காமலே அவன் தேவையைத் தந்தவள்!



அவன்  நிழல் கூட சில நேரம் பிரிவதுண்டு
அவள் அவனைவிட்டு எப்போதும் பிரிந்ததில்லை!



மனைவி இறந்தபின் கணவனின் வாழ்க்கை
மயான வாழ்க்கை தான் நொடியும் வதைதான்!



மனைவி இறந்ததும் கணவன் இறந்திட்டால்
மனதில் கவலைகள் வரவே வராது!



மனைவியை இழந்துவிட்டு நடைப்பிணமாக வாழும்
மோசமான வாழ்க்கை உணர்ந்தவர் அறிவர்!



மனைவிக்கு ஈடான உறவு உலகில் வேறில்லை!
மனையின் அழகு மனைவியால் வருவது!



சந்தனம் போல தன்னைத் தேய்த்து நாளும்
சிறந்த வாசனை தந்து மகிழ்வித்தவள்!



மெழுகு போல தன்னை நாளும் உருக்கி
முழு நிலவென குடும்ப ஒளி தந்தவள்!



ஏணியாக நின்று உயர்த்தி விட்டவள்
தோணியாக இருந்து கரை சேர்த்தவள்!



உழைத்து உழைத்து ஓடாகத் தேய்ந்தவள்
ஓய்வு என்றால் என்னவென்றே அறியாதவள்!



யாரிடமும் அவனை விட்டுக் கொடுக்காதவள்
யாதுமாக அவனுள் நிறைந்து இருந்தவள்!



காலத்தின் கொடுமை அவளை இழந்து
கண்ணில் கண்ணீருடன்  முதல் தனிமை !

கருத்துகள்