மகாகவி பாரதியார்! கவிஞர் இரா. இரவி

மகாகவி பாரதியார்!
கவிஞர் இரா. இரவி
வாழும் போது உன்னை கண்டுகொள்ளவில்லை
வையகம் இன்று போற்றுது உன்னை!

கவிதை கதை கட்டுரை அனைத்தும் எழுதி
கன்னித்தமிழுக்கு வளம் சேர்த்தவன் நீ!

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் உள்ள
சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவன் நீ!

உன்னால் பெருமைகள் பெற்றது சேதுபதி பள்ளி
உள்ளே சென்றால் வரவேற்பது உன் சிலையே!

உலகப் பொதுமறை வழங்கிய திருவள்ளுவருக்குப் பிறகு
உலகப்புகழ் அடைந்திட்ட ஒப்பற்ற கவிஞன் நீ!

எழுத்து பேச்சு செயல் வேறுபாடு இன்றி
எப்போதும் நேர்மையாக வாழ்ந்தவன் நீ!

மன்னரைச் சந்தித்து திரும்பிய போதும்
மடிநிறைய நூல்களையே வாங்கி வந்தவன் நீ!

உழைக்கும் கழுதையைத் தோளில் சுமந்து வந்து
உழைப்பின் மேன்மையை உணர்த்தியவன் நீ!

சாதிகள் இல்லையென்று உரக்கப் பாடியதோடு
சகோதரனாக்கி பூணூல் அணிவித்து மகிழ்ந்தவன் நீ!

விடுதலை வேட்கையை பாடலால் விதைத்து
வீர முழக்கமிட்டு துணிவைக் கற்பித்தவன் நீ!

பெண்விடுதலைக்கு வித்திட்டு கவிதைகள் வடித்து
புரட்சிப்பெண்கள் உருவாகிடக் காரணமானவன் நீ!

மண் விடுதலை பெண் விடுதலை இரண்டையும்
மக்களுக்குப் புரியும் வண்ணம் பாடியவன் நீ!

காந்தியடிகளைக் கூட்டத்திற்கு அழைத்தாய் மறுத்ததும்
கடந்து சென்றாய் உன்னைக் காப்பாற்றிட வேண்டினார்!

காந்தியடிகள் சொன்னபடி உன்னைக் காப்பாற்றி இருந்தால்
காவியங்கள் பல வடித்து இன்னும் தந்திருப்பாய் நீ!

உடலால் வாழ்ந்த காலம் முப்பத்தி ஒன்பது
பாடலால் வாழும் காலம் ஒரு யுகம் என்பது உண்மை!

கருத்துகள்