தமிழகத்தில் தமிழ் முழக்கம் தமிழாய் இல்லை! கவிஞர் இரா. இரவி !



தமிழகத்தில் தமிழ் முழக்கம் தமிழாய் இல்லை!

கவிஞர் இரா. இரவி !

தமிழைத் தமிழாகப் பேசுக என்று உணர்த்த வேண்டியுள்ளது
தமிங்கிலம் தமிழகம் முழுவதும் தலைவிரித்து ஆடுகின்றது!

கலப்படம் குற்றமென்று சட்டம் உள்ளது
கலப்படம் மொழியில் செய்வதும் குற்றமாக்குவோம்!

நல்ல தமிழில் பேசுக நாளும் சொல்கிறோம்
நம் தமிழர்கள் காதில் வாங்குவதே இல்லை!

காய் விற்கும் கிழவி வாயிலும் தமிங்கிலம்
கற்ற பேராசிரியர் வாயிலும் தமிங்கிலம்!

இந்நிலை இப்படியே தொடர விட்டால்
என்னாகும் தமிழ்மொழி சற்றே சிந்தித்து பாருங்கள்!

பிறமொழிக் கலப்பை தவிர்த்திட வேண்டுகிறோம்!
பச்சைத் தமிழ் மொழியைக் காத்திட வேண்டுகிறோம்!

மம்மி டாடி வேண்டாமென்றால் கேட்பதே இல்லை
மம்மி என்பது செத்தபிணம் என்ற பொருள் புரியவில்லை!

வெள்ளைக்காரன் ஆங்கிலத்தில் தமிழ் கலப்பானா?
வஞ்சியர் ஆங்கிலத்தில் தமிழ் கலந்து பேசுகின்றனர்!

தொலைக்காட்சி தொல்லைக்காட்சியாகி விட்டது நாளும்
தமிழ்க்கொலை தங்குதடையின்றி நடத்துகின்றனர்!

ஊடகங்களுக்கு கண்டனத்தை உடன் பதிந்திடுவோம்
உணர்வோடு தமிழ்மொழி காக்க திரண்டிடுவோம்!

உலகின் முதன்மொழிக்குச் சொந்தக்காரர்கள் நாம்
உருக்குலைய விடலாமா ஒப்பற்ற தமிழ்மொழியை!

முடிந்தளவிற்கு நல்ல தமிழில் பேசிடுவோம்
முத்தமிழின் பெருமைகளைக் கட்டிக் காத்திடுவோம்!

இலங்கைத் தமிழர்கள் இனிமையாகப் பேசுகின்றனர்
எல்லோரும் இனி நல்லதமிழில் பேசிடுவோம்!

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்