படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! ​உடல்நிலை, மனநிலை​, சூழ்நிலை ! பழனி குமார் !

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !


​உடல்நிலை, மனநிலை​, சூழ்நிலை !  பழனி குமார் !
----------------------------------------------------------

மண்ணில் பிறந்திட்ட ஒவ்வொரு மனிதருக்கும் தனித்தனி குணங்கள் உண்டு . ஒவ்வொருவருக்கும் நிச்சயம் அவற்றில் வேறுபாடுகள் இருப்பதும் இயற்கை . அதற்கேற்ப தான் அவரவரின் சிந்தனைகள் , செயல்பாடுகள், நடவடிக்கைகள் , கருத்துப் பரிமாற்றங்கள் , ஏக்கங்கள் , தாக்கங்கள், எண்ணங்கள் ,எழுத்துக்கள் அனைத்தும் வெளிப்படும் . அதனை வைத்துதான் அவரை மற்றவர்கள் மதிப்பீடு செய்வதும் இயல்பு மற்றும் அதுவே உலக வழக்கு , யதார்த்த உண்மை , இன்றுவரை . இவையனைத்தையும் நான் கூறுவது பொதுவானது . அவ்வாறு இல்லாமல் அனைத்து குணங்களும் அனைவருக்கும் ஒரேமாதிரியாக இருந்தால்அதன் விளைவாக, கருத்து வேறுபாடு ,கொள்கை மாறுபாடு, அதனால் நிகழும் சச்சரவுகள், மனமாச்சரியங்கள், மோதல்கள், வன்முறைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லாமல் இருந்திருக்கும் இந்த பூமியில். அமைதியும் நிலைத்திருக்கும் அகிலத்தில். ஆகவே முரண்பாடு என்பதே இயற்கையான ஒன்று என்பதை புரிந்து கொள்ள வேண்டும். முரண் முகத்தில் தெரியாது  அகத்தில்  இருக்கும் .அவர் செயலில் தெரியும் .

சிசுவாக பிறந்து வளர்ந்து ஆளாகும் வரை நம்முடைய நடைமுறை , செயல்முறை ஓரளவு ஒத்துப் போவது போல தெரிந்தாலும் மாற்றங்கள் இருக்கத்தான் செய்யும் . அதை நம்மில் பலரும் தாமதமாகத்தான் உணர்கிறார்கள் . ஒவ்வொரு நிலையிலும் மாற்றங்கள் உடலில் நிகழ்வதை போல உள்ளத்திலும் ஏற்படும் . இன்னும் சொல்லப் போனால் ஒருசிலர் காலத்திற்கேற்ப , சூழ்நிலைக்கேற்ப , சுயநல சிந்தனைக்கேற்ப தம்மை மாற்றிக் கொள்வதும் உண்டு . அதைத்தான் பலரும் சந்தர்ப்பவாதம் என்று விமர்சிக்கின்றனர் . அதில் பொதுநல நோக்கம் இருந்தால் தவறில்லை , ஆனால் இன்றைய கால கட்டத்தில் தற்போதுள்ள சூழ்நிலையில் சுயநலப் போக்குதான் அதிகம் காணப்படுகிறது .நாம் கண்கூடாக பல நிகழ்வுகள் மூலமாக பலரின் பேச்சுக்கள் , செயல்பாடுகள் மூலமாக அறிகிறோம் .எவரும் மறுக்க முடியாது .

பயணங்கள் மேற்கொள்வதற்கும் , சிந்தனைகளை செயல்படுத்துவதற்கும் , நாமே நமக்குள் வரைந்து கொண்ட ஒரு வட்டத்தில் இருந்து தடம் மாறாமல் இருப்பதற்கும் , தங்குத் தடையின்றி நடைபோடுவதற்கும் , சீர்மிகு சிந்தனைகள் விளைவதற்கும் நிச்சயம் சீரான கட்டுக்கோப்பான உடல்நிலை இருப்பது என்பது மிக மிக அவசியம்.

அடுத்து குழப்பமில்லா மனமும் சிந்தனை ஓட்டமும் சரியாக ஒழுங்காக குறையின்றி இருந்தால்தான் நமது மனநிலை ஒரே நேர்கோட்டில் பாதிப்பற்ற நிலையில் இயங்கும். ஆகவே மனநிலை என்பது மிகவும் முக்கியமாகிறது அனைவருக்கும் வாழ்க்கையில் எப்போதும் .

இவை அனைத்துக்கும் முத்தாய்ப்பாக நாம் வாழ்கின்ற சூழல் , சுற்றி அமைகின்ற சூழ்நிலை , நம்மை அவ்வப்போது பதப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பும் உருவாகிட சூழ்நிலை மிகவும் அவசியம் . அது சரியாக நிலையாக மாறாத சூழலில் இருந்தால்தான் நாம் செல்லும் பாதையும் தெளிவாக தெரியும் . செய்முறைகள் நன்றாக புலப்படும் . செயல்பாடுகள் திருப்தியாகவும் மற்றவர்களை பாதிக்காத அளவுக்கும் , மேலும் அடுத்தவருக்கும் பயன்படும் வகையிலும் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை . ஆகவே சூழ்நிலை எனபதும் மிகவும் அத்தியாவசியமானது .

எனவே ஒருவரின் வாழ்க்கையில் உடல்நிலை, மனநிலை , சூழ்நிலை ஆகிய இம்மூன்றும் சீராக சிறப்பாக தொய்வின்றி மாறாதிருத்தல் மிகவும் முக்கியம் என்று முன்னோர்கள் கூறி சென்றனர். ஆனால் அவை யாவும் ஒருங்கே நன்கு அமைவது என்பது மிகவும் குறைவே. நாமும் அதற்கேற்ப நம்மை மாற்றிக் கொள்ளல் தேவையான ஒன்றாகிறது .

இன்று நிலவிடும் அமைதியற்ற சூழலுக்கும் , நிரந்தரமிலா வாழ்க்கைக்கும் , நேர்மை குறைந்த மனிதர்கள் நிறைந்துள்ள காலத்திற்கும் , சாதிமத வெறி தலைவிரித்தாடும் இந்த காலகட்டத்திற்கும் , தூயமையற்ற அரசியல் களத்திற்கும் , தரமற்ற முறையில் பேசிடும் தராதரமற்றவர்கள் மிகுந்துள்ள இந்த மண்ணில்  ​உடல்நிலை, மனநிலை​, சூழ்நிலை சீராக சிறப்பாக விளங்கிட வேண்டும் என்பது எனது கருத்து . 

கருத்துகள்