தற்கொலை செய்யும் கனவுகள்! கவிஞர் இரா. இரவி

தற்கொலை செய்யும் கனவுகள்!
கவிஞர் இரா. இரவி
தற்கொலை செய்யும் கனவுகள் பலருக்கும்
தற்செயலாக வருவதுண்டு வியப்பாக இருக்கும்!

உள்ளத்து உணர்வுகளே கனவாக வரும்
ஒருபோதும் தற்கொலை எண்ணம் வேண்டாம்!

உலகில் விலைமதிப்பற்றது நம் உயிர்
ஒருவரும் உலகில் தற்கொலை செய்யாதிருக்க வேண்டும்!

கோடிப்பணம் கொட்டிக் கொடுத்தாலும் யாரும்
கூத்தாடினாலும் மாண்ட உயிர் திரும்பாது!

தற்கொலை எண்ணம் என்பது கோழைத்தனம்
தரணியில் வாழ்வாங்கு வாழ்ந்திடல் வேண்டும்!

தற்கொலை என்பது என்றும் தீர்வாகாது
தன்னம்பிக்கை இருந்தால் தரணியில் வாழலாம்!

துன்பத்திற்காக தற்கொலை செய்வது என்றால்
தரணியில் ஒருவரும் வாழ முடியாது!

இழப்பிற்காக தற்கொலை செய்வது என்றால்
இழப்பின்றி இவ்வுலகில் ஒருவரும் இல்லை!

வாழ்க்கை என்பது போராட்டம் தான் அதனை
வசமாக்கிப் போராடி வென்றிட வேண்டும்!

சோகங்களுக்கு தற்கொலை தீர்வாகி விடாது
சோகம் மறந்து சாதிக்க வேண்டும்!

எதிர்நீச்சல் போன்றது தான் இந்த வாழ்க்கை
எதிலும் போராடி வென்றிட வேண்டும்!

இரவு பகல் மாறி வருவது போலவே
இன்பம், துன்பம் இரண்டும் உண்டு வாழ்வில்!

எனக்கு மட்டும் தான் இப்படி நடக்கின்றது
என்று எல்லோரும் நினைத்து வருகின்றனர்!

உலக மனிதர்கள் யாவருக்கும் துன்பமுண்டு
உலக நியதியை  உணர்ந்திட வேண்டும்!

துன்பமில்லாத மனிதன் உலகில் இல்லை
துன்பத்திற்குத் துவளாத உள்ளம் வேண்டும்!

இயற்கை வழங்கிய இந்த இன்னுயிர்
இயற்கையாகவே பிரிந்திட வேண்டும்!


.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்