ஹைக்கூ உலா! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் விமர்சனம் : திருச்சி சந்தர்!


ஹைக்கூ உலா!
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!

நூல் விமர்சனம் : திருச்சி சந்தர்!
நிறுவனர், முத்தமிழ் அறக்கட்டளை, பதிவு எண் : 969,
10, ராமமூர்த்தி ரோடு, சின்ன சொக்கிகுளம்,
மதுரை-625 002.  தொலைபேசி : 0452 2533 524, செல்லிட பேசி : 94437 43524

வெளியீடு :
வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017. தொலைபேசி : 044 24342810, 24310769 மின்னஞ்சல் :
vanathipathippakam@gmail.com
******
அன்பு நண்ப,
      தங்கள் ‘ஹைக்கூ உலா’ கவிதை நூலுக்கு விமர்சனம் எழுதியுள்ளேன். தவறு – தங்கள் நூலை வைத்து விமர்சன ஆடை நெய்து பார்த்துள்ளேன், ஏதோ என்னால் முடிந்தது.
வாழ்த்துக்களுடன், திருச்சி சந்தர்.
      “ஊழலை ஒழிப்பேனென்பார்
      தேர்தல் வெற்றிக்கு
      ஊழலே வழியென்பார்!”
கொஞ்சம் ஹைக்கூ போல இல்லை!?
*****
‘ஹைக்கூ உலா’ – நூல் விமர்சனம்
      என் மனவானில் உலா வந்த தங்கள் நிலாக் கவிதைகளின் தலைப்புகளுக்கு தலைப்பாகை கட்டி முதல் மரியாதை செய்துள்ளேன். (விமர்சனம் என்ற பெயரில்).  சில கவிதைகளை இன்றைய சமுதாயச் சீர்கேடுகளோடு ஒப்பிட்டு, எதிர்மறையாக எழுத வேண்டியுள்ளது – தவிர்க்க முடியவில்லை.
      “கைரேகையில் இல்லை
      கைகளில் உள்ளது
      எதிர்காலம்
.
தன்னம்பிக்கையூட்டும் கைராசிக் கவிதை.
      “நாளை என்று
      நாளைக் கடத்தாதே
      இன்றே முடி
.
தேர்தலில் நிற்போர் வாக்காளர்களுக்காக கொடுக்க வேண்டியதை, எதிர்ப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல், அன்றே கொடுத்து விடும் ராஜ தந்திரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டோ!
      “மன இருள்
      விரட்டும் விளக்கு
      திருக்குறள்
.
கைவிளக்கை மறந்து விட்டு அண்ணாமலை தீபத்தை அண்ணாந்து பார்த்து ‘அரோகரா பாடுவோர்க்கு ஒரு படிப்பினை.
      “ஓரே வரியில்
      ஒப்பற்ற அறம்
      ஆத்திச் சூடி
.
அரம் பயன்படுத்தத் தெரிந்த அரக்கர்களுக்கு அறம் புரியவில்லையே!
      “இருப்பை உணர்த்தி
      இரையானது பாம்புக்கு
      தவளை
.
இருப்பை இறுமாப்பாகச் சொல்லி வாழும் தவளை போன்றவர்களுக்கு வருமான வரித்துறைப் பாம்பு, படமெடுப்பது தெரியவில்லையே!
      “இனிப்பதில்லை
      பழமானாலும்
      வேப்பம்பழம்
நிலவேம்பு கசாயம் தேடுவோர் கவனத்திற்கு.
      “பூனையில் சைவம் இல்லை
      பசுவில் அசைவம் இல்லை
      இயற்கையின் இயல்பு
.
பூனையை மடியில் கட்டிக்கொண்டு பசுவதை செய்வோருக்கு அறிவுரை.
      “தெரிவதில்லை
      கண்களுக்கு
      சுற்றும் பூமி
.
பூமியின் பேதம் புரியாத விவேகமற்றவர்கள், “எல்லாம் அவன் செயல் எனக் கூறுவோர், விஞ்ஞானம் அறியாத அஞ்ஞானிகள்.
      “குடை விரித்தது
      மழை நின்றதும்
      காளான்
.
நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைக்கும் காளான் கட்சிகள் கவனிக்கட்டும்.
      “பூ, காய், இலை
      முழுவதும் பயன்படும்
      முருங்கை மரம்
.
ஆண்மையான மூவரிகள்.
      “பிரிய மனமில்லை,
      பிரித்
து காற்று
      மரத்திலிருந்து இலை
.
காற்றுக்குத் தெரிந்த உண்மை லைகளுக்குத் தெரியவில்லையே!
      “நடுவதோடு சரி
      பாரமரிப்பதில்லை
      மரம்
.
அடிக்கல் மட்டும் நாட்டும் மரத்துப் போன மனிதர்களுக்கு கவனஈர்ப்பு.
      “கோபம் கொள்வதில்லை
      ஊடல் கொள்வதில்லை
      மலர்கள்
மனிதக் காற்றுக்கு மலர்கள் கூறும் அறிவுரை.
      “உடன் இருந்தாலும்
      ஒட்ட விடுவதில்லை நீரை
      தாமரை
.
ஒட்டாமல் உறவாடும் ஆட்சிக்கு ஒரு ராஜதந்திரக் கவிதை வரிகள்.
      “கணக்கில் அடங்காது
      வண்ணங்களின் எண்ணிக்கை
      மலர்கள்!
.
தினமொரு கட்சி தோற்றத்திற்கு இக்கவிதை ‘மலர்க் கண்காட்சி.
      “தோற்றுப் போனேன்
      பிடிக்க முயன்று
      வண்ணத்துப்பூச்சி
.
தேர்தலில் நிற்கும் சிலர் தெரிந்தே செய்யும் தவறு.
      “வானில் வட்டமிடும்
      பருந்து
      பயத்தில் குஞ்சுகள்
.
மேலே இருப்போரைக் கண்டு அஞ்சும் கீழே இருப்போர்! – யாருக்கு யார்?! ஆழப்படித்தால் அர்த்தம் புரியும்!
      “பணபடுத்தப் படைத்தது
      புண்படுத்தப் பயன்படுகிறது
      மதம்
.
      “மனிதனை
      விலங்காக்கும்
      சாதிவெறி
.
தேர்தலுக்குத் தேவைப்படும் பயங்கர ஆயுதங்கள்.
      “மது மீதான ஆசை
      உயில் பறித்தது
      மனிதனை
.
தற்கொலைக்கு மனிதன் கண்டுபிடித்த மகத்தான மருந்து.
      “கழிவறை சுத்தம் செய்வதை
      குடித்து மகிழும் அவலம்
      குளிர்பானம்
.
மனிதனே ஒரு நடமாடும் கழிப்பறை தானே!
      “பொய் சொன்ன வாய்க்கு
      போசனம் கிடைத்தது
      சோதிடர்
.
பிழைக்கத் தெரிந்தவர்கள்.
      “இப்படை போதுமா
      இன்னும் கொஞ்சம் வேணுமா
      மிரட்சியில் அரசியல்வாதிகள்
.
எதைக் கொண்டு மிரட்டினார்களோ, அதைக் கண்டு மிரள்கிறார்கள்.
      “நம்பலாமா
      சைவம் என்கிறது
      ஓநாய்!
கொன்றால் பாவம், தின்றால் போச்சு!
      “கொள்கைக்காக அன்று
      கோடிகளுக்காக இன்று
      கூட்டணி.
கொள்ளைக்காக வெள்ளையடிக்கக் கூடாதா?
      ‘சரியாகச் சொன்னால்
      சிந்தனைச் சிற்பி பெரியார்
      அரசியல் பற்றி
.
பகுத்தறிவற்ற மனதி மரங்களை வெங்காயத்தோடு ஒப்பிட்டதால் அவர் ‘பெரியார்.
      “காற்றில் பறந்தது
      சுயமரியாதைக் கொள்கை
      அரசியல்
.
சுய புத்தியில்லாத போது, ஒரு மரியாதைக்காகச் சொன்னதை மறக்கக் கூடாதா!
      சண்டையிட்ட பூனைகளை
      ஏமாற்றிய குரங்காய்
      அரசியல்!
குரங்கு கையில் பூமாலையைக் கொடுத்தது யார் தவறு?
      “நினைவிற்கு வந்தனர்
      காமராசரும் கக்கனும்
      ஆடம்பர அரசியல்!
நினைவாவது இருக்கிறதே! (தேர்தல் நேரத்தில் மட்டும்)
      “முகத்தில் கரி பூசி
      ஏமாற்றுவதற்கு முன்னோட்டம்
      விரலில் மை
.
மை வைத்து அன்று மட்டுமாவது வறுமை. போய் விடுமென்று மக்கள் நம்பிக்கை.
      “சட்டம் இயற்றுங்கள்
      தேர்தல் அறிக்கை நிறைவேற்றாவிடில்
      தண்டனை உறுதியென்று
.
தண்டத்திற்கு சட்டங்கள் பல இயற்றினாலும் யார் அதை சட்டை செய்கிறார்கள்!?
      கட்டுப்பாட்டில்
      காம
ம்
      அறம்!
உண்மை தான். கட்டுப்பாட்டை உடைப்பது காம வெறியர்களின் ‘திறம் என்கிறார்களே! இந்த வெறி நாய்களை கண்டதும் சுட ஒரு சட்டம் வேண்டும்.
      பிறரை
      மதித்தல்
      அறம்.
தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை மிதிக்கிறார்களே ... போதாதா?
      ‘உலகம் சுற்றும் வாலிபரே
      உன் நாட்டையும் பாருங்கள்
      உழவர்கள் தற்கொலை!
.
“நான் ஆணையிட்டால் ...
      அது நடந்து விட்டால்...
பாட்டை எழுதியவர், மெட்டமைத்தவர், நடித்தவர், நடித்ததை நடைமுறையில் காட்டியவர், அனைவரும் மறைந்து விட்டார்கள் என்ற மமதையில், பொய்ச்சொல் வீரர்கள்.
      “பழுது கண்டு வாழ்வாரே, வாழ்வார்
      மற்றவரெலாம தொழுதுண்டு பின் செல்பவர்
.
என சவுக்கால் அடிக்க நினைக்கின்றனர். சவுக்கு, கை மாறும் நாள் உண்டு எனும் உண்மை உணராதவர். 
      “நோய்களை உருவாக்கும்
      காரணி
      மனக்கவலை
.
நியாயம் தான்.  ஆனால் பலர் மனக்கவலையை மறப்பதற்காக கவலைப்படுவதாகக் கூறுகிறார்களே!
      “வீணாக்காது வழங்கிடுக
      வேண்டும் விழிப்புணர்வு
      விழிகள் தானம்
.
விழிப்புணர்வு தேவை! உயிரோடு இருக்கும்போதே விழித்துக் கொள்ள!
      உணர்வின் அகரம்
      உயர்வில் சிகரம்
      அம்மா!
உன்னைப் படைத்தது பிரம்மா அல்ல, “அம்மா! அதனால் அவளே உன் தெய்வம். திருவள்ளுவர் கூட,
      அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
      பகவன் முதற்றே உலகு.
என்றார்.  ‘ஆதி பகவன் அம்மா தானே!
      பொறுமை காத்தவள்
      பெருமை சேர்த்தவள்
      அம்மா!
இதனை நன்கு உணர்ந்ததால் தான் கல்லறையில் சத்தியம் செய்கிறார்களே! ஒரு வேளை சில்லரை சேர்க்கவா!?
      இந்த ‘அம்மா வேறு.  காட்சிப் பொருளாகி விட்ட “ஆட்சியம்மா வேர்..
      “மறக்க முடியாத உறவு
      மறக்கக் கூடாத உறவு
      அம்மா!
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           
      அம்மா, சின்னம்மா, யாரை மறக்க முடியாத உறவென்பது யார் மறக்கக் கூடிய உறவு? யார் அறம் ... யார் அரம்.
      குப்பை கூட
      மக்கினால் உரம்
      மனிதன்?
மக்கியிருக்காது என நினைத்து தோண்டிப் பார்த்து சோதனை செய்ய சவால் விடுவோரை என்ன செய்வது, இப்படிச் சொல்பவர் மாக்களே!
      “விட்டுக் கொடுங்கள்
      ஒழியும் வன்முறை
      நிலவும் அமைதி!
இதைப் படித்துத் தான் அமைதி வேண்டி தேர்தல் போட்டியை தவிர்த்து விட்டார்களே!
      “வருடத்தில் ஒரு நாள்
      நினைப்பதல்ல
      காதல்!
“ஒரு நாள் போதுமா? (அமுதசுரபியில் நான் எழுதிய காதல் கதை) வாழ்நாள் முழுவதும் தொடர்கதையாக காதலித்தாலும் ஏற்க மறுப்பவனே என்ன செய்ய?
      “மூச்சு இருக்கும் வரை
      நினைவில் இருக்கும்
      முதல் காதல்!
மற்ற காதல்களுக்கு மூச்சு முட்டுகிறது!
      “கவிதை வழங்கிடும்
      அட்சய பாத்திரம்
      அவள் முகம்!
முகம் பார்த்து எழுதுவதல்ல, அகம் பார்த்து எழுதுவதே காலத்தால் அழிக்க முடியாத கவிதை.
      “பிறந்தது பசி
      பிறந்தது மகிழ்ச்சி
      அவள் வருகை!
மெட்டி ஒலிக்கிறது, கவிதை வார்த்தைகளில்.
      என்னவன்
      ஒரு சந்தேகம், என்னவனைப் பற்றி எப்போது எழுதுவார் ஒரு பெண் கவிஞர்!?!
      உதடுகள் வழி
      ஊட்டச்சத்து
      முத்தம்!
ஆரோக்ய உணவை அடையாளம் காட்டியமைக்கு நன்றி!
      தமிழ்த் திரைப்படங்களில்
      தடை செய்யப்பட்டது 
      முத்தம்!
முத்தமல்ல, வெறும் சத்தம், தணிக்கையாளர்களுக்குப் பொறாமை.
      பெயரால் மட்டுமல்ல
      உண்மையில் பெரியார்
      பெரியார்.
பகுத்தறிவுச் சிந்தனை கரை புரண்டோடும் வற்றாத ஜீவ நதி பெரியார்!
      அடுக்குமொழியால்
      அள்ளியவர் உள்ளங்களை
      அறிஞர் அண்ணா!
தமிழ் இனத்தின் சுவாசக் காற்று.
      பொது உடமையானது
      கல்வி
      காமராசர்!
அரசியல் கரிச்சுரங்கத்தில் கண்டெடுத்த வைரப்பாளம்.  அரசியல் வாழ்க்கையின் தியாக மூர்த்தி.
      முன்னவரும் இல்லை
      பின்னவரும் இல்லை
      கலாமிற்கு இணை!
கலாம் பிறக்கவில்லை, தோன்றினார், மறையவில்லை, மறையோதிக் கொண்டிருக்கிறார்.
      அஞ்சாமையின் குறியீடு நீ
      சமரசம் செய்யாத கொள்கையாளன்
      இன்குலாப்!
நிறைய எழுதவில்லை! நிறைவாக எழுதினார்! அஞ்சாமையுடன் எழுதிய கவிதைகள் தமிழ் மணக்கும் பொன்னேட்டின் பதிவு!
      ஈழத் தமிழருக்காக மனிதாபிமானக்
      கவிதைகள் யாத்தவன்
      இன்குலாப்!
ஈழத்தமிழ் நெஞ்சங்களின் புனிதமான நினைவலைகள் – “நின் மனிதாபிமானக் கவிதைகள்.
      எரிச்சலூட்டிய போதும் நன்றி
      உணவு கிடைக்கின்றது
      விளம்பர இடைவெளி!
பசிப்பிணி போக்கும் விளம்பர இடைவெளியை குறை கூறாதீர். விளம்பர வியாபாரம் தானே. தொல்லைக்காட்சி தயாரிப்பாளர்களின் கருவூலம்.
      நேரம் விழுங்குகிறது
      அன்று தொலைக்காட்சி
      இன்று அலைபேசி!
அலைகள் ஓய்வதில்லை, அலைபேசிப் பேச்சும் ஓய்வதில்லை. காலம் விழுங்கும் கருவிகள் கண்டுபிடித்தவன் நல்ல ‘விலைபேசி.
      தொலைக்காட்சித் தொடர் போல
      தொடரும் முடிவின்றி
      கந்துவட்டி!
ஒரு முறை குடித்தால் மறுமுறை தேடும் மதுவை விடக் கொடியது கந்துவட்டி!
      இழந்து விடுகின்றன
      நல்மதிப்பை
      நீதிமன்றங்கள்!
நீதி தேவதை மட்டுமல்ல. எல்லோருமே கருப்புத் துணியை கண்களில் கட்டிக் கொள்வதால் வந்த வினை! சட்டம் என்றுமே, இருட்டறை தான்.  ஒரு சில வக்கீல்கள் வாதம் விளக்கல்ல – விலக்கு! எது சரி?
      ‘வாழ்கிறது
      கண்ணி யுகத்திலும்
      காந்தீயம்
.
பொருளாதார மாற்றத்திற்கு ஏற்றாற்போல பெரிதாகத் தெரிந்த காந்தீயம் (காந்தியின் உருவம்) சிறிதாக மாற்றப்பட்டுள்ளது.
இவர்கள் கொள்கைப்படி கரன்சி காகிதத்தில் காந்தியத்தை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  கணினி! நீ! என்ன செய்தாலும் காந்தியம் அழிவில்லாதது!
      “தானாக வந்து சேர்ந்தது
      மேய்ச்சலுக்கு சென்ற
      மாடு
.
தேர்தலில் தோல்வியைத் தழுவிய கட்சியாளர் போல.
      “தனித்து இருந்தால் கிழிக்கலாம்
      சேர்ந்து இருந்தால் கிழிக்க முடியாது
      காகிதம்
கரன்சி நோட்டுக்களும் காகிதம் தான். அதனால் தான் கிழிக்க முடியாத்தை கட்டாகக் கேட்கிறார்கள் – வாக்காளர்கள்!
      ‘தூக்கி எரியும்
      யார் தொட்டாலும்
      மின்சாரம்
.
சம்சாரமும் மின்சாரம் தான். பிடிக்காத நேரத்தில் கணவனே தொட்டாலும் ‘ஷாக் அடிப்பாள்.
      “வேகமாகச் செல்ல அல்ல
      நிற்பதற்குத் தான்
      மஞ்சள் விளக்கு
.
ஒருவனுக்கு ஒருத்தி என்பதை மறந்து விடுவோர் நினைப்பு வேறு.
பச்சை : அனுமதி ; மஞ்சள் : முயற்சி, சிகப்பு : சிற்றின்பச் சிக்னல்
      “அழுக்காடை சுமக்க வருத்தமில்லை
      சுத்தாடை சுமக்க கர்வமில்லை
      கழுதை
கற்பூர வாசனை தெரியாதவர்க்கு கழுதை கற்றுத்தரும் பாடம்.
      “கண்களை மூடிய போதும்
      களைப்பின்றிப் பயணம்
      குதிரை!
.
குதிரை போலத்தான் சில அரசியல் கட்சிகள் தோல்விக் கண்களை மூடிக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
      “நேற்று மழை
      இன்று புயல்
      நாளை?
தேர்தலுக்கு முன் மழை, தேர்தல் அன்று புயல், முடிவு அறிவித்த பின் அமைதி.
      நடிகனாக மட்டும்
      பாருங்கள்
      நடிகவேள் வேண்டுகோள்.
நடிகவேள் ஒரு சகலகலாவல்லவர். அவரது குரல் ஒரு வரப்பிரசாதம்; புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது போல், சில நகைச்சுவை நடிகர்கள் குரல்வளையை நெறித்துக் கொண்டு கத்துவதேன்?
      “மனத்தால் செதுக்கினான்
      உளியில் செதுக்குமுன்
      சிற்பி
.
மனப்பால் குடித்து தேர்தலில் நிற்போருக்கு அறிவுரை!
      “ஞானப்பால் வேண்டாம்
      பசும்பால் போதும்
      பசித்து அழும் குழந்தைக்கு
.
பாக்கெட் பாலையே ஞானப்பாலாக மாற்றும் வித்தை கற்றவர்கள பட அதிபதிகள்.  நல்லவேளை இன்னும் கள்ளிப்பாலை மாற்ற முயலவில்லை. பசித்தழும் குழந்தைகளை ஆசீர்வதித்து விடும், காமப்பால் குடிக்கும் இவர்களுக்குப் பசும்பால் சுவை எப்படித் தெரியும்?!
      உதட்டில் ஆன்மீகம்
      கண்களில் காமம்
      சாமியார்!
“சாமி-யார்? எனக் கேட்கும் சாமியார்களுகு “ரஞ்திதமான கவிதை.
      “அன்றும் இன்றும் என்றும்
      தரும் அறிவொளி
      புத்தகங்கள்!
படித்தால் மட்டும் போதுமா? படிப்பினையைக் கடைப்பிடிக்க வேண்டாமா?
      “முதல் மொழி மட்டுமல்ல
      முதன்மை மொழி
      தமிழ்!
      தமிழுக்கு அமுதென்று பேர்
      சாகா வரம் தரும் அருமருந்து அமிழ்தம்!

கருத்துகள்