ஆளுமை வளர்க்க ஆத்திசூடி! நூல் ஆசிரியர் : தம்பியண்ணா (ஆ. விசுவநாதன்) நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !




ஆளுமை வளர்க்க ஆத்திசூடி!
நூல் ஆசிரியர் : தம்பியண்ணா (ஆ. விசுவநாதன்)
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
102, வக்கீல் புதுத் தெரு, மதுரை-625 001.
1,
P.S.G. கோவிந்தசாமி நகர், காமராஜர் சாலை, கோவை-15.
அலைபேசி : 99948 66277, 89402 70901.
பக்கம்:  96 விலை : ரூ. 30 (தனிப்பிரதி)
******
       நூல் ஆசிரியர் திரு. விசுவநாதன், பழகுவதற்கு இனிமையானவர், இன்சொல் மட்டுமே எப்போதுமே பேசுபவர். தன்னம்பிக்கை வாசகர் வட்டத்திற்கு வந்து தன்முன்னேற்றப் பயிற்சி வழங்கியவர். தம்பியண்ணா என்ற புனைப்பெயரில் வடித்துள்ள கையடக்க நூல்.  
இந்நூல்  கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம் வெளியிட்டு மகிழ்ந்தார்கள்.
நூலிலிருந்து சிறு துளிகள் :
‘அன்பு உருவமற்ற உணவு :  உணவு நிறத்தால், மனத்தால், சுவையால், தட்பவெப்பத்தால், அடர்த்தியால் ஐந்து புலன்களுக்கும் மகிழ்ச்சி தருவது போல. நம் அன்பிற்கு உரியவரை பார்ப்பது, அவர் சொல் கேட்பது, அவருடன் பேசுவது, அவரது அருகாமை என எல்லா புலன்களுக்கும் அன்பு மகிழ்ச்சி தருகிறது. உண்ணத்தகாத (கருகிய, அழுகிய, பழைய) உணவு போல அன்பிலும் சந்தேகம், அதீத சார்பு என ஒவ்வாத உரிய பொழுதில்,  உரிய விதத்தில் பகிர்ந்து மகிழ்வோம்! உருவமில்லாதது அன்பு.

உண்மை தான். உருவத்தை உருக்குலையாமல் காப்பதும் அன்பு தான். அன்பின் அவசியத்தை, நேர்மையை நன்கு எடுத்துக்காட்டுடன் விளக்கி உள்ளார்.  இது போன்ற வாழ்க்கைக்கு பயனுள்ள வாழ்வியல் கருத்துக்கள் உள்ளன. நூலினைப் படித்துப் பார்த்து சிந்தித்து நம்மை செம்மைப்படுத்திக் கொள்ள, செதுக்கிக் கொள்ள, சீர்படுத்திக் கொள்ள உதவிடும் நல்ல நூல்.  நூலாசிரியருக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
ஆசையை ஒழுங்கு செய்வோம் : பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சொன்ன வழியில் என்ன? ஏன்? எப்போது? எங்கே? எத்தனை? எப்படி? யார்? என்ற கேள்விகளால் ஆசையை ஒழுங்கு செய்யலாம் என்று எழுதி உள்ளார்.
ஒழுங்கற்ற ஆசை தான் பேராசை. இந்த பேராசை தான் அழிவிற்கு வழிவகுக்கும் என்பதை உணர்ந்து, ஆசையை ஒழுங்கு செய்ய வலியுறுத்தியது சிறப்பு.
இன்றே நன்று :  வாழ்க்கையில் நாளை, நாளை என்று நாளைத் தள்ளாமல், இன்றே முயற்சி செய்வது நல்லது என்று விளக்கி உள்ளார்.
ஈடுபடுமுன் இசைபடுங்கள் : ஒரு செயலை வேண்டா வெறுப்பாக செய்யாமல் ஈடுபாட்டுடன் செய்வது நல்லது என்பதை உணர்த்தி உள்ளார்.
உரிமைக்குள் கடமை : எளிய எடுத்துக்காட்டுகளுடன் கருத்துக்களை விதைத்து உள்ளார்.
ஊக்குவித்தலே உண்மையான உதவி : பணம், பொருள் கொடுத்து உதவ முடியாத நிலையில் உள்ளவர்கள் குறைந்தபட்சம் நல்ல சொல்லால் ஊக்குவித்தலே உதவி என்று உணர்த்தி உள்ளார்.
எளிமை எளிதல்ல : மிகையாகக் காட்டிக் கொள்ளும் ஆற்றலை எளிமையாக இருக்கப் பயன்படுத்துங்கள். எளிமை இனிமை தரும் என்கிறார். 
ஏன் , என்ன? யார்? எப்படி? எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும். இது போன்ற கேள்விகள் எழுப்பினால் கிடைக்கும் விடைகள் தீர்வாக அமையும் என்பதை விளக்கி உள்ளார்.
ஐந்து ஐந்தாக இருக்கட்டும் : பையன் உணவு எடுத்துச் சொல்ல மறந்து விட்டான் 5% தான். இதன் விளைவாக கோபம் கொண்டு மனைவியுடன் சண்டையிடுதல், தாமதமாகுதல் இப்படி தொடர்ச்சியாக 95% பதட்டத்தால் நடந்து விடுகிறது.  ஆகவே எதிலும் பதட்டப்படாமல் நிதானமாக சிந்தித்து தீர்வு காண வேண்டுமென்று வலியுறுத்தி உள்ளார்.
ஒப்பிடுதல் ஒப்புக் கொள்ளுதல் : நாம் ஒவ்வொருவரும் தனித்தன்மை ஆனவர்கள். பிறரோடு ஒப்பிட்டு வருந்த வேண்டாம், கவலை கொள்ள வேண்டாம் என்பதை எளிமையாக எழுதி உள்ளார்.
ஓங்கி செய்க, உணர்ந்து செய்க :  எப்போதும் சரியானதை செய்கிறோம் என உணர்கின்றோமோ, அப்போது தான் ஓங்கிச் செய்யும் மனநிலை வரும். முதலில் உன்னை நம்பு என்கிறார்.
கட்டுப்படாமல் இருக்க கட்டுப்படுத்தாமல் இருப்போம் : “உண்மையான தேவை கட்டுப்படுதலோ, கட்டுப்படுத்தலோ அல்ல, பரஸ்பர பங்களிப்பே.
ஆம், உண்மை தான், நம் மீது யாரும் ஆதிக்கம் செலுத்த நாம் விரும்புவதில்லை. அதுபோலவே நாமும் பிறர் மீது ஆதிக்கம் செலுத்தாமல் இருப்பது சிறப்பு என்பதை நன்கு விளக்கி உள்ளார்.
காலம் கருதுக : காலம் தவறாமை சிறந்த குணம் எனினும் பயனாக்குதல் அதைவிட சிறப்பு. காத்திருக்கும் நேரத்தையும், பயனுள்ளதாக்க முடியும் நல்ல நூல் படிக்கலாம்.
கிண்டலை கிரியாஊக்கி ஆக்குவோம் : கவனமாக பார்த்தால் சில தவிர்க்க வேண்டியது இருக்கும்.  அதை மட்டும் தவிர்த்து விட்டு நம் பணியை ஓங்கிச் செய்வோம். கிண்டலை முழுமையாக புறக்கணித்து விடாமல், அதிலும் நம்மை செம்மைப்படுத்திக் கொள்ள பயன்படும் சொற்கள் இருந்தால் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்கிறார்.
கீழ் எவை தெளிவோம் : தேர்ந்தெடுக்கும் நூல்கள் பொழுது போக முதலில் கீழான ரசனைக்கு உட்பட்டால் நம் தரம் மேலும் தாழும்.  தரமான நல்ல நூல்களை மட்டுமே வாசிக்க வேண்டும். தரமற்ற நூல்களை தள்ளி வையுங்கள் என்று விழிப்புணர்வு விதைத்து உள்ளார்.
குறைகளின் மீது குறைவான கவனம் : உண்மை தான். குறை உள்ள மனிதர்கள் உண்டு.  அந்தக் குறை பற்றியே கவலையோடு வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்காது.  பதச்சோறாக சில மட்டும் மேற்கொள் காட்டி உள்ளேன். இதுபோன்ற பல பயனுள்ள கருத்துக்கள் நூல் முழுவதும் உள்ளன.
வேண்டாததை வேண்டாம் என்போம் : தேவையற்றதை நீக்கியே ராக்கெட் மேலே செல்கிறது.  சுமை குறைய பயணம் இனிமை ஆகிறது.  வீணாக பொருட்களை வாங்க வேண்டாம்.  பயனற்ற உணவைத் தவிர்ப்போம். கடனை நிராகரிப்போம். தேவையற்ற பழக்கங்களுக்கு வேண்டாம் எனச் சொல்ல பழகுவோம்.
      இப்படி வாழ்வில் பயன்படக்கூடிய நல்ல கருத்துக்கள் நூல் முழுவதும் உள்ளன. பாராட்டுக்கள்.

கருத்துகள்