மனசெல்லாம்! ஹைக்கூ கவிதைகள் ! நூல் ஆசிரியர் : கா.ந. கல்யாணசுந்தரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !




மனசெல்லாம்!
ஹைக்கூ கவிதைகள் !
நூல் ஆசிரியர் : கா.ந. கல்யாணசுந்தரம் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

வாசகன் பதிப்பகம், 167, AVR காம்ப்ளக்ஸ்,
அரசு கலைக்கல்லூரி எதிரில், சேலம்-636 007.
பேச : 98429 74697, 96 பக்கங்கள் விலை : ரூ. 80.
******
      பதிப்பாளர் திரு. ஏகலைவன் பதிப்புரையும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மித்ரா அவர்களின் அணிந்துரையும், காவனூர் ந. சீனிவாசன் வாழ்த்துரையும், ஆசிரியர் தன்னுரையும் நூலின் அழகிற்கு மேலும் அழகு சேர்ப்பதாகவும் உரம் சேர்ப்பதாகவும் உள்ளன.  பாராட்டுக்கள்.
      நூல் ஆசிரியர் கவிஞர் கா.ந. கல்யாணசுந்தரம் அவர்கள் 2015ல் வங்கிப்பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டு, இலக்கியத்தில் ஓய்வின்றி உழைத்து வருபவர். முகநூலிலும் வலைப்பூக்களிலும் எழுதி வருபவர்.
      இன்னமும் தேடுகிறது மனது
      மழை வருமுன் மணக்கிற
      மண்வாசம்!
படைப்பாளி உணர்ந்த உணர்வை வாசகனுக்கும் உணர்த்துவது ஹைக்கூ எழுதுவதில் உள்ள யுத்தி.  இந்த ஹைக்கூ படிக்கும் வாசகர்கள் மனதிற்கு ‘மண்வாசம்’ வந்து போகும். இது தான் படைப்பாளியின் வெற்றி.
      விண் காணும் தளிர்கள்
      மண் நோக்கி
      சருகுகள்!
படைப்பாளி உணராதையும், படிப்பாளி உணர்வது நல்ல ஹைக்கூ.  படைப்பாளி தளிர், சருகு பற்றி சிந்தித்தே ஹைக்கூ வடித்துள்ளார். ஆனால் இதில் நாம் தளிராக இளையோரையும், சருகாக முதியோரையும் கூட பொருள் கொள்ள முடியும்.  வாழ்வியல் நிலையாமை உணர்த்துவதாகவும் உணர்ந்திட முடியும்.
      யார் எழுதியது
      அணில் முதுகில்
      ஹைக்கூ!
இந்த ஹைக்கூ படித்தவுடன் பல ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய ஹைக்கூ நினைவிற்கு வந்தது.
      ஹைக்கூ கவிதையின்
      விளம்பரத் தூதுவர்கள்
      அணில்கள்!
ஹைக்கூ கவிதை நூலை முதலில் வெளியிட்ட அமுதபாரதியின் ஹைக்கூ கவிதை ஒன்றை நினைவூட்டும் விதமாக ஒரு ஹைக்கூ உள்ளது.  ஒத்த சிந்தனை படைப்பாளிகளுக்கு வருவதும் இயல்பு தான்.
அமுதபாரதி                              கா.ந. கல்யாணசுந்தரம்
இந்தக் காட்டில்                         புல்லாங்குழலின்
எந்த மூங்கில்                           நினைவலைகள்
புல்லாங்குழல்!                          மூங்கில் காட்டுக்குள்.
ஜப்பானிய ஹைக்கூ கவிதைகள் பெரும்பாலானவை இயற்கையைப் பாடுபவை தான். அந்த வகையில் இயற்கையை பாடுவதை தமிழ்நாட்டுக் கவிஞர்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை மெய்ப்பிக்கும் விதமாக இயற்கையைப் பற்றிய ஹைக்கூ கவிதைகள் நிரம்ப உள்ளன.
      தவளைக்கு இடமளித்து
      குளத்தில் குதித்தன
      தாமரையின் நீர்த்துளிகள்!
இக்கவிதை படிக்கும் வாசகர்களுக்கு தாமரை இலையும், தவளையும் மனக்கண்ணில் காட்சியாக விரியும். இது தான் ஒரு படைப்பாளியின் வெற்றி.
      சிறகுகள் வேண்டாம்
      சிந்தனைகள் போதும்
      இயற்கையுடன் இணைய!
இயற்கையை ரசிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ரசிக்கத் தொடங்கினால் கவலைகள் காணாமல் போகும், இன்பம் ஊற்றாக எடுக்கும்.
      விட்டுக் கொடுக்கும்
      பண்பை வளர்த்தன
      ஒற்றையடிப் பாதைகள்!
உண்மை தான். கிராமத்தில் நிலத்தில் ஒற்றையடிப் பாதையில் நடந்த அனைவரும் உணர்த்திடும் நல்ல ஹைக்கூ. யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து பாதையிலிருந்து விலகினால் தான் மற்றவர் நடக்க முடியும்.  இந்த நல்ல குணம் நடைப்பயணத்திற்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கு உதவும்.  விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை சிறக்கும்.
      மிதியுறும் ரோஜாக்களே
      மன்னியுங்கள்
      இது இறுதி ஊர்வலம்!
உண்மை தான். ஒருவர் மரணத்திற்கு ஓராயிரம் பூக்கள் மரணம் என்பது போல இறுதி ஊர்வலம் செல்லுகையில் ரோஜாக்களை உதிர்த்து விட்டுச் செல்வதும் நடப்பவர்கள் மிதிப்பதும் நடந்து வருகின்றது.  அதற்காக ரோஜாவிடம் மன்னிப்புக் கேட்கும் உயர்ந்த உள்ளமாக கவிஞரின் உள்ளம் உள்ளது.
      சொல்லேர் உழவர்களின்
      அறுவடைத் திருநாள்
      சென்னை புத்தகத் திருவிழா!
தமிழகம் முழுவதும் பெரு நகரங்களில் புத்தகத் திருவிழா நடந்தாலும் சென்னை புத்தகத் திருவிழாவிற்கும், ஈரோடு புத்தகத் திருவிழாவிற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு.  வாசகர்களுக்கும், படைப்பாளிகளுக்கும், பதிப்பகத்தார்களுக்கும் உண்டு.  அதனை உணர்த்திடும் ஹைக்கூ நன்று.
குடமுழுக்கு நடக்கின்ற
கோயிலுக்கு அருகில்
கூரையில்லா பள்ளிக்கூடம்!
ஹைக்கூ கவிதைகளின் மூலம் பகுத்தறிவு சிந்தனைகளையும் விதைத்து உள்ளார், பாராட்டுக்கள்.  கோவில் உண்டியலில் பணம் போடுவதை விட ஓர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் நன்று என்பதை சமுதாயம் உணரும் நன்னாள்.
      காலச்சுவடுகளாய்
      மனதில் என்றும்
      இளமைக் காதல்.
ஆண், பெண் இருபாலருக்கு காதல் தோல்வி நிகழ்வதுண்டு. சூழ்நிலை காரணமாக பெற்றோர் பார்த்த இணையை  மணமுடித்து வாழ்ந்தாலும் மூளையின் ஒரு மூலையில் பழைய காதல் நினைவு என்பது எப்போது இருக்கும்.
      நிரந்தர முகவரியும்
      தற்காலிகமே
      மானுட வாழ்வில்!
யாருக்கும் நிரந்தர முகவரி இல்லை என்ற வாழ்வியல் தத்துவத்தை உணர்த்திடும் ஹைக்கூ நன்று.
      நூலில் இறுதியில் ஹைக்கூ கவிதைகள் சில ஜப்பானிய மொழி, ஆங்கில மொழி, மலையாள மொழியிலும் உள்ளன.  
    

கருத்துகள்