கலைவாணர் வாழ்கிறார் நகைச்சுவைகளில் ! கவிஞர் இரா. இரவி !



கலைவாணர் வாழ்கிறார் நகைச்சுவைகளில் !

கவிஞர் இரா. இரவி !

ஒழுகினசேரியில் பிறந்த கலைவாணர்
உலகப்புகழ் அடைந்தார் நகைச்சுவையில்!

பாடகர் நடிகர் இயக்குனர் என
பல்கலை வித்தகராக வலம் வந்தவர்!

வாழ்ந்த ஆண்டுகள் நாற்பத்தி ஒன்பது தான்
வற்றாத புகழை வையகத்தில் பெற்றவர்!

கர்ணன் என்ற புராணகாலப் பாத்திரத்திற்கு
கண்கண்ட எடுத்துக்காட்டாக விளங்கியவர்!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு வாரி வழங்கிட
மனமாற்றம் தந்து வள்ளல் குருவாகத் திகழ்ந்தவர்!

யாரையும் காயப்படுத்தாத நல்ல நகைச்சுவையை
யாவரும் விரும்பிடும் வண்ணம்  வழங்கியவர்!

எல்லோரையும் சிரிக்க வைத்து மகிழ்ந்தவர்
எல்லோருக்கும் சிரிப்பின் வகையை உணர்த்தியவர்!

பகுத்தறிவுக் கருத்துக்களை பாடலில் விதைத்தவர்
பாமரரும் படித்தவரும் ரசிக்கும்படி நடித்தவர்!

மதுரத்தை மணமுடித்து மதுரமாக வாழ்ந்தவர்
மனம் மறக்காத படங்களைத் தந்தவர்!

வாரி வாரி வழங்கியே வறுமையை அடைந்தவர்
வறுமை வந்தபோதும் செம்மையாக வாழ்ந்தவர்!

வெள்ளியில் இருந் வெற்றிலைப் பெட்டியையும்
வாரி வழங்கி வள்ளலாக வாழ்க்கையில் வென்றவர்!

அறிஞர் அண்ணாவையும் தேசப்பிதா காந்தியடிகளையும்
அற்புத வாழ்வின் வழிகாட்டிகளாக மதித்தவர்!

உடலால் உலகை விட்டு மறைந்த போதும்
உன்னத நகைச்சுவைகளில் வாழ்கிறார் என்றும்!

கருத்துகள்